standardised

கி.சாவித்ரி அம்மாள்

From Tamil Wiki
Revision as of 15:54, 13 April 2022 by Tamaraikannan (talk | contribs)
கி.சாவித்ரி அம்மாள்

கி.சாவித்ரி அம்மாள் (மே 5, 1898 - அக்டோபர் 16, 1992) தமிழில் எழுதிவந்த எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர்.தொடக்ககால பெண் எழுத்தாளர்களில் ஒருவர். பொதுவாசிப்புக்கான கதைகளை வார இதழ்களில் எழுதினார்.

பிறப்பு, கல்வி

கி.சாவித்ரி அம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தின் புகழ்பெற்ற நீதிபதியும் இந்தியன் வங்கி நிறுவனர்களில் ஒருவருமான வி.கிருஷ்ணசாமி ஐயர்-ன் மகள். இந்திய தேசிய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். மிதவாதியான கோக்கலேயின் ஆதரவாளர் (இவரை கண்டித்து சி.சுப்ரமணிய பாரதியார் எழுதியிருக்கிறார்) கிருஷ்ணசாமி ஐயர் பாலாம்பாளை மணாந்து இரண்டு மகன்களையும் நான்கு மகள்களையும் பெற்றார். கி.பாலசுப்ரமணியன், கி.சந்திரசேகரன்,கி.பாலசுந்தரி அம்மாள், கி.சாவித்ரி அம்மாள், கி.சுப்புலட்சுமி அம்மாள், கி.சரஸ்வதி அம்மாள். இவர்களில் கி.சந்திரசேகரன் சிறுகதை எழுத்தாளர். தன் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். இவர் தங்கை கி.சரஸ்வதி அம்மாள் கதைகளும் நாவல்களும் எழுதியிருக்கிறார். கி. சாவித்ரி அம்மாள்

மே 5, 1898-ல் பிறந்தார். மைலாப்பூர் ராணி விஜயநகரம் பள்ளியில் ஆரம்பக்கல்வியை மட்டுமே அடைந்தார். வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் கற்றார்.

வீடும் வெளியும் மொழியாக்கம் கி.சாவித்ரி அம்மாள்

தனிவாழ்க்கை

தன் பத்து வயதில் 1908 ஜூன் மாதம் சாவித்ரி அம்மாள் தஞ்சை மருத்துவக்குடி சிவராம ஐயரின் மகன் பட்டாபிராம ஐயரை மணந்தார். 1948-ல் பட்டாமிராம ஐயர் மறைந்தார்.. கி.பாலசுப்ரமணிய ஐயர் இளமையிலேயே மனைவியை இழந்தார். சாவித்ரி அம்மாள் அவருடைய குழந்தைகளுக்கு பாதுகாவலராக அவ்வீட்டிலேயே தன் கணவருடன் வாழ்ந்தார்.சாவித்திரி அம்மாளுக்குக் குழந்தைகள் இல்லை.

1958-ல் அவரிடமிருந்த சொத்தில் பெரும்பகுதியை மயிலாப்பூரில் உள்ள சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் பள்ளியை தொடங்க அன்பளிப்பாகக் கொடுத்தார். மேலும் மயிலாப்பூரில் உள்ள வித்யா மந்திர் பள்ளிக்கூடத்திற்கும், லேடி சிவஸ்வாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் அவர் 12 லட்சம் ரூபாயை தொகையை கொடையாக அளித்தார். 1975 முதல் 1986 வரை வித்யா மந்திர் பள்ளியின் நிர்வாகப்பொறுப்பிலும் இருந்தார். லேடி சிவஸ்வாமி பெண்கள் பள்ளியின் நிர்வாகக்குழுவில் 1958 முதல் 1982 வரை இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கி.சாவித்ரி அம்மாள் பதினைந்து வய்தில் எழுதத் தொடங்கினார். ஆங்கில துப்பறியும் நாவல் ஒன்றினை "ஹேமலதை" என்ற பெயரில் மொழி பெயர்த்தார்.பின்னர் இது நூலாக வந்தது. F.W. Bains எழுதிய ’Digit of the moon’ எனும் நூல் அவரால் மொழிபெயர்க்கப்பட்டு ‘காலைப்பிறை’ என்ற தலைப்பில் வெளிவந்தது. கி. வா. ஜகந்நாதன்அதற்கு முன்னுரை எழுதியிருந்தார். 1956-ல் "கல்பகம்" என்ற நாவலை. எழுதினார். கல்கி, கலைமகள் ஆகிய இதழ்களில் கதைகள் வெளி வந்தன.

தன் குடும்பநண்பரான கே.ராமகோடீஸ்வர ராவ் ஆங்கிலத்தில் நடத்திய TRIVENI Quarterly இதழில் கி.சரஸ்வதி அம்மாள் பெரும்பாலும் எழுதினார். ரைட்ஆனரபிள் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரியின் ராமாயண உரைகளை மொழியாக்கம் செய்தார்.

இசை

கி.சரஸ்வதி அம்மாள் இசையில் பயிற்சி கொண்டவர். வீணைக் கலைஞர். 1937-ல் முத்துசாமி தீட்சிதர் பாடல்களை வானொலியில் அறிமுகம் செய்து உரையாற்றியிருக்கிறார்

மறைவு

அக்டோபர் 16, 1992-ல் மறைந்தார்.

நூல்கள்

நாவல்கள்
  • கன்றின் குரல்
  • கல்பகம்
மொழிபெயர்ப்புகள்
  • ஹேமலதை
  • காலைப்பிறை (எஃ.டபிள்யூ.பெயின்ஸ் )
  • ராமாயண உரை (வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி)[1]
பொது
  • வம்புப்பேச்சு[2]
ஆங்கிலம்
  • Kalpakam and Other Stories[3]

உசாத்துணை

இணைப்புகள்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.