எம்.பி.திருமலாச்சாரியார்

From Tamil Wiki
எம்.பி.திருமலாச்சாரியார்
எம்.பி.டி.ஆச்சாரியா, சட்டமாணவராக

எம்.பி.திருமலாச்சாரியார் (15 ஏப்ரல் 1887 – 20 மார்ச் 1954 ) (எம்.பி.டி.ஆச்சாரியா) இந்திய சுதந்திரப்போராட்ட வீரர், சுதந்திர சிந்தனையாளர், இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்தை தொடங்கியவர்களில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

எம்.பி.டி.ஆச்சாரியா (மண்டயம் பிரதிவாதிபயங்கரம் திருமலாச்சாரியார்) தமிழகத்தின் புகழ்மிக்க தென்கலை வைணவ பெருங்குடும்பமான மண்டயம் மரபு என்னும் அமைப்பச் சேர்ந்தவர். எம்.பி. டி.ஆச்சாரியா 1887ல் சென்னையில் எம்.பி.நரசிம்ம ஐயங்கார்- சிங்கம்மா இணையருக்குப் பிறந்தார். எம்.பி.நரசிம்ம அய்யங்கார் பொறியில் பட்டயப் படிப்பு படித்தவர்.. சென்னை மாகாண அரசாங்கத்தின் பொதுப்பணித் துறையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றினார். எம்.பி.ஆச்சாரியாவுக்கு இரண்டு தம்பிகள். நரசிம்ம ஆச்சாரியார் ராஜமுந்திரி தவலேஸ்வரம் மண்டலத்தில் கோதாவரி நதியின் குறுக்கே சர் ஆர்தர் கார்ட்டன் வடிவமைத்துக் கட்டிய பு தவலேஸ்வரம் அணைக்கட்டில் பணியாற்றியதால், திருமலாச்சாரியா அவரது உறவினர்கள், பள்ளி மாணவர்களிடையே ‘கோதாவரிச் சாமி’ என்று அறியப்பட்டிருந்தார்.

திருமலாச்சாரியா சென்னை, திருவல்லிக் கேணியில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். அப்போது திரு.வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி அந்தப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். திருமலாச்சாரியார் தன் உறவினராகிய அளசிங்கப்பெருமாள் பணியாற்றிய பச்சையப்பன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் படித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவர் பள்ளிநிறைவு செய்ததாக தகவல் இல்லை.

தேசிய இயக்கம்

மண்டயம் குடும்பம் இந்திய தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தது. காங்கிரஸில் பாலகங்காதர திலகர் தலைமையிலான தீவிரவாத அணிக்கு அணுக்கமானதாகவும் இருந்தது. எம்.பி.டி.ஆச்சாரியாவின் உறவினர் அளசிங்கப் பெருமாள் சுவாமி விவேகானந்தரின் மாணவர். எம்.பி.டி.ஆச்சாரியா இளமையில் விவேகானந்தர் மேல் பற்றுகொண்டிருந்தார். பிரம்மவாதின் இதழ் வெளியீட்டிலும் பங்குகொண்டார்.

பாலகங்காதர திலகர் 1898-இல் சிறையிலிருந்து விடுதலை பெற்ற சிலநாட்கள் கழித்து, சென்னைக்கு வந்து அளசிங்கப்பெருமாள் மற்றும் மண்டயம் குடும்பத்தவரைச் சந்தித்தார். திலகரின் அணுக்கராகிய வாசுதேவ் ஜோஷி 1902ல் மண்டயம் குடும்பத்தவரைச் சந்தித்தார் 1902ல் சகோதரி நிவேதிதாவும் சென்னைக்கு வந்திருந்தார். இவர்களின் செல்வாக்கு எம்.பி.டி.ஆசாரியாவுக்கு உண்டு.

விபின் சந்திரபால் 1907-ஆம் ஆண்டு, மே மாதத்தில் சென்னைக்கு வந்திருந்து, பத்து நாட்கள் தொடர் விரிவுரைகள் நிகழ்த்தினார். அப்போது அதில் பங்குகொண்டவர்களில் வர்களுள் வி.சக்கரைச் செட்டியாரு ம், சி.சுப்பிரமணிய பாரதியும் குறிப்பிடத்தக்கவர்கள்.

பிபன் சந்திரா பால் எம்.பி.திருமலாச்சாரியாவின் இன்னொரு உறவினரான எஸ்.சீனிவாசாச் சாரியாவைச் சந்தித்தார். அந்த வருகையின்போது, அவர் தங்கியிருந்த வீடு புதுச்சேரியார் வீடு என்று அழைக்கப்பட்டது.

1907-இல் பூனாவிற்குச் சென்று திலகரைச் சந்தித்தார். 1907ல் டிசம்பர் மாதத்தில் நடை பெற்ற சூரத் காங்கிரஸில் பங்கு கொண்டார்.

இந்தியா இதழ்

1900 த்தில் எம்.பி.டி.ஆச்சாரியா தன் உறவினரான மண்டயம் திருமலாச்சாரியார், மண்டயம் சீனிவாசாச்சாரியார் ஆகியோருடன் இணைந்து இந்தியா (இதழ்) வெளியீட்டில் பங்குகொண்டார். அதில் சி.சுப்ரமணிய பாரதி ஆசிரியராக இருந்தார்.

15, ஆகஸ்ட், 1908 ல் இந்தியா’அலுவலகம் சோதனையிடப்பட்டு அதன் ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார். அதற்கு ஒரு வாரம் முன்புதான் ஆச்சாரியா இந்தியா இதழின் வெளியீட்டாளராக தன்னை பதிவுசெய்துகொண்டார். ‘இந்தியா’அலுவலகமும், அச்சகமும் பரிசோதனைக்குள்ளான போது, காவல்துறையால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியலில், அச்சக உரிமையாளர் என்ற முறையில் ஆச்சாரியா கையொப்பமிட்டார்.

ஆச்சாரியா 1908, செப்டம்பர் மாத இறுதியில் மண்டயம் சகோதரர்கள் மற்றும் சி.சுப்ரமணிய பாரதியாருடன் புதுச்சேரிக்குத் தப்பிச் சென்றார். அச்சகம் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டது. அங்கிருந்து 10, அக்டோபர், 1908 முதல் ‘இந்தியா’ வெளிவரத் தொடங்கியது. இந்தியா இதழின் ஆசிரியராக இருந்த முரப்பாக்கம் சீனிவாசன் ஐந்தாண்டு சிறைத்தண்டனை பெற்றார்.

பிரிட்டிஷ் அரசின் தடையால் புதுச்சேரியில் இந்தியா இதழை நடத்த முடியாத நிலை உருவானதும் அவ்விதழ் 1909ல் நின்றுவிட்டது. அதன்பின் பாரதியாரை ஆசிரியராகக்கொண்டு விஜயா என்னும் இதழ் தொடங்கப்பட்டது. அதுவும் நின்றுவிட்டது. பிரிட்டிஷார் பிரெஞ்சு அரசுக்கு கடுமையான நெருக்கடிகளை அளித்தனர். அரசத்துரோகக் குற்றம்சாட்டப்பட்ட மண்டையம் சீனிவாச ஐயங்கார், மண்டையம் திருமலாச்சாரியார், எம்.பி.டி.ஆச்சாரியா உள்ளிட்டவர்களை நாடு கடத்தும்படி கோரினர். நாடுகடத்தப்படலாம் என்னும் நிலை உருவானபோது எம்.பி.டி.ஆச்சாரியா ஐரோப்பாவுக்கு தப்பிச்சென்றார்

பயணங்கள்

எம்.பி.டி.ஆச்சாரியா கிளர்ச்சியாளராக ஐரோப்பாவில் பல ஊர்களிலாக வாழநேரிட்டது. அவருடைய பார்வையை அப்பயணங்கள் வடிவமைத்தன.

பாரீஸில்

பிரிட்டிஷ் அரசால் சிறையிலடைக்கப்படலாம் என்னும் நிலையில் எம்.பி.டி.ஆச்சாரியா தன் குடுமியை எடுத்துவிட்டு, தோற்றத்தை மாற்றிக்கொண்டு கொழும்புவுக்கு கப்பலேறினார். அவரிடம் முந்நூறு ரூபாய் மட்டுமே இருந்தமையால் உடைமைகள் எதையும் கொண்டுசெல்ல இயலவில்லை. கொழும்புவில் இருந்து கப்பல் வழியாக பிரான்ஸில் மார்சேல்ஸ் துறைமுகத்தை அடைந்தார். தன்னிடமிருந்த பணத்தில் பெரும்பகுதியை கப்பலில் மூன்றாம் வகுப்பு பயணச்சீட்டு எடுக்க செலவிட்டார். மார்சேல்ஸிலிருந்து பாரிஸுக்கு தரைவழியாகப் பயணம் செய்தார் .ஆச்சாரியா மஹாராட்டா இதழில் வெளிவந்த தனது நினைவுத்திரட்டில் அவர் வேறு வழியிலலமல் மார்ஸீல்லஸ் செல்லும் ஜப்பானியக் கப்பலில் ஏறிவிட்டதாகவும், ஐரோப்பாவுக்கு எந்த குறிப்பிட்ட நோக்கத்தோடும் செல்லவில்லை என்றும் சொல்கிறார்.அவர் ஒரு வங்காளியுடன் பாரிசுக்குச் சென்றார் என்று குற்றப் புலனாய்வுத் துறை அறிக்கை கூறுகிறது.

எம்.பி.டி.ஆச்சாரியா சென்னையில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் இந்தியா இதழின் ஆங்கில வடிவமான - ல் தொடர்ந்து எழுதிவந்தமையால் அவருக்கு பிரெஞ்சு ஜனநாயகவாதிகளுடன் தொடர்பிலிருந்தது. பாரீஸில் அவர் பேரா. மோனியர்ஸ் வின்ஸன் மற்றும் சில நாடுகடந்த இந்தியர்களுடன் தொடர்பை உருவாக்கிக்கொண்டார்.

இங்கிலாந்தில்

பாரீஸில் வாழ்ந்தபோது ஆச்சாரியா லண்டனில் இருந்த வ.வே. சுப்ரமணிய ஐயர்ருக்கு கடிதம் எழுதினார். வ.வெ.சு.ஐயரின் அழைப்பின் பேரில் அவர் பாரீஸிலிருந்து லண்டனுக்கு சென்றார். அங்கே இந்தியா இல்லம் என்னும் தங்குமிடம் தேசியச் செயல்பாடுகளின் மையமாக இருந்தது. 24, ஜனவரி 1909ல் இந்தியா இல்லத்தில் நிகழ்ந்த கூட்டத்தில் ஆச்சாரியா முதல்முறையாக கலந்துகொண்டார். இந்திய இல்லத்தில் ஆச்சாரியா சிலகாலம் தங்கினார். இந்தியா இல்லத்தின் நிதியுதவியுடன் ஆச்சாரியா லண்டன் கண்ட்ரி கௌன்ஸில் ( London County Council) என்னும் நிறுவனத்தில் புகைப்பட அச்சுநகல்கலை (Photoengraving) பயிலும்பொருட்டு சேர்ந்தார்.

இந்தியா இல்லத்தில் ஆச்சாரியா வீர் சவார்க்கர் உள்ளிட்ட தேசியவாதிகளுடன் அறிமுகம் செய்துகொண்டார். வீர் சவார்க்கர் இந்திய தேசிய விடுதலைக்காக முன்னெடுத்த செயல்பாடுகளில் ஆச்சாரியா பங்குகொண்டார். அவர்கள் வெளியிட்ட த இந்தியன் சோஷியாலஜிஸ், பந்தே மாதரம், தல்வார் உள்ளிட்ட குறும்பிரசுரங்களில் அவரும் பணியாற்றினார். வீர் சவார்க்கரின் வெளியீடுகளுக்கு நிதியுதவி பெறுவதற்காக பிரிட்டனின் ஜனநாயகவாதிகளைச் சந்தித்து நிதிபெறுவதற்காக உழைத்தார். ஆச்சாரியா டோட்டன்ஹாம் கோர்ட் ரோட் (Tottenham Court Road) என்னுமிடத்தில் இருந்த இடத்தில் துப்பாக்கிப்பயிற்சி எடுத்துக்கொண்டார்

1 ஜூலை 1909ல் இந்தியா இல்லத்தில் பயிற்சி பெற்ற மதன்லால் திங்ரா வில்லியம் ஹட் கர்சன் வில்லி (William Hutt Curzon Wyllie) யை சுடுக்கொன்றார். பிரிட்டிஷ் காவல்துறை இந்தியா இல்லத்தின் மேல் கடும் நடவடிக்கை எடுத்தது. அந்த அமைப்புடன் தொடர்புகொண்டிருந்தவர்கள் ஐரோப்பாவுக்கும் பிறநாடுகளுக்கும் தப்பிச் சென்றனர். ஆச்சாரியா லண்டனில் நீடித்தார்.மதன்லால் திங்ரா செய்த கொலையின்பொருட்டு பலமுறை விசாரிக்கப்பட்டார்.

மொரோக்கோவில்

ஆச்சாரியா ஆகஸ்ட், 1909 ல் மொராக்கோவுக்குமான போரில் ஈடுபட விரும்பி சுக்சாகர் தத் என்னும் இந்திய மாணவருடன் ஜிப்ரால்டர் வழியாக மொரோக்கோவுக்குக் கிளம்பிச்சென்றார். ஆயுதப்பயிற்சியுடன் நேரடிப்போர் அனுபவம் பெறுவதும் அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் ஸ்பானிஷ் படைகளும் மொரோக்கோ போராளிகளும் அவர்களை சந்தேகப்பட்டு தங்களுடன் சேர்த்துக்கொள்ளவில்லை. லண்டனுக்கு எழுதி பணம் பெற்றுக்கொண்டு அவர்கள் போர்ச்சுக்கலை அடைந்தனர். தத் லண்டனுக்கே திரும்பினார். ஆச்சாரியா லிஸ்பனுக்குச் சென்றார். அவர் போர்ச்சுக்கலிலேயே தங்கிவிட விரும்பினார். போர்ச்சுக்கல் அரசு அவரை தன் கண்காணிப்பின் கீழ் வைத்திருந்தது. ஆகவே ஆச்சாரியா 4, அக்டோபர், 1909 ல் பாரீஸுக்குத் திரும்பினார். 1910 ஜனவரியில் லண்டன் சென்றார்.

பாரீஸில் மீண்டும்

1910ல் சவார்க்கர் கைது செய்யப்பட்டபோது ஆச்சாரியாவும் வ.வெ.சு.ஐயரும் பாரீஸுக்குத் திரும்ப முடிவெடுத்தார்கள். 1907ல் இந்தியா இதழ் தடைசெய்யப்பட்டதை ஒட்டி எம்.பி.டி.ஆச்சாரியா மேல் பிரிடிஷ் அரசு ராஜத்துரோகக் குற்றம் சாட்டி அவரை கைதுசெய்யும் ஆணையை வெளியிட்டிருந்தது. தி.செ.சௌரிராஜன், வ.வெ.சு ஐயர் ஆகியோர் பாரீஸில் இந்திய சுதந்திரப்போரை ஒருங்கிணைத்து வந்தனர். பாரீஸில் மாடம் காமா நடத்திவந்த வெளியீடுகளில் எழுதிய ஆச்சாரியா அங்கிருந்து புதுச்சேரியில் வாழ்ந்த சுப்ரமணிய பாரதியார், மண்டயம் சீனிவாச ஐயங்கார் ஆகியோருடன் தொடர்பில் இருந்தார். பாரீஸில் ஆச்சாரியா பங்குகொண்ட he பாரீஸ் இந்தியக் கழகம் (Paris Indian Society) பொதுமக்கள் ஆதரவு கொண்ட இயக்கமாக ஆகியது.லண்டனில் இருந்து தப்பிய சவார்க்கர் மார்சேல்ஸ் துறைமுகத்தில் திரும்ப கைதுசெய்யப்பட்டு பிரிட்டனின் கோரிக்கைக்கு ஏற்ப இந்தியாவுக்கு அனுப்பப்பட முடிவெடுக்கப்பட்டபோது அதற்கு எதிரான அறிவுஜீவிகளின் கண்டனம் மற்றும் மக்களாதரவை ஆச்சாரியா தலைமையிலான இந்திய போராட்டக்குழு மேற்கொண்டது.

ஐரோப்பாவில்

ஆச்சாரியா 1911, அக்டோபர் மாதத்தில் சர்தார் அஜித்சிங்கிட மிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, கான்ஸ்டான்டிநோபிளுக்குச் சென்றார் எனத் தெரியவருகிறது. கான்ஸ்டான்டிநோபிளிலிருந்து ஆச்சாரியா எழுதியனுப்பிய இரண்டு கடிதங் களையும் காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர். இதற்கு முன்பே, ஜெர்மனியில் படித்துக் கொண் டிருந்த இந்திய மாணவர்களிடையே கொள்கைப் பிரசாரம் செய்வதற்காக பெர்லின், மியூனிச் ஆகிய நகரங்களில் ஆச்சாரியா தங்கியிருந்தார்.

அமெரிக்காவில்

1912-ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் 1914-ஆம் ஆண்டு வரைஆச்சாரியா நியூயார்க் நகரிலும், பின்னர் பெர்க்லி, காலி ஃபோனியா ஆகிய நகரங்களிலும் தங்கியிருந்தார் இந்துஸ்தான் காதர் அசோஸியேஷனுடன் தொடர்பில் இருந்துள்ளார். 1914-ஆம் ஆண்டு ஏப்ரலில் அந்த அசோஸியேஷன் நடத்திய கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொண்டார் என்றொரு தகவல் உள்ளது.

உசாத்துணை

எம்.பி.டி.ஆச்சாரியாவின் வாழ்வும் காலமும் - சி.எஸ்.சுப்பிரமண்யம்