under review

எஸ். தர்மாம்பாள்

From Tamil Wiki
Revision as of 15:54, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Dharumambal.jpg

எஸ். தர்மாம்பாள்( சரஸ்வதி, கரந்தை எஸ். தர்மாம்பாள், கரந்தை தர்மாம்பாள், அன்னை தர்மாம்பாள், டாக்டர். தர்மாம்பாள்) (ஆகஸ்ட் 23, 1890 – மே 20, 1959) சித்த மருத்துவர், சமூகப் போராளி, பெண்ணுரிமைப் போராளி. தேவதாசி முறை ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டார். மாணவர் மன்றத்தை உருவாக்கினார். முதன்முதலில் தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டை நடத்தினார். நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றில் முக்கிய உறுப்பினர்.

பிறப்பு, கல்வி

தர்மாம்பாள் தஞ்சை மாவட்டம் கருந்தட்டாங்குடியில் வாழ்ந்த சாமிநாதன் செட்டியார், பாப்பம்மாள் என்ற நாச்சியார் அம்மையார் இணையருக்கு ஆகஸ்ட் 23, 1890 அன்று திருவையாறில் பிறந்தார். இயற்பெயர் சரஸ்வதி.பின்னாளில் தர்மாம்பாள் என்று அழைக்கப்பட்டார். தந்தை சாமிநாதன் துணி வியாபாரம் செய்தார். தந்தையின் நண்பர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரனார்.

குழந்தைப் பருவத்திலேயே, தர்மாம்பாள் தன் பெற்றோரை இழந்தார். லட்சுமி என்ற பெண்ணிடம் வளர்ந்தார். பள்ளிக் கல்வி கிடைக்கவில்லை. வேட்கை சீவகாருண்யம் சுப்ரமணியனார், மணி திருநாவுக்கரசு ஆகியோரிடம் தமிழும், பண்டித நாராயணி அம்மையாரிடத்தில் தெலுங்கும் கற்றார். ஆங்கிலம், மலையாள மொழிகளில் ஓரளவிற்குத் தேர்ச்சி பெற்றார்.

தர்மாம்பாள் சிறுவயது முதல் நாடகக் கலை மீது பற்று மிகக் கொண்டிருந்தார்.

தனி வாழ்க்கை

தர்மாம்பாள் அக்காலத்தில் நாடகங்களில் நாயகன் பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த குடியேற்றம் முனிசாமி நாயுடுவை சாதி மறுத்து மணந்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் சிலகாலம் நாகப்பட்டினத்தில் வாழ்ந்தார். பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்து 330, தங்கச்சாலையில் வாழ ஆரம்பித்தார்.

சித்த மருத்துவம்

தர்மாம்பாள் சித்த மருத்துவத்தில் ஆர்வம் கொண்டு தானே முயன்று கற்றும், பயிற்சிகள் மேற்கொண்டும் அதில் தேர்ச்சி பெற்றார். அவர் சித்தமருத்துவராகப் பணியாற்றத் தொடங்கிய 1930-ம் ஆண்டில் அலோபதி மருத்துவர்கள் அதிகம் இருக்கவில்லை. பெரும் பகுதி மக்கள் சித்த மருத்துவர்களையே தேடி நாடி வந்தனர். தங்கச்சாலையில் சித்த மருத்துவராக மக்களுக்கு மருத்துவம் செய்தார் டாக்டர் தர்மாம்பாள். ஏழை மக்களின் துயர் போக்கும் சேவையாகவே தனது மருத்துவத் தொழிலை தர்மாம்பாள் தங்கச் சாலையில் செய்து வந்தார். அதன் காரணமாக மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தார்.

சமூகப் பணிகள்

பெண் விடுதலைக்குக் கல்வி அவசியம் என்ற உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த டாக்டர் தர்மாம்பாள், பல பெண்களுக்குக் கல்வி கற்பதற்கும், கல்லூரிகளில் சேர்ந்திடவும், வேலை வாய்ப்பினைப் பெறுதற்கும் உறுதுணையாக இருந்தார். தமிழ் மாதர் கழகத்தைத் தோற்றுவித்து பெண்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியானார். தமிழ் மாதர் கழகத்தின் தலைவராக, பண்டிதர் நாராயணி அம்மையாரும், செயலாளராக டாக்டர் தர்மாம்பாளும் பொறுப்பேற்று பெண்கல்விக்கான முன்னெடுப்புகளைச் செய்தனர். மூடப்பழக்கங்களுக்கு எதிராகப் பகுத்தறிவுப் பிரச்சாரமும் செய்தார், பல இளம் விதவைகளுக்கு மறுமணம் செய்வித்தார். பல இளையவர்களுக்கு சாதி மறுப்புத் திருமணமும் செய்வித்தார்.

தேவதாசி முறை ஒழிப்பு

தமிழக சட்டமன்றத்தின் முதல்பெண் உறுப்பினர் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி நவம்பர் 5, 1927 அன்று சட்டசபையில் தேவதாசி முறையை ஒழிக்கச் சட்டமுன் வரைவை பேரவையில் தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும் அவரைச் சார்ந்தவர்களும் அதை எதிர்த்தனர். மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார், திருவிக, ஈ.வெ. ராமசாமி ஆகியவர்களுடன் டாக்டர் தர்மாம்பாள் தேவதாசி முறைக்கு எதிராகப் போராடினர். முத்துலட்சுமி ரெட்டியின் மசோதாவிற்கு அவர்கள் ஆதரவு தேடி வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்தனர். தர்மாம்பாளுக்கு மக்களிடமிருந்த செல்வாக்கு அவருடைய போராட்டத்தின் பலமாக இருந்தது. டாக்டர் முத்துலட்சுமியின் மசோதாவிற்குப் பொதுமக்களின் ஆதரவு கிடைத்தது. சட்டமன்றத்தில் மசோதா வெற்றிகரமாக நிறை வேறியது.

பெண்கள் மாநாடு
தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு, குடியரசு இதழ்

தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு நவம்பர் 13, 1938 அன்று சென்னை ஒற்றைவாடை நாடக அரங்கில் திராவிட இயக்கத்தின் முன்னெடுப்பில் நடைபெற்றது. அன்னை தர்மாம்பாள், மலர்முகத்தம்மையார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஆகியோர் மாநாட்டு அமைப்பாளர்கள். மாநாட்டு அலுவலகம் அன்னை தர்மாம்பாள் இல்லத்தில் செயல்பட்டது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மாநாட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் தமிழ்க் கொடியை அன்னை மீனாம்பாள் சிவராஜ் ஏற்றினார்.மறைமலை அடிகளாரின் மகள் திருவரங்க நீலாம்பிகை அம்மையார் மாநாட்டுத் தலைவர். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.ஈ.வெ. ராமசாமியப் 'பெரியார்' என் அழைக்கும் தீர்மானம் அங்கு நிறைவேற்றப்பட்டது.

இந்தி எதிர்ப்புப் போராட்டம்

1938-ல் பள்ளிகளில் இந்திமொழி கற்பது கட்டாயம் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதையொட்டி இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது.

தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு முடிந்த மறுநாள் நவம்பர் 14, 1938 அன்று தர்மாம்பாள் தலைமையில் பெண்கள் இந்தி எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 10,000 க்கும் மேற்பட்ட பெண்களும் பொதுமக்களும் திரண்டு-“இந்தி ஒழிக! தமிழ் வாழ்க” என்ற முழக்கத் துடன் ஊர்வலமாகச் சென்று, சென்னை தியாலாஜிகல் உயர்நிலைப் பள்ளி முன் மறியலில் ஈடுபட்டனர். காவலர்கள் பெண்தலைவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள்: தர்மாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மலர் முகத்தம்மையார், திருவாரூர் பாவலர் பாலசுந்தரத்தின் மனைவி பட்டு அம்மாள், தர்மாம்பாளின் மருமகள் சீதாம்மாள் (நச்சினார்க்கினியன் 3 வயது, மங்கையர்க்கரசி 1 வயது இரு குழந்தைகளுடன்)

தமிழ்ப்பணிகள்

தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர்களுக்கும் தர்மாம்பாள் பலவகைகளில் உதவினார். கருந்தட்டாங்குடியிலிருந்த தன் வீட்டைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

தமிழ் நாடு முழுதும் பள்ளியில் பயிலும் மாணவர்களின் தமிழறிவை வளர்க்கவும், அரசுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், பேச்சாற்றல், எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ளவும் 'சென்னை மாணவர் மன்றம்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் தலைவராகப் பத்தாண்டுகள் பணியாற்றினார் தர்மாம்பாள். பெரும் பொருள் திரட்டி இந்த அமைப்புக்கு சொந்தக் கட்டிடம் ஒன்றை உருவாக்கினார் அவரது இறப்புக்குப்பின் மயிலை சிவமுத்து மாணவர் மன்றத் தலைவரானார். மயிலை சிவமுத்து நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் கட்டிடம் வடசென்னையில் செயல்பட்டு வருகிறது.

1940-ல் தமிழாசிரியர்களுக்கும், மற்ற ஆசிரியர்களுக்கும் ஊதியம் போன்றவற்றில் இருந்த வேறுபாடுகளைக் களைய மாநிலத் தமிழாசிரியர் கழகத்தினர் போராடி வந்தனர். நவம்பர் 7, 1940 அன்று திரு. வி. க தலைமையில் சென்னை முத்தையா உயர்நிலைப் பள்ளியில் தென்னிந்திய தமிழாசிரியர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் ஆங்கில ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு இணையாக தமிழாசிரியர்களுக்கும் ஊதியம் வழங்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை ஆதரித்து தர்மாம்பாள் பேசினார். தமிழாசிரியர்களுக்கு ஆதரவாகப் போராடினார். தமிழாசிரியர் ஊதியத்தை மற்ற ஆசிரியர்கள் ஊதியத்திற்கு இணையாக உயர்த்தாவிட்டால் பெண்கள் எல்லாம் ஒன்று கூடி 'இழவு வாரம்' கொண்டாடுவோம் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதன் பலனாக அன்றைய தமிழக அரசின் கல்வி அமைச்சர் தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார், ஏனைய பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையாகத் தமிழாசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க ஆணையிட்டார்.

தமிழிசை

1940-க்கு முன் தமிழ் நாட்டில் இசை மேடைகளில் தமிழ்ப்பாடல்கள் அதிகம் பாடப்படவில்லை. தமிழில் பாடுதற்கேற்ற இசைப்பாடல்கள் இல்லை என்று இசைவாணர்கள் கருதினர், இப்போக்கை மாற்றவே தமிழிசைச் சங்கம் தோன்றியது. இதன் தோற்றத்தில் செட்டிநாட்டு அரசர் இராஜா சர். அண்ணாமலை செட்டியாருடன் தர்மாம்பாளின் பங்கும் உண்டு. இரண்டாம் தமிழிசை மாநாட்டிற்கு தர்மாம்பாள் வரவேற்பு குழு உறுப்பினராக இருந்து பணியாற்றினார்.

பிற பணிகள்

1948-ல் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் எம்,கே. தியாகராஜ பாகவதர், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோருக்காக தர்மாம்பாள் சென்னையிலுள்ள பலரை அணுகிப் பொருள் திரட்டி வழக்கினை நடத்தி வெற்றியும் பெற்றார்.

விருதுகள், சிறப்புகள்

1951-ல் திரு.வி.க தலைமையில் நடைபெற்ற தர்மாம்பாளின் மணிவிழாவில் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் 'வீரத்தமிழன்னை' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.

இறப்பு

தர்மாம்பாள் 1959-ம் ஆண்டு தனது 69-வது வயதில் காலமானார்.

நினைவேந்தல்
  • கரந்தையில் தமிழக அரசு, இவரது பெயரிலேயே, டாக்டர் தர்மாம்பாள் அரசு பெண்கள் பாலிடெக்னிக் ஒன்றினைத் தொடங்கி நடத்தி வருகின்றது.
  • மருத்துவர் தர்மாம்பாள் நினைவைப் போற்றும் வகையில் விதவைகளின் மறுவாழ்விற்காக டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண உதவித் திட்டம் என்னும் பெயரில் தமிழ்நாடு அரசு உதவி செய்து வருகிறது.
  • சென்னை மாணவர் மன்றம் தர்மாம்பாளை நினைவு கூரும் வகையில் ஒரு நடுநிலைப் பள்ளியை நடத்தி வருகிறது.
  • சென்னை மாநகராட்சி இவரது பெயரில் ஒரு பூங்காவை அமைத்துள்ளது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Jun-2024, 07:57:57 IST