under review

பி.என். பரசுராமன்

From Tamil Wiki
Revision as of 21:48, 9 March 2024 by ASN (talk | contribs) (Page Created: Para Added: Images Added: Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பி.என். பரசுராமன்

பி.என். பரசுராமன் (பிறப்பு: மே 21, 1952) எழுத்தாளர், சொற்பொழிவாளர், பக்திப் பாடலாசிரியர். லிப்டன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றினார். ஆன்மிகக் கட்டுரைகளை, சிறுகதைகளை, நூல்களை எழுதினார் பல நூற்றுக்கணக்கான ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சொல்லின் செல்வர் உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

பி.என். பரசுராமன், மே 21, 1952 அன்று, திருச்சியில், நடராஜ சர்மா - தைலாம்பாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை திருச்சியில் படித்தார். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் கற்றார். பைபிள், குரான் நூல்களைக் கற்றார்.

ஆன்மிகச் சொற்பொழிவாளர், எழுத்தாளர் பி.என். பரசுராமன்

தனி வாழ்க்கை

பி.என். பரசுராமன், 1971 முதல் லிப்டன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றினார். 1994-ல் பணியிலிருந்து விலகி ஆன்மிக, சமய, இலக்கியப் பணிகளில் முழு நேரமாக ஈடுபட்டார்.

பி.என். பரசுராமன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

பி.என். பரசுராமன், ’அமரபாரதி’ என்ற இதழையும், சம்ஸ்கிருதப் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்த தனது தந்தையால் இலக்கிய, ஆன்மிக ஆர்வம் பெற்றார். இதழ்களில் பல ஆன்மிகக் கட்டுரைகளை எழுதினார். 120 ராமாயண நூல்கள் பற்றி ஆய்வு செய்தார். அது குறித்து ஆன்மிக இதழ்களில் எழுதினார்.

சக்தி விகடன், தினமணி, தினமலர் உள்ளிட்ட பல இதழ்களில் ஆன்மிகக் கட்டுரைகளை, சிறுகதைகளை எழுதினார். பல மகான்களின், ஞானிகளின், சித்தர்களின் வாழ்க்கை வரலாற்றை நூல்களாக எழுதினார். பி.என். பரசுராமன், முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அவற்றில் பலவற்றை அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டது.

சொற்பொழிவு

பி.என். பரசுராமன், இளம் வயது முதலே தன்னை ஒரு பேச்சாளராக வளர்த்துக் கொண்டார். ஆலய நிகழ்வுகளில், உற்சவங்களில் திருவிழாக்களில் திருப்புகழ், கந்த புராணம் தொடங்கி ராமாயணம், மகாபாரதம், சித்தர்கள், உபநிஷத்துக்கள், வேதங்கள், கீதை எனப் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார். காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி, திருமுருக கிருபானந்த வாரியார் ஆகியோரது அன்பையும், பாராட்டுதல்களையும் பெற்றார். சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கனகாபிஷேக, நூற்றாண்டு விழாவில் சந்திரசேகரேந்திரரின் வாழ்க்கை பற்றிச் சொற்பொழிவாற்றினார்.

தமிழகமெங்கும் சென்று ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சிறார்களுக்காக பல பள்ளிகளில் ஆன்மிக, பக்தி இலக்கியச் சொற்பொழிவாற்றினார்.

பி.என். பரசுராமன் புத்தகங்கள்

ஊடகம்

பி.என். பரசுராமன் சென்னை வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பல ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். யூ ட்யூப் வலைத் தளத்தில் ஆன்மிகம் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட காணொளிகளை அளித்தார்.

நூலகம்

பி.என். பரசுராமன், தனது இல்லத்தில், அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்மீக நூல்களைக் கொண்ட நூலகத்தை பரமாரித்து வருகிறார்.

கிருபானந்த வாரியாருடன் பி.என். பரசுராமன்

விருதுகள்

  • காஞ்சி சங்கரமடம் அளித்த சொல்லின் செல்வர் விருது.
  • பல்வேறு ஆன்மிக அமைப்புகள் வழங்கிய பல விருதுகள்

மதிப்பீடு

பி.என். பரசுராமன் கிருபானந்த வாரியார், புலவர் கீரன் வரிசையில் சமய, இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாளராகவும் ஆன்மிக எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

  • அருணகிரிநாதரின் ராமாயணம்
  • அஷ்டாவக்ரர் உபதேசங்கள்
  • மஹா ஸ்வாமிகள் அருளிய ஆதிசங்கரர் வரலாறு
  • பீஷ்மர் சொன்ன தத்துவக் கதைகள்
  • சித்திரகுப்தன் கதைகள்
  • ஊருக்கு நல்லது சொல்வேன்
  • மனோபோதை
  • சித்தர்கள் சரித்திரம்
  • பர்த்ருஹரியின் நீதி சதகம்
  • சனத்குமாரரின் உபதேசங்கள்
  • சித்தர்கள் சரித்திரம்
  • பர்த்ருஹரியின் வைராக்கிய சதகம்
  • விபூதி ருத்ராட்ச மகிமை
  • விதுர நீதி
  • யட்ச பிரச்னம் - பிரச்னோத்ர ரத்ன மாலிகா
  • கண்ணதாசன் பாடல்களில் கடவுள் தத்துவங்கள்
  • அர்த்தமுள்ள கண்ணதாசன் பாடல்கள்
  • அம்மன் சன்னதி அற்புதங்கள்
  • வாரியார் சொற்பொழிவில் கேட்டவை - 1
  • வாரியார் சொற்பொழிவில் கேட்டவை - 2
  • துணுக் துணுக்குகள்
  • நல்லதங்காள்
  • பண்டிகைகளும் விரதங்களும்
  • மகான்களின் நடந்த கதைகள்
  • தாமிரபரணி மகிமை
  • வியாசர் கூறிய நீதிக் கதைகள்
  • சங்கீத மகான்கள்
  • சதாசிவ பிரம்மேந்திரர் வரலாறும் உபதேசங்களும்
  • ஏகாதசியும் சிவராத்திரியும்
  • கம்பராமாயணத்தில் கதாபத்திரங்கள்
  • ஸ்ருங்கார சதகம்
  • நீதிக் கதைகள் - இரண்டு பாகங்கள்
  • ஞானப்பொக்கிஷம்
  • சும்மாவா சொன்னாங்க பெரியவங்க

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.