standardised

மு. இராகவையங்கார்

From Tamil Wiki
Revision as of 23:49, 11 March 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)
மு. இராகவையங்கார்
மு. இராகவையங்கார்
மு.ராகவையங்கார்

மு. இராகவையங்கார் (முத்துசுவாமி இராகவையங்கார்) (ஜூலை 26, 1878 – பிப்ரவரி 2, 1960) தமிழ் வரலாற்றாய்வாளர், தமிழறிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், பதிப்பாசிரியர், இதழாசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் பல ஆய்வுகளைச் செய்து ஆய்வுத்துறை முன்னோடி என்று தமிழறிஞர்களால் அழைக்கப்படுபவர்.

பிறப்பு, கல்வி

இராமநாதபுரத்தில் சேதுபதி அவைப்புலவராக விளங்கிய சதாவதானம் முத்துசுவாமி ஐயங்காருக்கு ஜூலை 26, 1878 அன்று இராகவையங்கார் பிறந்தார். இராகவையங்காரின் தந்தை கன்னடம் அறிந்த தமிழறிஞர். மரபுவழிப் புலவர்; தசாவதானம் செய்தவர். இவர் எழுதிய நூல்களில் மணவாள மாமுனிகள் நூற்றந்தாதியை வைணவர்கள் முக்கியமாகக் கொள்கின்றனர். பாண்டித்துரை தேவரின் ஆசிரியராக இருந்த முத்துசாமி அய்யங்கார் தன் மகனுக்கு 16 ஆண்டுகள் தமிழ் கற்பித்தார். இவர் 1894-ல் காலமானார். வி.கனகசபைப் பிள்ளையிடம் தமிழை சிறுவயதில் கற்ற இராகவையங்காருக்கு உதவியாக இருந்தவர் அவரது மாமனான ரா. ராகவையங்கார். பின்னர் சேதுபதி ஆதரவில் வாழ்ந்தார். பாண்டித்துரைத் தேவர், நாராயணையங்கார் ஆகியோர் இவருடன் கல்விபயின்றவர்கள். ’செந்தமிழ் வளர்த்த தேவர்கள்’[1] என்ற பெயரில் பொன்னுச்சாமித் தேவர், பாண்டித்துரைத் தேவர் ஆகியோரின் வாழ்க்கையை எழுதியிருக்கிறார்.

தனிவாழ்க்கை

இராகவையங்கார் பதினெட்டு வயதில் அவைப்புலவர் பட்டம் பெற்றார். 1901-ல் பாண்டித்துரைத் தேவரால் மதுரைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் ஓர் உறுப்பான செந்தமிழ்க் கல்லூரியில் 1901-1912 வரை மு. இராகவையங்கார் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1944-ஆம் ஆண்டில் சென்னை லயோலாக் கல்லூரியில் கீழ்த்திசை மொழியியல் இளவர் (பி. ஓ. எல்.) பட்ட வகுப்பு தொடங்கப்பட்ட பொழுது, மு. இராகவையங்கார் அத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

தன் 76 வயதில் மனைவி, மக்கள், மருமகனை இழந்தார். அதனால் பெரும் மனக்கொந்தளிப்புக்கு ஆளாகி ‘கையறுநிலை’ என்னும் நூலை எழுதினார். இறுதி காலத்தில் தன் இரண்டாவது மகனின் வீட்டில் மானாமதுரையில் வசித்தார்.

கல்வித்துறை வாழ்க்கை

மு. இராகவையங்கார் இளம் வயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். இதனால் 1896-ஆம் ஆண்டில் தம்முடைய பதினெட்டாம் வயதிலேயே பாண்டித்துரைத் தேவரின் அவைக்களப் புலவர் ஆனார்.

செந்தமிழ்க் கல்லூரி ஆசிரியப் பணியையும் செந்தமிழ் இதழின் ஆசிரியப் பணியையும் 1912-ஆம் ஆண்டில் இறுதியில் துறந்த மு. இராகவையங்கார் 1913-1939 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரகராதிக் குழுவில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். 1936-1938 வரை சென்னை லயோலா கல்லாரி வருகைப் பேராசிரியர், 1944-1951 வரை திருவிதாங்கூர் பல்கலைக்கழகப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கம்பராமாயணம் பதிப்புக்குழு உறுப்பினர், தமிழ் கல்விச் சங்கத்தின் உறுப்பினர் என பல பதவிகளை வகித்தார்.

இதழியல் வாழ்க்கை

மதுரை தமிழ்ச் சங்க ஆசிரியர், செந்தமிழ் பத்திரிகையின் ஆசிரியர். 1907-1921 வரை சென்னைப் பலகலைக்கழகத்தின் லெக்சிகன் பதிப்பில் உதவியாசிரியர், கலைமகள் பத்திரிகை ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழர்நேசன் பத்திரிகையின் கௌரவ ஆசிரியர் எனப் பல பொறுப்புகளிலும் பணிகளிலும் இருந்தவர்.பின்னாளில் ஸ்ரீவாணி விலாசினி, கலைக்கதிர், அமுதசுரபி ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்..

இலக்கியவாழ்க்கை

இராகவையங்கார் செந்தமிழ் இதழில் ஆசிரியராக இருந்தபோதும் பின்னர் கல்வித்துறை பணிகளின் போதும் பழந்தமிழ் ஆய்வுகளையும் கல்வெட்டாய்வுகளையும் செய்து வந்தார். 12 ஆய்வு நூல்களை எழுதினார். தன் எண்பதாவது ஆண்டு நிறைவின் போது வினைத்திரிபு விளக்கம் என்னும் நூலை எழுதி வெளியிட்டார்.

ஆய்வுகள்

சென்னைப் பல்கலைக் கழகம் ரெவரெண்ட் ஜே.எஸ். சாண்ட்லர் தலைமையில் தமிழ்ப் பேரகராதி தயாரிப்பில் 1913 முதல் தமிழ் உதவி ஆசிரியராக இருந்தார். கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் தமிழ்ப் பேரகராதி தொகுப்புக் குழுவில் பணியாற்றியுள்ளார். சாண்ட்லர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அகராதி பின்னர் தலைமையேற்ற எஸ். வையாபுரிப் பிள்ளை காலத்தில் 1936-ல்தான் முடிந்தது.

இராகவையங்கார் எழுதிய வேளிர் வரலாறு, சேரன் செங்குட்டுவன்[2] சாசனத் தமிழ்க் கவி சரிதம், ஆழ்வார் காலநிலை[3] போன்ற வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. கேரளத்தில் இராகவையங்கார் வாழ்ந்தபோது பேசிய பேச்சுகள் Some Aspects of Keralas Tamil Literature என ஆங்கிலத்திலும் வந்திருக்கிறது. தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி, சாசனத் தமிழ் கவி சரிதம், சேர வேந்தர் செய்யுள் கோவை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் பெயர், வினைகள் எவ்வாறாக அமைந்துள்ளன என்பதை இவர் எழுதியுள்ள வினைத்திரிபு விளக்கம் விவரிக்கிறது.

கட்டுரைகள்

1903-ல் இவர் எழுதிய ஆரம்பக்காலக் கட்டுரைகளில் செந்தமிழ் இதழில் வெளிவந்த 'வேளிர் வரலாறு' குறிப்பிடத்தகுந்தது. இந்தக் கட்டுரை வெளிவந்த ஆண்டிலே கொழும்பு வி.ஜே. தம்பிப் பிள்ளை என்பவர் Royal Asiatic Society Journal இதழில் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இது அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் பாடத்திட்டத்தில் இருந்தது. சங்க கால வள்ளல்களான வேள் பரம்பரையினரைப் பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரையை ராமநாதன் செட்டியாரின் முகவுரையுடன் மதுரை தமிழச் சங்கம் வெளியிட்டது. வேளிர்கள் என்பவர்கள் தனி அரசகுடியினர் என இதில் நிறுவுகிறார்.

இவருடைய நூல்களில் முக்கியமானவையாகச் சாசனத் தமிழ்க்கவி சரிதம், ஆராய்ச்சிக் கட்டுரைகள், சேரன் செங்குட்டுவன், ஆழ்வார் கால நிலை, தெய்வப் புலவ கம்பர் ஆகிவை கூறப்படுகின்றன. நாட்டாரியலிலும் ஆர்வம் காட்டினார். மகாபாரதக் கதாபாத்திரங்களின் அடிப்படையில் மதுரையை மையமாகக் கொண்டு உருவான பெரிய எழுத்து அம்மானைக் கதைகளுக்கும் தென்பாண்டித் தமிழ்ச் சமூகத்திற்கும் உள்ள தொடர்பு, அல்லிக்கும் அர்ஜுனனுக்கும் உள்ள உறவு பாண்டியர் தொடர்பானது என இராகவையங்கார் ஆய்வுக்குறிப்புகள் எழுதியிருக்கிறார்.

கல்வெட்டாய்வு

இராகவையங்கார் தொல்பொருளாராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த டி. ஏ. கோபிநாதராவுடன் தமிழ் நாட்டின் கோயில்களிலுள்ள கல்வெட்டுகள் பற்றி ஆராய்ந்தார். இராகவையங்கார் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1929-ல் பேசிய சிறப்பு உரையை பின்னர் விரிவாகச் செப்பனிட்டு சாஸனத் தமிழ்க்கவி சரிதம் என்னும் பெயரில் வெளியிட்டார். தொல்பொருள்துறை வெளியிட்ட தமிழகக் கேரளக் கல்வெட்டுப் பகுதிகளைப் படித்து அவற்றில் உள்ள தமிழ்ப் பாடல்களைத் தொகுத்தும், தமிழ்ப் புலவர்களைப் பற்றிய செய்திகளைச் சேகரித்தும் கடின உழைப்பில் உருவானது இந்த நூல். கல்வெட்டுக்களைப் பதிப்பித்தவர்களுக்கு இவற்றில் இலக்கியத் தன்மை உண்டு, அவற்றிலும் பாடல்கள் உண்டு என்று முதலில் கூறியவர் மு. இராகவையங்கார். 84 புலவர்களைப் பற்றிய செய்திகளை இவர் கல்வெட்டுகளிலிருந்தே திரட்டி இருக்கிறார். இவர்களின் பாடல்களையும், சில புலவர்களின் பெயர்களையும் தொகுத்தார்.

பதிப்பாசிரியர்

அண்ணாமலை பல்கலைக் கழகம் கம்பராமயாணத்தை உரையோடு பதிப்பிக்க விழைந்தது. எனவே 1951-ஆம் ஆண்டில் பதிப்பாசிரியர் குழுவை உருவாக்கியது. அக்குழுவில் மு. இராகவையங்கார் இடம்பெற்றார். கம்பராமாயணத்தின் சிலபகுதிகளைப் பாடபேத ஆராய்ச்சிக் குறிப்பும் விளக்கவுரையும் எழுதி பதிப்பித்தார். நரி விருத்தம் (அரும்பதவுரையுடன்), திருக்கலம்பகம், விக்கிரம சோழன் உலா, கேசவப் பெருமாள் இரட்டைமணிமாலை, நிகண்டகராதி முதலான பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

செந்தமிழ்

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் அமைப்பின் உறுப்பான செந்தமிழ் இதழில் 1901-ஆம் ஆண்டு முதல் 1904-ஆம் ஆண்டு வரை உதவியாசிரியராக இருந்தார். பின்னர் 1904-ஆம் ஆண்டில் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். 1912-ஆம் ஆண்டு வரை அப்பணியை ஆற்றினார். இவருக்கு முன்னர் 1901-1903-ஆம் ஆண்டுகளில் மு. இராகவையங்காரின் தாய்மாமனின் மகன் இரா. இராகவையங்கார் அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார். இவருக்குப் பின்னர் 1912 முதல் 1947 வரை அ. நாராயணையங்கார் அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார்

விருதுகள்

  • 1938-ல் இவரின் அறுபது ஆண்டு நிறைவு விழா இராமநாதபுரத்தில் நடந்தபோது உ.வே.சா.வின் வாழ்த்துரை வழ்ங்கினார்
  • 1939-ல் இவருக்கு ராவ்சாகிப் விருது கிடைத்தபோது நடந்த பாராட்டுரையில் இராகவையங்காரின் ஏற்புரையும் அந்தக் அறிஞர்களுக்கிடையே பெரிதாகப் பேசப்பட்டது.
  • தமிழ்ப் பேரகராதிக் குழுவில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றியதைப் பாராட்டி அப்பொழுதைய அரசாங்கம் இராவ் சாகிப் என்னும் விருதினை வழங்கியது

மறைவு

மு. இராகவையங்கார் பிப்ரவரி 2, 1960-ல் தன் 82-வது வயதில், மானாமதுரையில் தன் மகன் வீட்டில் மரணமடைந்தார்.

நூல்கள்

பதிப்பித்தவை
  • திருக்குறள் பரிமேலழகர் உரையுடன் - 1910
  • பெருந்தொகை - 1936
  • திருவைகுந்தன் பிள்ளைத்தமிழ் - 1936
  • அரிச்சந்திர வெண்பா - 1949
  • கம்பராமாயணம் பால காண்டம் - 1951
  • திரிசிராமலை அந்தாதி - 1953
  • கம்பராமாயணம் - சுந்தர காண்டம் - 1958
  • நரிவிருத்தம் அரும்பத உரையுடன்
  • சிதம்பரப் பாட்டியல் உரையுடன்
  • திருக்கலம்பகம் உரையுடன்
  • விக்கிரம சோழனுலா
  • சந்திரா லோகம்
  • கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை
நூல்கள்
  • வேளிர் வரலாறு[4] - 1905
  • தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி - 1912
  • சேரன் செங்குட்டுவன்[2] - 1915
  • தமிழரும் ஆந்திரரும் - 1924
  • ஆழ்வார்கள் காலநிலை[3] - 1926
  • சாசனத் தமிழ்க்கவி சரிதம் - 1929
  • ஆராய்ச்சித் தொகுதி - 1938
  • திருவிடவெந்தை எம்பெருமான் - 1939
  • சேர வேந்தர் செய்யுட் கோவை (முதல் தொகுதி) - 1947
  • செந்தமிழ் வளர்த்த தேவர்கள்[1] - 1948
  • Some Aspects of Kerala and Tamil Literature – 2 volumes - 1950
  • இலக்கியக் கட்டுரைகள் - 1950
  • சேர வேந்தர் செய்யுட் கோவை (இரண்டாம் தொகுதி) - 1951
  • வினைதிரிபு விளக்கம் - 1958
  • கட்டுரை மணிகள் - 1959
  • தெய்வப் புலவர் கம்பர் - 1969
  • இலக்கிய சாசன வழக்காறுகள்
  • நூற்பொருட் குறிப்பகராதி
  • நிகண்டகராதி
சொற்பொழிவுகள்
  • சாசனத் தமிழ்க்கவி சரிதம் - 1929
  • காந்தளூர்ச் சாலை - 1950
  • சேரத் தமிழ் இலக்கியங்கள் - 1950
  • தெய்வப் புலமை - 1959
  • கம்பனின் தெய்வப் புலமை

உசாத்துணை

இணைப்புகள்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.