எஸ்தர் காவியம்
எஸ்தர் காவியம், விவிலிய மாந்தர்களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட காப்பியம். விவிலியத்திலிலுள்ள பழைய ஏற்பாடு என்னும் பகுதி 39 புத்தகங்களை உடையது. அவற்றுள் 17 ஆவது புத்தகத்தில் எஸ்தரின் வரலாறு உள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட காப்பியமே எஸ்தர் காவியம். இதன் ஆசிரியர் செ. இராபின்சன் குரூசோ.
பிரசுரம், வெளியீடு
எஸ்தர் காவியம், ‘எழுச்சிமிகு இளவரசி எஸ்தர் காவியம்’ என்ற தலைப்பில், ஊட்டியிலுள்ள சோபியாராணி பதிப்பகம் மூலம், செப்டம்பர் 1986- பதிப்பிக்கப்பட்டது. இதன் ஆசிரியர், செ. இராபின்சன் குருசோ.
ஆசிரியர் குறிப்பு
செ. இராபின்சன் குரூசோ, ஊட்டியில், செப்டம்பர் 12, 1938 அன்று, செபாஸ்டியன் - பாக்கியமேரி தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த இராபின்சன் குரூசோ, கல்லட்டி என்னும் ஊரிலுள்ள சி.எஸ் .ஐ. பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.
தமிழ் இலக்கியம், ஆசிரியர் இயக்கங்களின் பணிகள், சமூக சேவை போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர் இராபின்சன் குருசோ. தமிழின் மீது கொண்ட ஆர்வத்தால் இவர், எஸ்தர் காவியத்தை இயற்றினார்.
காப்பியத்தின் கதைச் சுருக்கம்
அகாஸ்வேரு என்ற மன்னன் இந்து தேசம் முதல் எத்தியோப்பியா வரையிலான 127 நாடுகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் ஆண்டான். தன்னுடைய ஆட்சியின் சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ள, 180 நாட்கள் நடைபெறும் விழா ஒன்றை ஏற்பாடு செய்தான். அவ்விழாவில் அனைத்து நாடுகளிலிருந்தும் மன்னர்கள் மற்றும் பிரபுக்கள் கலந்துகொண்டனர். அகாஸ்வேருவின் மனைவி வஸ்தியும் அரண்மனையில் பெண்களுக்கு விருந்தளித்தாள். தன் மனைவி வஸ்தியின் பேரெழிலை விருந்துக்கு வந்த பிரபுக்கள் மற்றும் பிற மக்கள்காணும்படி, தம் முன்னர் அவளை வரவழைக்க ஏற்பாடு செய்தான் . ஆனால் வஸ்தி வர மறுத்து விட்டாள். அதனால் சினம் கொண்ட மன்னன், வஸ்தியை பட்டத்தரசி என்னும் பட்டத்திலிருந்து நீக்கினான். வேறொரு பெண்ணை அரசியாக்கும் முயற்சியில் ஈடுபட்டான். அதற்காகப் பல அழகிகளை அரண்மனைக்கு வரவழைத்தான்.
அப்படி வந்தவர்களுள், மொர்தெகாய் என்பவருடைய தங்கையான எஸ்தரும் ஒருத்தி. அவள் அழகைக் கண்டு மயங்கிய அகாஸ்வேரு, அவளை மணம் செய்துகொண்டு அரசியாக அறிவித்தான். எஸ்தர் யூத இனத்தைச் சேர்ந்தவள். அதை மறைத்து மன்னனை மணந்து கொண்டாள்.
மன்னன் அகாஸ்வேரு, அரசன் ஆமான் என்பவனுக்கு மேன்மையான நிலையைக் கொடுத்து அவனை அனைவரும் வணங்கும்படிச் செய்தான். ஆனால் மொர்தெகாய் ஆமானை வணங்காமல் இருந்தான். இதனால், மொர்தெகாய் மீது ஆமான் கடுங்கோபம் கொண்டான். அரசனின் முத்திரை மோதிரத்தைப் பெற்றிருந்த ஆமான், யூத குல மக்களை அழிக்க அரசன்பேரில் உத்தரவு பிறப்பித்தான் . இதனை அறிந்த எஸ்தர், அரசருக்கும் ஆமானுக்கும் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தாள். அன்றிரவு அரசரின் உத்தரவு பெற்று மொர்தெகாயைத் தூக்கிலிட ஆமான் திட்டம் தீட்டியிருந்தான். ஆனால், எஸ்தரின் முயற்சிகளால் அது நிறைவேறாமல் போனது.
விருந்து நிகழ்வில் அரசனிடம், தனது இனம் யூத இனம் என்பதை அறிவித்த எஸ்தர், தனது இனத்தையை அழிக்கத் திட்டமிட்டவன் ஆமான் என்பதை விளக்கமாக எடுத்துக் கூறினாள். இதனைக் கேட்ட அரசன், ஆமான் மீது கடும் கோபம் கொண்டான். ஆமானைத் தூக்கிலிட ஆணை பிறப்பித்தான். அதன் பின்னர், எஸ்தர் அரசனிடம் யூதரினத்தைக் காப்பாற்றச் சட்டமியற்ற வேண்டினாள்.
அரசனும் அவ்வாறே சட்டமியற்றினான். அதனால் யூதர்கள் காக்கப்பட்டனர். - இதுவே எஸ்தர் காவியத்தின் கதைச் சுருக்கம்.
நூல் அமைப்பு
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் எஸ்தர் காவியம் ஏழு பாகங்களைக் கொண்டுள்ளது. அவை,
- மகத்தான வாழ்வும் மகாராணி வஸ்தியும்
- மன்னவர் மனமாற்றம்
- அழிவுப்பாதை நோக்கி ஆமான்
- இனப்படு கொலையும் இதயம் குமுறிய மொர்தெகாயும்
- இனமான உணர்வு கொண்ட எஸ்தர் எழுச்சியும் ஆமான் வீழ்ச்சியும்
- எழுச்சி கொண்ட போர்முரசு
- இனத்தின் வெற்றியும் இனிய விழாவும்
மகத்தான வாழ்வும் மகாராணி வஸ்தியும்
மகத்தான வாழ்வும் மகாராணி வஸ்தியும் என்னும் முதல் பாகத்தில், மன்னனின் மகத்துவம், அகாஸ்வேருக்காக எடுக்கப்பட்ட 180 நாள் விழா, சூசான் அரண்மனையின் அலங்காரம், விருந்தின் சிறப்பு, அரசி வஸ்தி மன்னனின் வேண்டுகோளை அவமதித்தது, மன்னனின் சீற்றம், பண்டிதர் மெமுகான் உரைத்த ஆலோசனை, அரசர் வஸ்தியை நீக்குதல், வஸ்தியின் வீழ்ச்சி ஆகிய செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன. இப்பாகத்தில் 81 பாடல்கள் உள்ளன.
மன்னவர் மனமாற்றம்
மன்னவர் மனமாற்றம் என்னும் இரண்டாம் பாகத்தில், மன்னவர் மனநிலை, மொர்தெகாய் வரலாறு, எஸ்தர் வரலாறு, எஸ்தரின் எழில், கன்னிமாடத்தில் கன்னியரைச் சேர்த்தல், எஸ்தரைக் கன்னிமாடத்தில் சேர்த்தல், காவலர் யேகாயின் கண்களில் எஸ்தர் இரக்கம்பெறல், எஸ்தர் முறையும் மன்னர் நிலையும், மணமும் விருந்தும், மன்னரைக் கொல்லும் சதியை முறித்த மொர்தெகாய் ஆகிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. இப்பாகத்தில் 98 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
அழிவுப்பாதை நோக்கி ஆமான்
அழிவுப்பாதை நோக்கி ஆமான் என்னும் மூன்றாம் பாகத்தில், 57 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்பாகத்தில், அரசன் ஆமானை உயர்த்துதல், ஆமானை வணங்க மொர்தேகாய் மறுத்தல், ஆமானிடம் ஊழியர் புறங்கூறல், யூத இனத்தை அழிக்க ஆமான் நடத்திய சூழ்ச்சி, ஆமானுக்கு மன்னர் அளித்த அதிகாரம், ஆமானின் உரை, சூசான் நகரக் கலக்கம் ஆகிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
இனப்படுகொலையும் இதயம் குமுறிய மொர்தெகாயும்
இனப்படுகொலையும் இதயம் குமுறிய மொர்தெகாயும் என்னும் நான்காம் பாகத்தில் இனப்படுகொலைச் செய்தி கேட்ட மொர்தெகாயின் கதறல், யூத இனத்தின் புலம்பல், தாதிகள் எஸ்தருக்குச் செய்தி உரைத்தல், ஊழியர் மொர்தெகாயைக் கண்டு ஆடை வழங்கலும் மொர்தெகாய் மறுத்தலும், ஆத்தாகு, மொர்தெகாயைக் காணல், மொர்தெகாய் ஆத்தாகுக்கு கூறிய மறுமொழி, ஆத்தாகு எஸ்தரிடம் உரைத்தல், மறுப்புரை கூறி மீண்டும் ஆத்தாகுவை அனுப்புதல், மொர்தெகாயின் கடுமையான எச்சரிப்பு, மொர்தெகாய் எஸ்தரிடம் சொல்லச் சொன்ன உருக்கமான கூற்று, எஸ்தர் உரைத்தபடி மொர்தெகாய் செய்தல் ஆகிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. இப்பாகத்தில் 84 பாடல்கள் உள்ளன.
இனமான உணர்வு கொண்ட எஸ்தர் எழுச்சியும் ஆமான் வீழ்ச்சியும்
இனமான உணர்வு கொண்ட எஸ்தர் எழுச்சியும் ஆமான் வீழ்ச்சியும் என்னும் ஐந்தாவது பாகம் வெள்ளையாடை உடுத்தி எஸ்தர் வேந்தனிடம் செல்லுதல், ஐயன் கருணையும் எஸ்தர் பிழைப்பும், அரசன் அன்பும் அவன் வினாவிய பண்பும் , எஸ்தர் அழைப்பை அரசன் ஏற்றல், எஸ்தர் மனையில் எழில் பெறும் விருந்து, அரசன் வினாவும் எஸ்தர் விடையும், ஆமான் மகிழ்ச்சியும் அதிர்ச்சியும், ஆமானின் அறைகூவல், ஆமான் தன்மனைவியாகிய சிரேசாளிடம் கூறல், ஆமான் தன் நண்பர்களுடன் ஆலோசனை நடத்துதல், ஆமானின் தற்புகழ்ச்சி, மனைவியின் சொல்லைத் தட்டாத ஆமான், தூக்கு மரம் நிறுவ ஆணையிடல் ஆகிய செய்திகளைக் கொண்டுள்ள்து. ஐந்தாவது பாகம் 105 பாடல்களைக் கொண்டது.
எழுச்சி கொண்ட யூதரின் போர் முரசு
எழுச்சி கொண்ட யூதரின் போர் முரசு என்னும் ஆறாம் பாகத்தில் மக்களின் நிலையும் மன்னன் நிலையும், நாட்குறிப்பைப் புரட்டிப் பார்த்தல், மொர்தெகாய் உயர்த்தப்படுதல், நினைத்த காரியம் நிறைவேறா ஆமான், ஆமானின் ஆசைக் கூற்று, ஆமானின் அதிர்ச்சியும் வீழ்ச்சியும், மொர்தெகாயை உலாக் கொணர்தல், ஆமான் மனங்கசந்து கலங்குதல், எஸ்தரின் இனம் மீட்கும் மன்றாட்டு, துரோகி ஆமான், அரசன் பார்வையும் ஆமான் நிலையும், ஆமானின் மறைவு ஆகிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஆறாவது பாகம் 141 பாடல்களைக் கொண்டது.
இனத்தின் வெற்றியும் இனிய விழாவும்
என்னும் இறுதிப் பாகமான ஏழாவது பாகம், ஆமான் அரண்மனையை அரசிக்கு அளித்தல், எஸ்தர் தான் யூதர் இனமென இயம்புதல், ஆமானின் கணையாழியை மொர்தெகாய்க்கு அணிவித்தல், எஸ்தருக்கு மொர்தெகாய் இன உணர்வை மூட்டுதல், அரசன் அவையில் எஸ்தர் முறையீடு, அரசன் கூற்று, எஸ்தர் மன்றாட்டு, எஸ்தர் கண்ணீர் முறையீடு, அரசன் பெயரில் மடல் வரைய உரிமையளித்தல், மூப்பர்களுடன் ஆலோசனை, முத்திரை பதித்த அரசன் மடல், அரச உடையில் மொர்தெகாயின் உணர்ச்சி உலா, யூதர்கள் நிலை, வஞ்சகர் வதைப்படல், யூதரின் போர்க்களப் பாடல், எஸ்தரின் இரண்டாம் மன்றாட்டு, அரசன் கூற்று, பூரீம் விழா, இன உணர்வு வென்றதால் மகழ்ச்சி, மொர்தெகாயின் கடிதம் கண்ட யூதர்கள் மகிழ்ச்சி, யூதர் இனத்தின் தானைத் தலைவன் மொர்தெகாய், இனமான உணர்வு காத்த இளவரசி எஸ்தர், யூதர் இனப் பெருமை, எஸ்தர் காட்டிய இன உணர்வு, காவியத் தலைவி எஸ்தர் வாழ்த்து ஆகிய செய்திகளைக் கொண்டுள்ளது. ஏழாம் பாகத்தில் 292 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
பாடல்கள் நடை
எஸ்தரின் குணநலம்
சொற்கள் உள்ளத்தை அள்ளும்
சொக்கிடும் புன்னகை துள்ளும்
பற்களே முத்துச் சரங்கள்
பாளைச் சிரிப்பின் முகத்தாள்
கற்கண்டு இனிமை அதரம்
காட்டுத் தேனின் மதுரம்
நற்குணப் பண்பின் சிகரம்
நறுந்தேன் பொற்குடம் எஸ்தர்
கிளிமொழி பேசும் குரலினாள்
கீர்த்தி பெற்றுள்ள அழகினாள்
கனிமனங் கொள்ளும் எழிலினாள்
கனியா யினிக்கும் சுவையினாள்
விழிகள் இரண்டும் நீலமலர்
வீணை ஒலியின் பேச்சினாள்
குழிகள் விழுந்திடும் கன்னத்தாள்
குமுத மலரெனச் சிரித்திடுவாள்
எஸ்தர் அரசனிடம் வேண்டுதல்
இனத்தை மீட்கும் எண்ணத்தால்
இதயங் குமுறி நின்றேன்
மனத்தின் கவலை நீங்க
மன்ன என்னைத் தாங்கினை
கனத்தில் உயர்ந்துநான் ஒங்கக்
காவல கனிவு காட்டினை
தனத்தைப் பணத்தை வேண்டிலேன்
சனத்தைக் காக்க வேண்டினேன்
உலக அமைதியைப் போதித்தல்
அயலானை நேசியென்று இயேசுவும் சொன்னார்
அவரது மொழியில் உலக அமைதி
வியலுற அடங்கியே யுள்ளதை யுணர்ந்தால்
வீழ்த்தி அழிக்கும் போர்வகை மூளுமா
கயமையைப் பிணஞ்சுடு காடென உலகைக்
கடிதினில் ஆக்கும் கருவியை ஒழிப்போம்
நயனுற ஒருவரோ டொருவரை நணுகி
நாம்வரு நாள்முதல் நன்மைகள் புரிவோம்
மதிப்பீடு
எஸ்தர் காவியம், இன உணர்வினை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட காப்பியம். “காவியத்தில் எவரும் தொடாத இனமான நூலாக எஸ்தர் காவியத்தைப் படைத்தேன்” என்று ஆசிரியர் இராபின்சன் குரூசோ கூறியுள்ளார். உவமைகள், வருணனை, நடை போன்ற இலக்கியக் கூறுகளுடன் இக்காப்பியம் படைக்கப்பட்டுள்ளது. திருக்குறள் கருத்துக்களும், பழமொழிளும் இக்காப்பிய நூலில் எடுத்தாளப்பட்டுள்ளன.
கிறித்தவக் காப்பிய நூல்களில் இன உணர்வைச் சுட்டும் காப்பியமாகவும், பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கிறித்தவக் காப்பிய நூல்களில் முக்கியமானதாகவும், எஸ்தர் காவியம் அறியப்படுகிறது. “இன உணர்வை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரே கிறித்தவக் காவியம் எஸ்தர் காவியம்” என்று தனது கிறித்தவக் காப்பியங்கள் நூலில் குறிப்பிட்டிருக்கும் முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன், “இராபின்சன் குருசோ அவர்களின் கருத்துத் தேர்வும் நடைச்சிறப்பும் எஸ்தர் காவியத்தைக் கிறித்தவக் காப்பியங்களில் சிறந்த காவியமாக்கியது.” என்று மதிப்பிட்டுள்ளார்.
உசாத்துணை
எழுச்சிமிகு இளவரசி எஸ்தர் காவியம், செ. இராபின்சன் குருசோ, சோபியாராணி பதிப்பகம், உதக மண்டலம், முதல் பதிப்பு, செப் 1986.
கிறித்தவக் காப்பியங்கள், முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு. முதல் பதிப்பு, 2013.