நாராயண தீட்சிதர்
- தீட்சிதர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தீட்சிதர் (பெயர் பட்டியல்)
- நாராயணன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நாராயணன் (பெயர் பட்டியல்)
நாராயண தீட்சிதர் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ அடியார். நம்மாழ்வார் மீது பெரும் பற்று கொண்டிருந்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
நவதிருப்பதிகளில் ஒன்றான தென்திருப்பேரையில் பிறந்தார். இவரது பிறப்பு இறப்பு வருடங்கள் பற்றிய தெளிவான விவரங்கள் அறியப்படவில்லை
தந்தையிடம் தமிழ்க்கல்வி கற்றார். தென்திருப்பேரைக்கு அருகில் உள்ள திருக்குருகூர் என்றழைக்கப்பட்ட ஆழ்வார் திருநகரியில் கோயில் கொண்டுள்ள நம்மாழ்வார் மீது பக்தி கொண்டிருந்தார். மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சியின் போது திருநெல்வேலியின் முக்கூடல் எனும் பகுதிக்கு வரி வசூலிக்கும் உரிமை கொண்டவராகவும், சேனாபதியாகவும் பணிபுரிந்த வடமலையப்ப பிள்ளையன் ஆதரவை பெற்றிருந்தார். தனது விளைநிலத்துக்கான வரி கட்ட இயலாததால், சிறையிலடைக்கப்பட்டு பின்னர் வடமலையப்ப பிள்ளையன் ஆதரவில் விடுதலை செய்யப்பட்டார்.
இலக்கிய வாழ்க்கை
வடமலையப்ப பிள்ளையன் முன்னிலையில், தென்திருப்பேரையில் கோயில் கொண்டுள்ள மகரநெடுங்குழைக்காதரை பாட்டுடைத் தலைவனாகக்கொண்டு மகரநெடுங்குழைக்காதர் பாமாலை எனும் நூலை அரங்கேற்றினார். இந்நூல் 103 கட்டளைக்கலித்துறைப் பாக்களால் ஆனது. இந்நூல் மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ் என்றும் வழங்கப்படுகிறது.
இவர் இயற்றிய பிற நூல்கள் கிடைக்கவில்லை
உசாத்துணை
- தமிழ்ப் புலவர் வரிசை எட்டாம் புத்தகம், சு அ இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1955
- மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ், பேராசிரியர் சி. ஜெகநாதாசார்யர், முதல் பதிப்பு, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்,1986
- தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பற்றிய சிற்றிலக்கியங்கள், முதல் பதிப்பு, அலங்காரம் R தேவராஜ அய்யங்கார், ஸ்ரீ ஆறுமுக பிரஸ் ஸ்ரீவில்லிபுத்தூர், 1991
- மகர நெடுங்குழைக்காதர் பாமாலை இசைவடிவம்
- தினமணி-பாமாலை பெற்று புகழ்மாலை தந்த பிரான்
- தென்றல் இதழ்-மகர நெடுங்குழைக்காதர்
- நவதிருப்பதிகள்-தென்திருப்பேரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
01-Jan-2023, 18:15:56 IST