under review

சுடர்மணி

From Tamil Wiki
Revision as of 23:05, 15 September 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சுடர்மணி (1976) கிறித்தவக் காப்பியங்களிள் ஒன்று. இயேசுபெருமானின்  வரலாற்றைக் கூறும் இக்காப்பிய நூலை இயற்றியவர், எஸ். ஆரோக்கியசாமி. விவிலியத்தில் காணப்படும் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தி நூல்களின் அடிப்படையில் சுடர்மணி காப்பிய நூல் இயற்றப்பட்டுள்ளது. விருத்தப்பாவில் இயற்றப்பட்ட இந்நூலில் நான்கு காண்டங்களும், 1201 பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

பிரசுரம், வெளியீடு

சுடர்மணி நூலை,  எஸ். ஆரோக்கியசாமியின் மகன், ஆ.பி.அந்தோணி இராசு, 1976-ல், திருச்சியில் முதல் பதிப்பாக வெளியிட்டார்.

நூல் நோக்கம்

சுடர்மணி காப்பியம் இயற்றியது குறித்து ஆசிரியர் எஸ். ஆரோக்கியசாமி, “தேம்பாவணியும் இரட்சணிய யாத்திரிகமும் இயேசு பெருமானின் வரலாற்றைக் கூறுவனவாயினும் அவை அதனை முற்றக் கூறுவனவாயில்லை. இக்குறையை நீக்கி, இயேசுவின் வரலாற்றை முழுவதுமாகக் கூறும் செய்யுள் நூல் ஒன்றை இயற்றவேண்டும் என்ற எண்ணத்தால் இக்காப்பியம் பாடப்பட்டது.” என்றும், இயேசு சபையைச் சேர்ந்த திரு ஜே.எஃப். பெர்னாண்டோ எழுதிய ‘சேசு கிறிஸ்து நாதரின் ஜீவிய சரித்திரம்’ என்னும் நூலை அடியொற்றி ‘சுடர்மணி’ என்ற தலைப்பில் இயேசுவின் வாழ்க்கையைச் செய்யுள் வடிவில் இயற்றியதாகவும் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இயேசு கிறிஸ்துவின் வாழ்வும் வரலாறும் மக்கள் வாழ்க்கைக்கு என்றும் குன்றாத சுடராக விளங்குவதால் இந்நூலுக்கு ‘சுடரமணி’ என்று பெயர் சூட்டினார் ஆசிரியர் எஸ். ஆரோக்கியசாமி.

ஆசிரியர் குறிப்பு

சுடர்மணி காப்பிய நூலை இயற்றியவர், எஸ். ஆரோக்கியசாமி. இவர், விழுப்புரத்திற்கு அருகிலுள்ள கோலியனூரில் 1912-ல் பிறந்தார். திண்டிவனத்திலுள்ள ரோமன் கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் எட்டாம் வகுப்புவரை படித்தார். அதே பள்ளியில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். ஓவிய ஆசிரியராகப் பணியாற்றினார். தமது தமிழாசிரியர் சுந்தரேச ஐயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார் . குறிப்பாக வெண்பா, விருத்தம் ஆகியவற்றை இயற்றும் நுட்பங்களை முழுமையாகக் கற்றுக் கொண்டார். தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டாண்மைக் கழகப் பள்ளிகளில் 37 ஆண்டுகள் பணியாற்றி, தலைமை ஆசிரியராகப் பணி ஓய்வு பெற்றார்.

எஸ். ஆரோக்கியசாமி, கணிதத்தை விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் கற்பிக்கும் ‘கணித ஜாலம்’ என்ற நூலை இயற்றினார். சிலுவைப் பாதை, செபப் பாமாலை, வேளாங்கண்ணி மாதா சரித்திரம், மறைத் தொண்டர் புராணம் போன்றவை இவர் இயற்றிய பிற நூல்கள். சிறந்த ஆசுகவி யாகத் திகழ்ந்த இவர், 1985-ல், காலமானார்.

நூல் அமைப்பு

சுடர்மணி என்னும் காப்பியம், பாயிரம் நீங்கலாக, பால காண்டம், உபதேச காண்டம், மீட்புக் காண்டம், உத்தான காண்டம் என நான்கு காண்டங்களைக் கொண்டுள்ளது. விருத்தப்பாவில் இயற்றப்பட்ட இந்நூலில் 1201 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

பால காண்டம்

பால காண்டத்தில் 141 பாடல்கள் உள்ளன. இது,

  1. தூதுப் படலம்
  2. அவதாரப் படலம்
  3. காட்சிப் படலம்
  4. நசரைப் படலம்

- என நான்குப் படலங்களைக் கொண்டுள்ளது.

உபதேச காண்டம்

உபதேச காண்டத்தில் 703 பாடல்கள் உள்ளன. இக்காண்டத்தில்,

  1. திருமுழுக்காட்டுப் படலம்
  2. சோதனைப் படலம்
  3. சீடரைச் சேர்த்த படலம்
  4. திருமணப் படலம்
  5. ஆலயப் படலம்
  6. நிக்கோதேமுப் படலம்
  7. சமாரியப் படலம்
  8. கலிலேயாப் படலம்
  9. வினை விலக்குப் படலம்
  10. திருமலைப் படலம்
  11. அற்புதப் படலம்
  12. உவமப் படலம்
  13. பொய்கைப் படலம்
  14. சயீர்ப் படலம்
  15. தூதுவிடு படலம்
  16. சீவ அப்பப் படலம்
  17. மரபு கண்டனப் படலம்
  18. தரிசனப் படலம்
  19. பண்டிகைப் படலம்
  20. கோவிற் படலம்
  21. ஆயற் படலம்
  22. நல்லுரைப் படலம்
  23. வாதுப் படலம்
  24. விருந்துப் படலம்
  25. கருணைப் படலம்
  26. செல்வப் படலம்
  27. உயிர் மீட்ட படலம்
  28. செபப் படலம்
  29. இல்லறப் படலம்
  30. எரிக்கோ படலம்

- எனும் 30 படலங்கள் அமைந்துள்ளன.

மீட்புக் காண்டம்

மீட்புக் காண்டத்தில் 437 பாடல்கள் உள்ளன. இக்காண்டத்தில்,

  1. ஊர்வலப் படலம்
  2. திங்கள் படலம்
  3. கண்டனப் படலம்
  4. ஊழிப் படலம்
  5. பாஸ்காப் படலம்
  6. நற்கருணைப் படலம்
  7. சிறையேற்ற படலம்
  8. விசாரணைப் படலம்
  9. சிலுவைப் படலம்
  10. சமாதிப் படலம்

- எனப் பத்துப் படலங்கள் உள்ளன.

உத்தான காண்டம்

உத்தான காண்டத்தில், 60 பாடல்கள் உள்ளன. இக்காண்டத்தில்,

  1. எருசலைப் படலம்
  2. திபேரியாப் படலம்
  3. ஆரோகணப் படலம்

- என மூன்று படலங்கள் உள்ளன.

உவமை, உருவகம், வருணனை, அணிநயம், திருக்குறள் மற்றும் விவிலியக் கருத்துக்களைக் கொண்டதாக சுடர்மணி காப்பியம் அமைந்துள்ளது.

காப்பியத்தின் கதை

சுடர்மணி காப்பியம்  உலக மீட்பர், வள்ளல், அண்ணல், தூயோன் எனப் பலவகையிலும் புகழ்பெற்ற இயேசுவின் வரலாற்றைக் காப்பிய வடிவில் கூறுகிறது. இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு, அவர் பாவப்பட்ட மனிதர்களுக்குப் பல்வேறு வகையில் உதவியது, நோய்கள் நீக்கியது, அற்புதங்கள் நிகழ்த்தியது போன்றவற்றை விரிவாகப் பதிவு செய்துள்ளது.

பாடல்கள் நடை

இயேசுவின் அறவுரை:

எந்தையே ஓய்வு நாளில்

இதஞ்செயத் தகுமோ என்ன

நன்றுனது ஆட்டில் ஒன்று

நடுக்குழி நீரில் வீழ்ந்தால்

அன்றுநம் ஓய்வை யெண்ணி

அமர்ந்திருப் பாயோ என்றார்


கூட்டத்தில் கைம்மெ லிந்து

குறுகிய ஒருவன் தன்னை

நீட்டிடு கரத்தை என்ன

நீண்டஅக் கரத்தைக் காட்டி

ஆட்டினும் மனிதன் மேலோன்

அவன்பிணி ஓய்வு நாளில்

ஓட்டுதல் நன்றே அன்றோ?

உன்னுங்கள் இதனை என்றார்


இயேசு சிலுவைச் சுமப்பதைக் கண்ட இயற்கையின் வருத்தம்:

மீட்பர் சிலுவை யின்சுமையால்

மெலிந்தே வீழும் நிலைகண்டு

ஆட்டங் கொண்ட ஆழ்கடலும்

அலையை எழுப்பி அழுதேங்க

ஒட்டங் கொண்ட உயிரினங்கள்

உலகை விட்டே மடியாமல்

நாட்டார் தம்மைப் பழிதீர்க்க

நாடி யாங்காங் கோடினவே.


மழையின் அழுகை:

கழுமரம் மீதில் தொங்கும்

கர்த்தரைக் கண்ட மேகம்

பழுதின்றி நிலைத்து நின்ற

பான்மையை விடுத்தே ஓடி

அழும்மக்க ளோடு சேர்ந்தே

அழுததை இன்றும் எண்ணி

அழுவதே மழையாம் என்றிங்கு

அறிந்தவர் உண்டோ அம்மா

மதிப்பீடு

இருதபாம் நூற்றாண்டுக் கிறித்தவக் காப்பியங்களுள் ஒன்று சுடர்மணி. காப்பியம் என்றாலும் காப்பிய நெறிமுறைகளுக்குட்ப்பட்டு  இந்நூல் அமையவில்லை. என்றாலும் பல்வேறு இலக்கியச் சிறப்புகளுடன், அணி நயங்களுடனும் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைக் கூறும் ஒரு வரலாற்று நூலாக சுடர்மணி நூல் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

  • கிறித்தவக் காப்பியங்கள், முனைவர் யோ. ஞானசந்திர ஜாண்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2013

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.