கார்த்திக் புகழேந்தி

From Tamil Wiki

கார்த்திக் புகழேந்தி(1989) எழுத்தாளர்,பத்திரிகையாளர். நாட்டுப்புறவியல்,நெல்லைத் தமிழ் ஆய்வு, சங்க இலக்கியம், கல்வெட்டு வாசிப்பு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.

பிறப்பு,கல்வி

கார்த்திக் புகழேந்தி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில், 1989 ஆம் ஆண்டு, திரு.முருகன்- திருமதி.பூங்கோதை தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். உயர்நிலைக்கல்வியை திருநெல்வேலி ,கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார்.

தனி வாழ்க்கை

தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணையில் மனைவி சுபா தேவநாதன்  மகன் அகரமுதல்வனுடன்  வசித்துவருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

2011 முதல் தமிழில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவரும் இவரது முதல் சிறுகதை அந்திமழை இதழில் வெளியானது. மலைகள், அகநாழிகை, கதைசொல்லி, ஜன்னல், தி இந்து தமிழ், நூலகம் பேசுகிறது, தினமணி, தினமலர், ஜன்னல், கணையாழி, காக்கைச் சிறகினிலே, தென்றல் (வட அமெரிக்க), சிலம்பு, தட்ஸ் தமிழ், ஹெரிடேஜர் ஆகிய அச்சு மற்றும் இணைய ஊடகங்களில் வெளியாகின. எழுத்தாளர் ஜோ டி குரூஸ் தொகுத்து, ஒன்பது இந்திய மொழிகளில் நேசனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்ட, ‘நவலோகன் புதிய தமிழ்ச் சிறுகதைகள்-2016’ நூலில் இவரது ‘வெட்டும்பெருமாள்’ சிறுகதை தேர்வுசெய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தமிழ் துறையில் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் தேரோட்டம் குறித்த இவரது கட்டுரை இடம்பெற்றுள்ளது.

கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஆசிரியராக வெளியிடும், கதைசொல்லி நாட்டுப்புற சிற்றிதழின் உதவி ஆசிரியராக முதன்முதலில் பத்திரிகைப் பணியில் ஈடுபட்ட இவர், ‘ஜீவா படைப்பகம்’ எனும் பதிப்பகத்தைத் தொடங்கி, 2015ம் ஆண்டு முதல் நூல்களை வெளியிடுகிறார்.

கார்த்திக் புகழேந்தி

இலக்கிய இடம்

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் “இளம் தலைமுறை சிறுகதையின் புதியமுகம்” என இவரது படைப்புகளைப் பாராட்டியுள்ளார்.

நூல்கள்

சிறுகதை

  • வற்றாநதி  (2014) -அகநாழிகை வெளியீடு
  • ஆரஞ்சு முட்டாய் (2015) ஜீவா படைப்பகம்
  • அவளும் நானும் அலையும் கடலும் (2017)ஜீவா படைப்பகம் வெளியீடு
  •    வெஞ்சினம் (2022) ஜீவா படைப்பகம்

கட்டுரை

  • ஊருக்குச் செல்லும் வழி -கட்டுரைத் தொகுப்பு ( 2016 )ஜீவா படைப்பகம் வெளியீடு
  • அங்காளம் -ஆய்வுக் கட்டுரைகள் (2018 )யாவரும் பதிப்பக வெளியீடு
  • நற்திருநாடே (2020) யாவரும் பதிப்பக வெளியீடு

விருதுகள்

புதிய தலைமுறை ஆண்டிதழில் 2017ஆம் ஆண்டின் இளம் படைப்பாளி எனப் பாராட்டை நல்கியுள்ளது.

2021 ஆம் ஆண்டின் முத்தமிழ் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் இலக்கிய விருது வற்றாநதி சிறுகதை நூலுக்காக வழங்கப்பட்டது.

உசாத்துணை

http://writterpugal.blogspot.com/

https://www.hindutamil.in/news/literature/114519-.html

https://www.hindutamil.in/news/blogs/92311-.html

https://yourstory.com/tamil/6b3a32b164-editorial-karthik-the-narrator-39-s-story-/amp