under review

ஆனந்தபோதினி

From Tamil Wiki
Revision as of 15:19, 15 October 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:இதழ்கள் to Category:இதழ்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஆனந்த என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஆனந்த (பெயர் பட்டியல்)

To read the article in English: Anandabodhini. ‎

ஆனந்தபோதினி இலச்சினை
ஆனந்தபோதினி
ஆனந்தபோதினி இதழ்

ஆனந்தபோதினி (1915-1960) தமிழில் வெளிவந்த ஒரு பல்சுவை இதழ். என்.முனிசாமி முதலியாரால் ஆனந்தபோதினி அச்சகத்தில் இருந்து நடத்தப்பட்டது. முதலாண்டு முடிவில் ஐந்தாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டன. இருபத்தைந்தாண்டுக்காலம் வாசக வரவேற்புடன் நிகழ்ந்தது. 1960 வரை வெவ்வேறு வடிவங்களில் வெளியாகி பின்னர் நின்றது (சில நினைவுகளில் ஆநந்தபோதினி என குறிப்பிடப்படுகிறது).

வரலாறு

1915-ல் நாகவேடு முனிசாமி முதலியார் ஆனந்தபோதினி இதழைத் தொடங்கினார். பல்லாயிரம் சந்தாதாரர்களை பெற்று சிறப்பாக இவ்விதழ் நடைபெற்றது. ஆனந்தபோதினி வெளிவந்த காலகட்டத்தில் இதழ்கள் கடைகள் வழியாக வினியோகம் செய்யப்படும் முறை உருவாகவில்லை. சென்னைக்கு வெளியே முழுமையாகவே சந்தா வழியாக பயனர் தொடர்பு உருவாக்கப்பட்டு தபாலில் இதழ் அனுப்பப்பட்டது. ஆனந்தபோதினி 5000 சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது எனப்படுகிறது. இது அக்காலத்தில் பெரிய எண்ணிக்கை. இதழின் விற்பனைக்கு இதில் ஆரணி குப்புசாமி முதலியார் எழுதிய துப்பறியும் தொடர்கதைகள் காரணமாக அமைந்தன.

ஆனந்தவிகடனுக்கு கல்கி ஆசிரியராக வந்தபின் ஆனந்தவிகடன் தொடர்ந்து வெற்றிபெற்று பெரிய இதழாக வளர்ந்தது. கலைமகள் இதழும் வணிக வெற்றி அடைந்தது. ஆனந்தபோதினி படிப்படியாகச் செல்வாக்கிழந்து அவ்வப்போது வெளியாகி 1960-ல் மறைந்தது.

வழக்கு

ஆனந்தபோதினியின் வெற்றியால் கவரப்பட்டு மேலும் இரு இதழ்கள் தொடங்கப்பட்டன. 1925-ல் ஆனந்த விகடன் இதழும் 1926-ல் ஆநந்த குணபோதினியும் தொடங்கப்பட்டன. ஆநந்த குணபோதினியில் எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு ஆசிரியராக இருந்தார். அவருடைய எழுத்துவன்மையால் அது ஆனந்தபோதினியை வெல்லும் போக்கு தெரிந்தது. அவ்விதழ்கள் இரண்டும் ஆனந்தபோதினியின் அதே வடிவில் இருந்தன. ஆகவே நாகவேடு முனிசாமி முதலியார் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் அவருக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தது. ஆநந்தகுணபோதினி தன் அமைப்பை மாற்றிக்கொண்டது. ஆநந்த குணபோதினி அமிர்த குணபோதினி என்று பெயரை மாற்றிக்கொண்டது.

உள்ளடக்கம்

ஆனந்தபோதினி முழுமையாகவே ஓரு பொதுவாசிப்பு இதழாக வெளிவந்தது. அன்றைய பொதுவான பேசுபொருட்களான இந்திய விடுதலை, இந்து மறுமலர்ச்சி, சமூகசீர்திருத்தம் ஆகியவை பேசப்பட்டாலும் அவை பொதுவாசகர்களுக்குரிய எளிய மொழியிலேயே வெளியிடப்பட்டன. அன்றைய இலக்கிய இதழ்களான சக்ரவர்த்தினி, மணிக்கொடி, கலாமோகினி ஆகியவற்றுக்கு மறுதரப்பாக ஆனந்தபோதினி விளங்கியது. அன்றைய நவீன எழுத்தாளர்களான புதுமைப்பித்தன் போன்றவர்கள் ஆனந்தபோதினி இதழில் எழுதவில்லை. ஆரணி குப்புசாமி முதலியாரின் தொடர்கதைகள் ஆனந்தபோதினியின் புகழுக்குக் காரணமாக அமைந்தன.

வரலாற்று இடம்

ஆனந்த போதினியே தமிழின் முதல் வெற்றிகரமான வணிக இதழ் என வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். ஆனந்தபோதினியின் வடிவமும் மொழியும் பின்னர் வந்த ஆனந்தவிகடன் போன்ற இதழ்களால் முன்னெடுக்கப்பட்டன.

ஆவணம்

ஆனந்தபோதினியின் ஜூலை 1920 முதல் டிசம்பர் 1944 வரை உள்ள மாத இதழ்களின் கட்டுரை தொகுப்பு ஓர் இணையப்பக்கமாக தொகுக்கப்பட்டுள்ளது[1]. ஆனந்தபோதினியின் இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:06:39 IST