under review

மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்

From Tamil Wiki
Revision as of 12:04, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒருபாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் என்ற பெயரிலிருந்து இவர், மதுரை நகரை சேர்ந்தவர் என்பதையும் ஆசிரியர் என்பதையும் உணரலாம். மதுரை நூலாசிரியர் கோடங்கொற்றனார் என சில சுவடிகளில் காணப் பெறுவதால் இவர் தனிப்பாடல் மட்டுமல்லாமல் நூல்களும் இயற்றியுள்ளார் எனக் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் இயற்றிய ஒருபாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 144- வது பாடலாக இடம் பெற்றுள்ளது. மகட்போக்கிய செவிலித்தாய் வருந்திக் கூறுவதான துறையில் இடம் பெற்றுள்ள ஒரே பாடல் இதுதான்.

பாடலால் அறியவரும் செய்திகள்

  • கருங்குவளை மலர் உப்பங்கழிகளில் வளரும்.
  • தலைவனுக்குத் தலைவியைத் திருமணம் செய்விக்க அவளுடைய பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. ஆகவே, தலைவனும் தலைவியும் ஊரைவிட்டுச் சென்றுவிட்டனர்(உடன்போக்கு). அதனால் வருத்தமடைந்த செவிலித்தாய், “ தலைவி எப்பொழுதும் தன் தோழிகளுடன் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தாள். அத்தகையவள், இப்பொழுது தன் பாதங்களை வருத்தும் பாலைநிலத்தில் எங்களைவிட்டுப் பிரிந்து சென்றாளே!” என்று கூறித் தன் வருத்தத்தை வெளிப்படுத்துகிறாள்.
  • அவளின் தோழிமார், கழியிலுள்ள கருங்குவளை மலர்களைப் பறித்து வெண்ணிற அலை வீசும் கடலில் பிரியாமல் கூடி விளையாடுகின்றனர். இங்கே என் மகள் இல்லை. அங்கே மழைமேகம் தவழும் உயர்ந்த மலைக்காட்டில் கல்லுப் பரல்கள் உறுத்த சென்றிருக்கிறாள் என்று தாய் வருந்துகிறாள்.

பாடல் நடை

குறுந்தொகை 144

பாலைத் திணை

துறை: மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது.

கழிய காவி குற்றும் கடல
வெண்டலைப் புணரி யாடியும் நன்றே
பிரிவி லாய முரியதொன் றயர
இவ்வழிப் படுதலும் ஒல்லாள் அவ்வழிப்
பரல்பாழ் படுப்பச் சென்றனள் மாதோ
சென்மழை தவழும் சென்னி
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Nov-2023, 10:16:54 IST