under review

வித்துவான் குறம்

From Tamil Wiki
Revision as of 19:49, 13 November 2023 by Logamadevi (talk | contribs)
Alli naadagam.jpg

வித்துவான் குறம் அர்ஜுனனை சந்திக்க அல்லி வித்துவான் (கூத்து வாத்தியார்) வேடம் அணிந்து திரௌபதி வீட்டிற்கு வருவதாக அமைந்த அம்மானைப் பாடல். மற்ற அம்மானைப் பாடல்கள் போல் இதையும் புகழேந்திப் புலவர் இயற்றியதாக நம்பப்படுகிறது.

பதிப்பு வரலாறு

வித்துவான் குறம் 1913-ல் நாராயணசாமிப் பிள்ளையால் வெளியிடப்பட்டது. இது 2,100 வரிகள் கொண்டது. இந்த நூலில் கதைத் தன்மை இல்லாத காரணத்தினால் இதன் மறுபதிப்பு வரவில்லை என இதனை ஆய்வு செய்த பேராசிரியர். அ.கா. பெருமாள் குறிப்பிடுகிறார்.

ஆசிரியர்

வித்துவான் குறம் நூலைப் பாடியவர் புகழேந்திப் புலவர் என்னும் வாய்மொழி மரபு உண்டு. இவர் 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் என தன் 'இலக்கிய வரலாறு' நூலில் தி.வை சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். ஆய்வாளர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் அதனை ஒத்துக் கொள்கிறார். ஆரிய சேகரன் என்னும் பாண்டிய நாட்டு படைத்தலைவன் காலத்தவர் புகழேந்தி என்பதற்கும் சான்று உண்டு.

இவர் ஒரு புனைவு என்றும் அட்டாவதானம் வீராசாமி செட்டியாரே அம்மானைப் பதிப்புகளில் புகழேந்திப் புலவரின் பெயர் சேர்த்தார் என்றும் தமிழ்க் கதைப்பாடல்களைப் பற்றி ஆங்கிலத்தில் விரிவான நூல் எழுதிய மு.அருணாசலம் சொல்கிறார். செட்டியார் தம் காலத்தில் வழங்கிய வாய்மொழிக் கதைகளை புகழேந்திப் புலவரின் பெயரில் சேர்த்துச் சொன்ன தகவல்களை பீ.ஆர்.என் சன்ஸ் (B.R.N Sons) போன்ற பதிப்பாளர்கள் சொன்ன தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

கதைச் சுருக்கம்

அர்ஜுனன் அல்லியைத் திருமணம் செய்து புதல்வனைப் பெற்று மகிழ்ச்சியோடு இருந்த பின் அஸ்தினாபுரம் மீண்டான். அங்கிருக்கும் போது ஒரு நாள் காமத்தில் தவித்து அவன் மனைவியான மின்னொளியைக் காணச் செல்கிறான். அங்கே மின்னொளி பூஜையில் இருக்கிறாள். விஜயனோ அதனை அறியாமல் தாமரை மொட்டுப் போலிருக்கும் அவளது மார்பைத் தடவினான். மின்னொளி அவனை உதாசீனம் செய்து தள்ளினாள். அதனால் அவள் மேல் கோபம் கொண்டு அங்கிருந்து செல்கிறான். அதன் பின் அவன் மின்னொளியை மறந்து விட்டான். அவள் வீட்டிற்குப் போவதை நிறுத்திவிட்டான். மின்னொளியும் தன் வைராக்கியத்துடன் இருந்தாள். அர்ஜுனனை அவளும் அழைக்க மறுத்தாள். அவள் தனக்கே ஒரு சிறையை உருவாக்கிக் கொண்டு அதனுள் இருந்தாள்.

இந்த செய்தி கேள்விப்பட்ட திரௌபதி விஜயனின் மற்ற மனைவிகள் அனைவரையும் அழைத்து அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதற்காக ஆலோசனை கேட்கிறாள். விஜயனை எப்படியாவது மின்னொளி வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அவர்கள் இருவரும் தழுவ வேண்டும். அதற்கு என்ன வழியென எல்லோரும் கூடி யோசித்தார்கள்.

அர்ஜுனனை குறத்தி வேடமிட்டு மின்னொளி விட்டிற்கு போகச் சொன்னாள் திரௌபதி. மின்னொளியிடம் பேசி அவள் மனதைக் கவர்ந்து, அவளிடம் காம விகாரத்தை உண்டாக்கி அவளுடன் சேர்ந்துவிட யோசனை சொன்னாள் விஜயனின் மற்றொரு மனைவி. அவனும் அதன்படியே செய்தான். மின்னொளியைத் தழுவினான். அவள் கர்ப்பமானாள்.

மின்னொளியாளுக்கு சீமந்தம் நடத்த திரௌபதி தலைமையில் ஏற்பாடாகியது. அர்ஜுனன் தன் மனைவிகளில் முதன்மையானவளாக இருந்த அல்லிக்கு முதலில் எழுதினான்,

ஆகாசம் போனாலும் அல்லி உனைச் சங்கரிப்பேன்
பாதாளம் போனாலும் பேதிப்பேன் அர்சுனன் நான்
விஜயனார் தன் சேதி மெல்ல அறிந்திடவாய்
வரவேணும் அல்லி என்று வான் விசயன் தான்

என்று எழுதினான். இப்படி மற்ற மனைவிகளுக்கும் அவன் கடிதம் எழுதினான்.

அல்லிக்கான ஓலையை தூதர்கள் அவளிடம் கொண்டு சென்றார்கள். அல்லியை வணங்கி அவளிடம் ஓலையைக் கொடுத்தார்கள். அந்த ஓலையை வாங்கி படித்த அல்லி அர்ஜுனனிடம் அளவுக்கு அதிகமாக பவ்வியமும், கோழைத்தனமும் வெளிப்பட்டதைக் கண்டாள். அவளுக்கு அவன் மேல் வெறுப்பு ஏற்பட்டது. தன் குலத்திற்கு ஏற்காத காரியத்தையல்லவா இவன் செய்துவிட்டான் என்றெண்ணினாள்.

அர்ஜுனனைப் பார்த்தும், அவனுடன் சல்லாபிக்க வேண்டும், அவனைப் பரிகாசம் செய்து மகிழ வேண்டும் என ஆசை கொண்டாள். தன் தோழியிடம் நாட்டின் பொறுப்பை ஒப்படைத்துக் கொண்டு பல்லக்கில் ஏறி திரௌபதியின் வீட்டை அடைந்தாள். திரௌபதி அவளுக்கு சகல மரியாதையும் செய்து வரவேற்றாள்.

அல்லிவரவு சொல்லி ஆரணங்கு உள் மகிழ்ந்து
ஆலத்தி காட்டுங்கடி அருச்சுனனார் தேவியர்க்கு
தென்பாண்டி நாடார்க்கு திருஷ்டி கழியுங்கடி
தாமக்குழலாளும் தாதியவள் கேட்டு

உபசரித்தாள்.

இந்த வேளையில் சுபத்திரை அர்ஜுனனைத் தேடி அலைவது போல் கனவு கண்டாள். கனவு கலைந்ததும் அவளுள் பதற்றம் ஏற்பட்டது. எப்படியாவது அர்ஜுனனைப் பார்க்க வேண்டும் என பல்லக்கில் ஏறி திரௌபதியின் வீட்டிற்கு வந்தாள். திரௌபதி மற்ற மனைவிகள் வரும் வரை பொறுத்திருக்கும் படி வேண்டினாள்.

நாக மடந்தை நறுநுதலாள் நாயகமும்
பொற்கலச நன்முலையாள் போகவதி நாயகமும்
வண்டார் குழலாள் வயிர் வள்ளி நாயகமும்
பங்கயம் சீர் கண்ணாள் பவளக்கொடி நாயகமும்
பார்ப்பான் மகளும் பதிவுடைய பத்தினியும்

மற்ற மனைவியர் திரௌபதியின் வீட்டிற்கு வந்தனர்.

அர்ஜுனன் எங்கிருந்தாலும் உடனே வரும்படி மடல் எழுதினாள் திரௌபதி. அதோடு அவனைக் காண அல்லி காத்திருப்பதாகவும் எழுதினாள்.

இதற்கிடையில் அல்லி கூத்து வாத்தியார் (வித்துவான்) வேஷம் கட்டி புலவனைப் போல் அர்ஜுனனைத் தேடிச் சென்றாள். அவள் வேஷம் கட்டியது திரௌபதிக்கு தெரியாது. அல்லி கூத்து வாத்தியார் வேடத்துடன் திரௌபதியின் அரண்மனைக்கு வந்தாள். திரௌபதியால் முதலில் அல்லியை அடையாளம் காண இயலவில்லை. ஆனால் அல்லி பேசத் தொடங்கியதும் திரௌபதி அவளைக் கண்டு சிரித்துவிட்டாள்.

அல்லி யாரை எல்லாமோ விசாரித்து அர்ஜுனன் இருக்கும் இடம் அறிந்து அங்கே சென்றாள். கூத்து வாத்தியார் வேடத்தில் இருந்த அவளை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. அல்லி அந்த வேடத்துடனே அவன் முன் ஆட ஆரம்பித்தாள். ஆட்டத்தின் முடிவில் தன் வேடத்தைக் கலைத்துவிட்டு அவன் முன் நின்றாள். அவனும் அவளை அடையாளம் கண்டு மகிழ்ந்தான் அதன் பின் இருவரும் சரசமாடினர்.

உசாத்துணை

  • அர்ச்சுனனின் தமிழ் காதலிகள், ஆசிரியர்: அ.கா.பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், 2012


✅Finalised Page