திருநந்திக்கரை குகைக்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை சிவன் கோவிலை அடுத்து உள்ள கி.பி. 8 ஆம் நூற்றாண்டை சார்ந்த குடைவரை கோவில். சமண்ர்களால் அகழப்பட்டு பிற்காலத்தில் சிவ ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. மங்கிய நிலையில் கேரள பாணி தாவர சாய ஓவியங்கள் உள்ளன. மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பட்டில் உள்ளது.
இடம்
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம், திருவட்டாறு பஞ்சாயத்து யூனியனில் உள்ளது மார்த்தாண்டம் பேச்சிப்பாறை சாலையில் குலசேகரத்திலிருந்து 4 கி. மீ. தொலைவில் உள்ளது திருநந்திக்கரை. திருநந்திக்கரை சிவன் கோவிலின் அருகே உள்ள உளுத்துப்பாறை என்னும் பாறையில் குடைவரை கோவில் உள்ளது.
கோவில் அமைப்பு
திருநந்திக்கரை உளுத்துப்பாறையின் தெற்கு பக்க சரிவில் குடைவரை கோவில் அகழப்பட்டுள்ளது. குகை தரை மட்டத்திலிருந்து 4 மீ உள்ளது. குகைகோயில் செல்ல பாறை சரிவில் 10 படிகள் வெட்டப்பட்டுள்ளன, இதில் இரண்டு படிகள் தொல்லியல் அளவீட்டு துறையினரால் வெட்டப்பட்டது. கோவிலுக்கு வெளியே முன்பகுதியில் கிழக்கு மேற்காக 5.68 மீ நீளமும் வ்டக்கு தெற்காக 64 செ.மீ. நீளமும் கொண்ட பாறை தரை உள்ளது. குடைவரை கோவில் முகப்பு, முகமண்டபம், உள்மண்டபம், கருவறை என நான்கு பகுதிகளை கொண்டது.
முகப்பு
இக்குடைவரை கோவிலின் முகப்பு இரண்டு முழுத்தூண்களும், இரண்டு பக்கமும் அரைத்தூண்களும் உள்ளன. நான்கு தூண்களும் மூன்று அங்கணங்களும் செதுக்கப்பட்டுள்ளன. கூரைச் சரிவில் கபோதம் முறையாகக் காட்டப்படவில்லை. முழுத்தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களின் மேலே விரிகோணப் போதிகைகள் உள்ளன. அரைத்தூண்களை ஒட்டிய பாறையில் இரண்டு பக்கமும் ஆழமில்லாத கோட்டங்கள் அகழப்பட்டுள்ளன. இக்கோட்டங்களில் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.[1]
மண்டபம்
முகமண்டபம் உள்மண்டபம் என்று இரு பிரிவுகளை கொண்டது. உள்மண்டபம் முகமண்டபத்திலிருந்து 6 செ.மீ. உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது. முகமண்டபத்தின் மேற்புறச் சுவரில் விநாயகர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. உள்மண்டபத்தின் வடபுறத்துச் சுவர்மீது சுதை பூசி எழுதப்பட்ட பல ஓவியங்கள் அழிந்து காணப்படுகின்றன. ஒரு ஓவியத்தில் உள்ள மனிதமுகத்தை மட்டும் தற்போது அடையாளம் காணமுடிகிறது[1].
கருவறை
உள்மண்டபத்தின் மேற்குச் சுவரில் கிழக்குப் பார்த்து கருவறை உள்ளது. 2.15 மீ நீள அகலத்துடன் சதுர வடிவில் கருவறை உள்ளது. கருவறைச் சுவரின் நுழைவாயிலின் நிலையமைப்பை ஒட்டி இரண்டு அரைத்தூண்கள் உள்ளன. குடைவரைக்குக் கிழக்கேயுள்ள பாறைச் சரிவின் கீழ்புறத்தில் அகழப்பட்ட கோட்டத்தில் சிவலிங்கத்தின் பாணம் செதுக்கப்பட்டுள்ளது[1].
உசாத்துணை
- சிவாலய ஓட்டம், முனைவர் அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2021.
- திருநந்திக்கரை குடைவரைக் கோவில், கன்னியாகுமரி மாவட்டம் - முத்துசாமி இரா
இணைப்பு
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.