under review

சூரியனார்கோவில் நாராயணஸ்வாமி பிள்ளை

From Tamil Wiki
Revision as of 16:24, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Suriyanarkoil Narayanaswamy Pillai. ‎

சூரியனார் கோயில் நாராயணசாமிப் பிள்ளை

சூரியனார்கோவில் நாராயணஸ்வாமி பிள்ளை (டிசம்பர் 10, 1905 - அக்டோபர் 19, 1973) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

பிறப்பு, கல்வி

தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோவில் என்ற ஊரில் (நவக்கிரக தலங்களில் சூரிய வழிபாட்டுத் தலம்) குப்புஸ்வாமி பிள்ளை - பார்வதி அம்மாள் இணையருக்கு டிசம்பர் 10, 1905 அன்று நாராயணஸ்வாமி பிள்ளை பிறந்தார்.

முதலில் பந்தணைநல்லூர் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையிடம் வாய்ப்பாட்டு கற்றார். கீர்த்தனைகள் வரை கற்ற பின்னர் நாராயணஸ்வாமி பிள்ளைக்கு நாதஸ்வர இசையில் அதிக ஈடுபாடு இருப்பதை உணர்ந்த தந்தை தானே பயிற்றுவிக்கத் தொடங்கினார்.

தனிவாழ்க்கை

நாராயணஸ்வாமி பிள்ளைக்கு நான்கு தம்பிகள் - கோவிந்தஸ்வாமி பிள்ளை (நாதஸ்வரம்), ராமுப்பிள்ளை, சரபமூர்த்தி பிள்ளை (நாதஸ்வரம்), ஸ்வாமிநாத பிள்ளை (நாதஸ்வரம்), ஒரு தங்கை தர்மாம்பாள். நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மூத்த மகள் ஸௌந்தரவல்லி அம்மாளை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் - ரேணுகுஜாம்பாள், ஒரு மகன் - பாலசுப்பிரமணியன்.

இசைப்பணி

நாராயணஸ்வாமி பிள்ளை முதலில் திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளையுடன் இணைந்து வாசிக்கத் தொடங்கினார். பத்து ஆண்டுகளுக்குப் பின் தனியே கச்சேரிகளில் வாசிக்கலானார். தன் கடைசித் தம்பியும் தனது மாணவருமாகிய ஸ்வாமிநாத பிள்ளையுடன் இணைந்து பல கச்சேரிகள் செய்திருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் கல்லுப்பட்டியில் ஒரு சமயம் ரெட்டியூர் சுப்பிரமணிய பிள்ளையின் நாயனமும் நாராயணஸ்வாமி பிள்ளையின் நாயனமும் ஏற்பாடாகி இருந்தது. அதிக நேரம் ஆலாபனை செய்ய முடியாத ராகம் எனப்பட்ட ஹுஸேனி ராகத்தில் சுமார் ஒரு மணி நேரம் சுப்பிரமணிய பிள்ளை ஆலாபனை செய்துவிட்டு பின்னர் நாராயணஸ்வாமி பிள்ளையை வாசிக்குமாறு அழைத்தார். இதற்கு மேலும் வாசிக்க முடியும் என்பதுபோல அதே ராகத்தை அடுத்த இரண்டு மணி நேரம் ஆலாபனை செய்தார் நாராயணஸ்வாமி பிள்ளை.

நாராயணஸ்வாமி பிள்ளை சாதராக்கள், தங்கப் பதக்கங்கள் போன்ற பரிசுகளைப் பல சமஸ்தானங்களிலும் ஜமீன்களிலும் பெற்றிருக்கிறார்.

மறைவு

சூரியனார்கோவில் நாராயணஸ்வாமி பிள்ளை அக்டோபர் 19, 1973 அன்று மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Mar-2023, 13:23:13 IST