second review completed

இருபா இருபது (அருணந்தி சிவாசாரியார்)

From Tamil Wiki
Revision as of 22:39, 1 June 2024 by Jayashree (talk | contribs)

இருபா இருபது(பொ.யு. பதினொன்றாம் நூற்றாண்டு) சைவ சித்தாந்த மெய்கண்ட சாத்திர நூல்களில் ஒன்று. அருணந்தி சிவாசாரியார் இயற்றியது. வினா-விடையாக அமைந்தது.

ஆசிரியர்

இருபா இருபது நூலின் ஆசிரியர் அருணந்தி சிவாசாரியார். ‘சகலாகம பண்டிதர்’ என அழைக்கப்பட்டார். திருத்துறையூரில் ஆதிசைவ அந்தணக் குலத்தில் பிறந்தவர். அச்சுத களப்பாளரின் வம்சாவளிக்கு குலகுருவாக இருந்தவர்.

மெய்கண்டாரின் தலைமை மாணாக்கர்.

நூல் அமைப்பு

சைவ சித்தாந்த உண்மைகளைக் கூறும் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாகிய இருபா இருபது 20 பாடல்களைக் கொண்ட சிறு நூல். பத்து வெண்பாக்களும், பத்து ஆசிரியப்பாக்களும் மாறி மாறி வரும்படி அமையும் இருபா இருபஃது என்னும் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்தது.

அருணந்தியாரின் கேள்விகளுக்கு அவர் குருவான மெய்கண்டார் பதிலளிப்பது போன்ற ஒரு வினா விடை நூலாக அமைந்துள்ளது. இது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களினதும் இயல்புகளை விளக்குகிறது. இப்பாக்கள்‌ பாசத்தின்(பற்று) தன்மைகளை பாச உண்மை, பாச இலக்கணம்‌, பாச நீக்க சாதனம்‌, பாச நீக்கப்‌ பேறு என்னும்‌ நான்கு வகைகளில் பகுத்து வினாவிடை வடிவில்‌ கூறுகின்றன. முதல் இரு பாடல்கள் குருவணக்கமாக அமைகின்றன.

ஆணவத்தின் எட்டு இயல்புகளும், மாயையின் ஏழு இயல்புகளும், கர்மத்தின் ஆறு இயல்புகளும் இந்நூலில் கூறப்பட்டுள. சைவத் திருமுறைகளில் இடம்பெறும் "கண்பாரார் கண்ணுதலாய் காட்டக்காலே” ,“உன்னிலுண்ணும் ஊண்ணாவிடில் விட்டிடும்” போன்றவற்றுக்கு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. திருநிலனாய்த் தீயாகி” என்று தொடங்கும் அப்பர், திருத்தாண்டகத்திற்கும் “ஆட்பாலவர்க்கருளும் ஆதிமாண்பும்” என்னும் திருஞானசம்பந்தர் பாடலுக்கும் பொருள் விளக்கம் இடம் பெறுகிறது.

சில வினாக்கள்
மூன்றாம் வினா

ஒரு நிலையிலே அறிந்தும்‌, ஓரு நிலையிலே அறியாமலும்‌ இப்படி இரண்டு விதமும்‌ அடியேன்‌ கூடிவருகையினால்‌, அடியேனை அறிவு என்று சொல்லுவேனோ அல்லது அறியாதவன்‌ என்று சொல்லுவேனோ இவ்விரண்டில்‌ யாதென்று விண்ணப்பம்‌ செய்வேன்‌?

நான்காம் வினா

மலங்கள்‌ அஞ்ஞான வண்ணத்தன; ஆகையாலே இறைவன்‌ முன்னர்‌ இவை நில்லா, அடிமையாகிய ஆன்மாவுக்கு சுதந்திரமாகப் பார்க்கும்‌ அறிவு இல்லை. ஆதலால்‌ ஆன்மா இருள்‌ எனப்படும்‌ அஞ்ஞானத்தை எப்படிக்‌ காணமுடியும்‌?

உரைகள்

இந்த நூலுக்கு இரண்டு பழைய உரைநூல்கள் உள்ளன.

பாடல் நடை

வெண்பா (வினா)

அறிவு அறியாமை இரண்டும் அடியேன் 
செறிதலால் மெய்கண்ட தேவே -- அறிவோ 
அறியேனோ யாது என்று கூறுகேன் ஆய்ந்து 
குறிமாறு கொள்ளாமல் கூறு. (3)

ஆசிரியப்பா (விடை)

கூறிய மூன்று மலத்தின் குணக்குறி 
வேறு கிளக்கில் விகற்பம் கற்பம் 
குரோதம் மோகம் கொலை அஞர் மதம் நகை 
விராய் எண் குணனும் ஆணவம் என விளம்பினை 
அஞ்ஞானம் பொய் அயர்வே மோகம் 
பைசால சூனியம் மாச்சரியம் பயம் 
ஆயேழ் குணனும் மாயைக்கு அருளினை 
இருத்தலும் கிடத்தலும் இருவினை இயற்றலும் 
விடுத்தலும் பரநிந்தை மேவல் என்று எடுத்த
அறுவகைக் குணனும் கருமத்து அருளினை
 ஆங்கு அவைதாமும் நீங்காது நின்று
தம்வழிச் செலுத்தித் தானே தானாய் 
என்வழி என்பது ஒன்று இன்றாம், மன்ன! 
ஊரும் பேரும் உருவுங் கொண்டு என்
 ஊரும் பேரும் உருவுங் கெடுத்த 
பெண்ணை சூழ்ந்த வெண்ணெயம் பதியில்
 சைவ சிகாமணி! மெய்யர் மெய்ய! 
மும்மலம் சடம் என மொழிந்தனை அம்ம
 மாறுகோள் கூறல் போலும் தேறும்
 சடம்செயல் அதனைச் சார்ந்திடும் எனினே
 கடம்படம் அதனுள் கண்டிலம் விடப்படும் 
ஊன்றிரள் போன்றது ஆயில் தோன்றி 
அணைந்து ஆங்கு அகறல் வேண்டும் குணங்களும் 
பன்மை இன்று ஆகும் எம்மைவந்து அணையத் 
தானோ மாட்டாது யானோ செய்கிலன் 
நீயோ செய்யாய் நின்மலன் ஆயிட்டு 
இயல்பு எனில் போகாது என்றும் மயல்கெடப் 
பந்தம் வந்தவாறு இங்கு 
அந்தம் ஆதி இல்லாய் ! அருளே. 

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.