சு. சமுத்திரம்
சு. சமுத்திரம் ( 1941 – ஏப்ரல் 1, 2003) தமிழ் எழுத்தாளர். வேரில் பழுத்த பலா என்ற நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்.
பிறப்பு, கல்வி
சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ஆம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார்.
தனி வாழ்க்கை
அகில இந்திய வானொலியின் தமிழ் சேவைப் பிரிவில் பணியில் சேர்ந்தார். பின் மத்திய அரசின் செய்தி- விளம்பரத் துறையில் பணிபுரிந்தார்.
சு, சமுத்திரத்தின் மனைவி பெயர் கோகிலா.
எழுத்து
சு. சமுத்திரம், தன் நண்பர்களுடன் இணைந்து 'தேசிய முழக்கம்' என்கிற நாளிதழை வெளியிட்டார். 1973-ல் தில்லியில் இருந்த போது அவரது முதல் கதை 'கடல் மணி' குமுதம் இதழில் வெளிவந்தது.
சு.சமுத்திரம் இடதுசாரிக் கொள்கையில் நாட்டம் உடையவர், முற்போக்குச் சிந்தனையாளர். ஆனந்த விகடன், கல்கி, குமுதம் ஆகிய பத்திரிக்கைகளில் வெளிவந்த கதைகளின் யதார்த்தவாதமும், மனித நேயமும் இடதுசாரி வாசகர்களைக் கவர்ந்தன. தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கிறிஸ்தவ இலக்கிய சங்கம் போன்ற இடதுசாரி இலக்கிய அமைப்புகளால் சிறப்பிக்கப்பட்டார்
கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தின் கருத்தரங்குகளில் அவரது 'ஊருக்குள் புரட்சி', 'சோத்துப் பட்டாளம்' ஆகிய நாவல்கள் வெளியிடப்பட்டன. சு.சமுத்திரம் , லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக எழுதி மேடை ஏற்றினார். 'ஏகலைவன்' பதிப்பகத்தை தொடங்கி தம் படைப்புகளை வெளியிட்டார்.
சு. சமுத்திரம், 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன அவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. 1990-ல் சு. சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா' நாவலுக்கு 1990- ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. இவரது 'வாடாமல்லி' நாவல் திருநங்கையரின் வாழ்வைப் பற்றிப் பேசிய முதல் தமிழ் நாவல்.
விருதுகள்
- சாகித்திய அகாதமி விருது -1990.
- தமிழ் அன்னை பரிசு - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம்
- இலக்கியச் சிந்தனை - சிறுகதைப் பரிசு.
- கலைஞர் விருது - முரசொலி அறக்கட்டளை (மறைவுக்குப்பின்)
இலக்கிய இடம்
சு.சமுத்திரத்தின் எழுத்துக்கள், ஏழை எளியவர்களைப் பற்றி, அடக்கி ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றி, அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி எழுதப்பட்டவை. "மனித மனத்தின் சிறுமையை, நம் அமைப்புகளின் ஈவிரக்கமற்ற தன்மையைப் பிடித்து நிறுத்திக் கன்னத்திலறைவதுபோன்ற நடையில் எள்ளலும் எரிச்சலுமாக எழுதியவர் அவர். வாசக ஊகத்துக்கோ கற்பனைக்கோ ஒரு துளிகூட மிச்சம் வைப்பதில்லை. பல கதைகள் ரத்தம் கொதிக்கச்செய்பவை. ஊமை ஜனங்கள், கைவிடப்பட்ட மக்கள் – அவருடைய மொழியில் சொல்லப்போனால் 'சோற்றுப்பட்டாளம்'- தான் அவருடைய கதைமனிதர்கள். ஒவ்வொரு கதையும் அந்த மனிதர்களுக்காக நரம்பு புடைக்க தொண்டை தெறிக்கக் குரலெழுப்புகிறது. சு.சமுத்திரம், கடைசிவரை அவர்களில் ஒருவராகவே இருந்தார்" என எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.
நூல்கள்
தமிழக அரசால் 2008-ல் சு. சமுத்திரம் எழுதிய கீழ்காணும் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
- ஆகாயமும் பூமியுமாய்....
- இல்லந்தோறும் இதயங்கள்
- இன்னொரு உரிமை
- ஈச்சம்பாய்
- ஊருக்குள் ஒரு புரட்சி
- என் பார்வையில் கலைஞர்
- எனது கதைகளின் கதைகள்
- ஒத்தைவீடு
- ஒரு கோட்டுக்கு வெளியே
- ஒரு சத்தியத்தின் அழுகை
- ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்
- கடித உறவுகள்
- காகித உறவு
- குற்றம் பார்க்கில்
- சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்
- சத்திய ஆவேசம்
- சமுத்திரக் கதைகள்
- சமுத்திரம் கட்டுரைகள்
- சாமியாடிகள்
- சிக்கிமுக்கிக் கற்கள்
- சோற்றுப்பட்டாளம்
- தாய்மைக்கு வறட்சி இல்லை
- தராசு
- தலைப்பாகை
- தாழம்பூ
- நிழல் முகங்கள்
- நெருப்பு தடயங்கள்
- பாலைப்புறா
- புதிய திரிபுரங்கள்
- பூ நாகம்
- மண்சுமை
- மூட்டம்
- லியோ டால்ஸ்டாய் (நாடகம்)
- வளர்ப்பு மகள்
- வாடாமல்லி
- வெளிச்சத்தை நோக்கி
- வேரில் பழுத்த பலா
மறைவு
சு. சமுத்திரம் ஏப்ரல் 3, 2003-ல்சென்னையில் ஒருசாலை விபத்தில் உயிரிழந்தார்.
சு. சமுத்திரத்தின் இலக்கியப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் அவர் எழுதிய 'பாலைப் புறா' நாவலை தமிழ்நாடு அரசின் சுகாதார துறை 5 ஆயிரம் பிரதிகளை விலை கொடுத்து வாங்கியதோடு, அந்த நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கமும் செய்தது. இந்திய இலக்கிய சிற்பிகள் நூல்கள் வரிசையில், இரா. காமராசு எழுதிய சு. சமுத்திரம் பற்றிய நூல் வெளியிடப்பட்டுள்ளது.
உசாத்துணை
- ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல், சு. சமுத்திரம், தினமணி இணைய இதழ்
- கடலடியில், சு. சமுத்திரம் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்
- சு. சமுத்திரத்தின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள், தமிழ் இணையக் கல்விக் கழகம்
✅Finalised Page