under review

வெண்முகில் நகரம் (வெண்முரசு நாவலின் ஆறாம் பகுதி)

From Tamil Wiki
Revision as of 13:53, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வெண்முகில் நகரம் ('வெண்முரசு’ நாவலின் ஆறாம் பகுதி)

வெண்முகில் நகரம்[1] ('வெண்முரசு’ நாவலின் ஆறாம் பகுதி) 'இந்திரப்பிரஸ்தம்’ உருவாவதற்குரிய பின்புலத்தைக் காட்டுகிறது. இந்திரப்பிரஸ்தம் விண்நிறைந்த முகில்நிரையை ஆளும் இந்திரன் பெயரால் அமைந்த நகரம். திரௌபதி அஸ்தினபுரியின் அரசியென ஆகி, இந்திரப்பிரஸ்தத்தை அமைக்க ஆணையிடுகிறாள். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பகை முற்றுகிறது. பாண்டவர்கள் 'இந்திரபிரஸ்தம்’ என்ற நகரை அமைக்கின்றனர். அந்த நகரைப் பற்றியும் ஸ்ரீ கிருஷ்ணர் உருவாக்கிய துவாரகை நகரைக் குறித்தும்இந்த நூல் விரிவாகக் கூறுகிறது.

பதிப்பு

இணையப் பதிப்பு

'வெண்முரசு’ நாவலின் ஆறாம் பகுதியான 'வெண்முகில் நகரம்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் பிப்ரவரி 2015 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் என வெளியிடப்பட்டு மே 2015-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

கிழக்கு பதிப்பகம் வெண்முகில் நகரை அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்

'வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

'வெண்முகில் நகரம்’ புலோமையின் கதையுடன் தொடங்கி, திரௌபதியின் மங்கள இரவுகள், பாண்டவர்களின் பிற மண நிகழ்வுகள், துரியோதனன் மற்றும் பிற கௌரவர்களின் மண நிகழ்வுகள், பானுமதி, தேவிகை, விஜயை என்ற மூன்று இளவரசிகள்; சாத்யகி, பூரிசிரவஸ் என்ற இரண்டாம் நிலை ஆளுமைகள் என்று பலரையும் அறிமுகப்படுத்தி அவர்களின் தனிப்பட்ட ஆளுமையை விவரிக்கிறது.

'வெண்முகில் நகர’த்தில் இரண்டு முதன்மையான கதைமாந்தர்கள் வழியே நாவல் விரிகிறது- . ஒருவர் சாத்யகி. மற்றொருவர் பூரிசிரவஸ். இளைய யாதவர் மீது வழிபாட்டு உணர்வு கொண்ட சாத்யகி யும், துரியோதனன் மீது சகோதர வாஞ்சை கொண்ட பூரிசிரவஸும் வெண்முகில் நகரம் முழுவதும் வருகிறார்கள். அவர்கள் வழியே பிற கதைமாந்தர்கள் விவரிக்கப்படுகிறார்கள்.

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் மணப்பெண் தேடும்பொருட்டு நிகழும் அனைத்துத் திட்டங்களும் இறுதியில் ஒட்டுமொத்த பாரதவர்ஷத்தையே பங்கிடுவதாகவே மாறிவிடுவதும், அதன் பொருட்டு ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு தரப்பைத் தேர்ந்தெடுப்பதால் அல்லது தேர்ந்தெடுக்க வலியுறுத்தப்படுவதால் ஒட்டுமொத்த பாரதவர்ஷமுமே இரண்டு தரப்பாகிவிடுவதும் நாவலில் விரிவான சித்திரமாகக் காட்டப்படுகிறது.

'வெண்முகில் நகரம்’ என்பது, திரௌபதி உருவாக்க உள்ள 'இந்திரபிரஸ்தம். மேலும் பாரதவர்ஷத்தை ஆள நினைக்கும் ஒவ்வொரு சக்கரவர்த்திக்கும் சக்கரவர்த்தினிக்கும் கனவில் உருக்கொண்டுவிட்ட ஒரு பெருநகரமே அது என்பதையும் நாவல் பேசுகிறது. அன்றைய பரதக் கண்டத்தில் இருந்த அரசர்களின் விழைவுகளும், அரசியல் சூழலும் தத்தம் இடம் தேர்ந்து அணி சேர்வதன் அடிப்படை சித்திரம் பாண்டவர்களின் தலைநகரான இந்திரபிரஸ்தம் உருவாவதன் வழியே இந்த நாவலில் காட்டப்படுகிறது.

கதை மாந்தர்

இளைய யாதவர், சாத்யகி, பூரிசிரவஸ், திரௌபதி ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் பானுமதி, குந்தி, தேவிகை, விஜயை முதலானோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.

பிறவடிவங்கள்

மனோபாரதி விக்னேஷ்வர் வெண்முகில் நகரத்தைத் தம் குரல்பதிவில் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்[2].

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Dec-2022, 09:22:09 IST