under review

சரவணன் சந்திரன்

From Tamil Wiki
Revision as of 16:08, 4 January 2024 by Jeyamohan (talk | contribs)
சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன் (ஜூன் 25, 1979) தமிழில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர். ஊடகவியலாளர்,வணிகர், வேளாண்தொழில்முனைவர் என பல முகங்கள் கொண்டவர்.

பிறப்பு, கல்வி

பிறப்பு

சரவணன் சந்திரன் ஜூன் 25, 1979-ல் அவரது அம்மாவின் சொந்த ஊரான காக்கா தோப்பில் (மதுரை) பிறந்தார். தாத்தா மற்றும் பாட்டியுடன் வளர்ந்தார். தந்தை சந்திரன். தாய் சாந்தி. தங்கை பெயர் மகாலட்சுமி.

கல்வி

தனது ஆரம்பக் கல்வியினை அங்கு உள்ள சூரியநாராயண சாஸ்திரிகள் ஆரம்பப் பள்ளியில் தொடங்கினார். ஒன்றாம் வகுப்பு அப்பாவின் சொந்த ஊரான தேனிக்கு இடம்பெயர்ந்தார். 3-ஆம் வகுப்பு படிக்கும்போது அவரது குடும்பம் வேலை நிமித்தமாக கோவில்பட்டிக்கு குடியேறியது. கோவில்பட்டியில் நாடார் பள்ளியில் படித்துக் கொண்டே ஹாக்கி விளையாட்டிலும் தேர்ச்சி பெற்றார். திருநெல்வேலி ரெட்டியார்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தார்.

விளையாட்டு

பள்ளிக் காலத்தில் சரவணன் சந்திரன் பாளையங்கோட்டை அண்ணா ஸ்டேடியத்தில் அமைந்துள்ள தமிழக அரசு விளையாட்டு விடுதியில் தங்கி ஹாக்கி பயிற்சிகளை மேற்கொண்டார். அதன் காரணமாக இவருக்கு விளையாட்டு வீரர்களுக்கான தகுதியில் சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் இளங்கலை பயில வாய்ப்பு கிடைத்தது.

மாநில அளவில் ஹாக்கி விளையாட்டில் கல்லூரி சார்பாகப் பங்கெடுத்துக் கொண்டிருந்தவர் கல்லூரி இரண்டாம் ஆண்டு பயில்கையில் ஒரு விபத்தில் சிக்கியதால் மேற்கொண்டு விளையாட்டைத் தொடரமுடியாத நிலைக்குச் சென்றார்.

தனிவாழ்க்கை

சரவணன் சந்திரனின் மனைவி பவித்ரா.

சரவணன் இதழியலாளராகவும், ஊடகவியலாளராகவும் பணியாற்றினார். தகவல்தொடர்பு (பிபிஓ) நிறுவனம் ஒன்றைத் தொடங்கி பிற நிறுவனங்களுக்கான சேவை வழங்கும் துறையிலும் ஈடுபட்டிருந்தார். கிழக்கு தைமூர், இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வியாபார நிமித்தமாக 2 ஆண்டுகள் வரை தங்கியுள்ளார். மீன் வியாபாரத்திற்கான நிறுவனம் ஒன்றை தொடங்கி மொத்த மற்றும் சில்லறை வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தார். பழனியில் கொய்யா, பேரிட்சை பயிரிடும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். சினிமா விவாதங்களில் பங்கெடுத்துள்ளார்.

ஊடகவியல்

சரவணன் சந்திரன் ஆறாம்திணை இணைய இதழில் பணியாற்றிதன் மூலம் இதழியல் துறைக்கு வந்தவர். பிறகு காலச்சுவடு நடத்திய உலகத்தமிழ்.காம் இணைய இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். காலச்சுவடு பத்திரிகையிலும் குறுகிய காலம் துணையாசிரியராக இருந்தார். பிறகு இந்தியா டுடே இதழில் பணியாற்றினார்.

பின்னர் காட்சி ஊடகமான விஜய் தொலைகாட்சியில் 'குற்றம் நடந்தது என்ன' உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் இயக்கத்தில் பணியாற்றினார். "சொல்வதெல்லாம் உண்மை", ஒரு தாயின் சபதம், கோடீஸ்வரி போன்ற நிகழ்ச்சிகளின் இயக்குனராக 200 நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார். 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியிலும், 'கலர்ஸ் தமிழ்' தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளின் இயக்கத்திலும், நிர்வாகத்திலும் பங்கெடுத்துள்ளார். தொலைக்காட்சிகளில் ஆயிரம் நிகழ்ச்சிகள் வரை இயக்குனராக இருந்து பணியாற்றி இருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

சரவணன் சந்திரனின் சிறுவயதில் தாய் மற்றும் அத்தை பசுபதி ஆகியோர் வீட்டில் புத்தகங்களைப் படிப்பதற்கு ஆர்வமூட்டியுள்ளனர்.கல்லூரி வாழ்வில் கல்லூரி நூலகத்தில் புத்தகங்களை வாசித்து இலக்கியம் பக்கம் ஈர்க்கப்பட்டார். கல்லூரியில் நடக்கும் 'வனம்' என்ற இலக்கிய அமைப்பில் பங்குபெற்று கவிதை, சிறுகதை வாசிப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். அங்கே கவிதைகள் மற்றும் சிறுகதைகளை எழுதத் துவங்கினார். ஆறாம்திணை இணைய இதழில் அவை வெளியாகின. கோவில்பட்டி சரவணக்குமார் என்கிற பெயரில் அவை நந்தன், தாமரை, புதிய பார்வை போன்ற இதழ்களில் வெளியாகின. தீவிர இடதுசாரி தனிச் சுற்று இதழ்களிலும் இப்பெயரில் கவிதைகள் வெளியாகின. வட்டார வழக்கில் எழுதப்பட்ட கவிதைகள் அவை. பேராசிரியர்கள் பாரதிபுத்திரன் மற்றும் இளங்கோ இருவரும் இலக்கியத்தின் பக்கம் அவரை மடை மாற்றினர். தனியே அவரே ஓடம் என்கிற பெயரில் கல்லூரி மாணவர்களிடம் நிதி வசூலித்து நண்பர்களோடு இணைந்து தனிச் சிற்றிதழ் ஒன்றைக் கொண்டு வந்தார். இரண்டு இதழ்களோடு அந்த சிற்றிதழ் நின்று போனது. கல்லூரி விடுதியில் இலக்கியச் சந்திப்புகளை ஒருங்கிணைத்துள்ளார்.

சரவணன் சந்திரனின் முதல் நாவல் 'ஐந்து முதலைகளின் கதை' அக்டோபர் 2015-ல் உயிர்மை பதிப்பாக வெளியானது. இந்நாவல் இளம், புதிய வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. இவர் எழுதிய 'அசோகர்' நாவல் 2021-ஆம் ஆண்டு வெளியானது. சரவணன் சந்திரன் முதன்மையாக நாவல்களையே எழுதிவருகிறார். சமூகவலைத்தளங்களில் விவசாயம், வணிகம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த அனுபவக்குறிப்புகளையும் எழுதிவருகிறார்.

'எழுத்துக்களில் சமகாலத்தைப் பதிவு செய்வதின் வழியாக சமகாலத்தில் அழுத்தமாக கால்களை ஊன்றி நின்று கடந்தகாலத்தையும், பழமையின் வேர்களையும் தொட விரும்புகிறேன்' என்று சரவணன் சந்திரன் தனது எழுத்து முறை பற்றிக் குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

நவீன உலகின் அரசியல், குடும்பம் சார்ந்த சிக்கல்களுக்கு உள்ளாகும் மனிதர்களைப் பேசுபவை சரவணன்சந்திரனின் படைப்புகள். சரவணன் சந்திரன் எழுத்தாளர்கள் கி. ராஜநாராயணன், ஜெயமோகன், ஆதவன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன், சாரு நிவேதிதா, கோணங்கி சோ.தர்மன் ஆகியோரை தனது முன்னோடிகளாகக் குறிப்பிடுகிறார்.

ரோலக்ஸ் வாட்ச் நாவலைப் பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் சாரு நிவேதிதா "திருகல் மொழி இல்லாமல் சுளுவான நடையில் எழுதப்பட்ட நாவல்" என்கிறார். "இளைஞர்கள் உணரும் நவீன உலகின் பதட்டங்களை சரசரவென்று ஆற்றின் குறுக்கே கடக்கும் பாம்பு போல் கதை செல்கிறது" என்றும் குறிப்பிடுகிறார்[1].

சரவணன் சந்திரனின் படைப்புகளை பற்றி குறிப்பிடும் பொழுது, எழுத்தாளர் ஜெயமோகன், "அவருடைய ஐந்துமுதலைகளின் கதை, ரோலக்ஸ் வாட்ச், அஜ்வா போன்ற நாவல்கள் நேரடியான கதைசொல்லல், விவரணைகள் இல்லாத மொழிநடை, அன்றாடத்தின் வியப்புகளையும் புதிர்களையும் மட்டுமே நாடிச்செல்லும் தன்மை ஆகியவற்றாலானவை... கேளிக்கை எழுத்தின் அனைத்து இயல்புகளுடன் இலக்கியத்தின் எல்லையைக் கடந்து வந்தவை. மாறாக சுபிட்ச முருகன் ஆழ்ந்த கொந்தளிப்பும் கண்டடைதலின் பரவசமும் கொண்ட ஆக்கம். ஐயமே இன்றி அவருடைய சிறந்த படைப்பு, தமிழின் முக்கியமான இலக்கியவெற்றிகளில் ஒன்று." என கூறுகிறார். [2]

விருதுகள்

  • 'ஐந்து முதலைகளின் கதை' நாவலுக்கு 2016-ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருது வழங்கப்பட்டுள்ளது.

படைப்புகள்

நாவல்கள்
  • ஐந்து முதலைகளின் கதை, 2015
  • ரோலக்ஸ் வாட்ச், 2016
  • அஜ்வா, 2016
  • பார்பி, 2017
  • சுபிட்ச முருகன், 2019
  • லகுடு, 2019
  • அத்தாரோ, 2021
  • அசோகர், 2021
கட்டுரைத்தொகுப்புகள்
  • எக்ஸ்டஸி, 2003,
  • மதிகெட்டான் சோலை, 2017,
  • அன்பும் அறமும், 2019,
  • கடலும் மகனும், 2019
  • வையிலைவேற் காளை, 2020
  • தற்செயல்களை விரட்டுகிறவன், 2021
  • பரிபூரண கம்யூனிஸ்ட்2023
கதைத்தொகுதிகள்
  • வெண்ணிற ஆடை, 2003,
  • பாவத்தின் சம்பளம், 2017
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
  • Tale of Five Crocodiles, Zero Degree Publishing, 2020

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page