தென்மொழி (இதழ்)
தென்மொழி (1959), தனித்தமிழ் இயக்கத் திங்களிதழ். ஞா. தேவநேயப் பாவாணர் இதன் சிறப்பாசிரியராகவும், பெருஞ்சித்திரனார் இதன் ஆசிரியராகவும் செயல்பட்டனர். தமிழின் சிறப்பை, பெருமையை, உயர்வை அனைவருக்கும் உணர்த்துதல், தனித் தமிழ் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உழைத்தல், தமிழ் இன உறவை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தென்மொழி இதழ் வெளிவந்தது.
பிரசுரம், வெளியீடு
தனித் தமிழ் இயக்க வளர்ச்சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு, பெருஞ்சித்திரனார், நெல்லிக்குப்பத்தில், நவம்பர் 1959-ல், தென்மொழி இதழைத் தொடங்கினார். இதழுக்கு இப்பெயரைச் சூட்டிய ஞா. தேவநேயப் பாவாணர், இதழின் சிறப்பாசிரியராகச் செயல்பட்டார். பெருஞ்சித்திரனார் ஆசிரியர். ம.இலெ. தங்கப்பா, மு. சாத்தையா, செம்பியன் ஆகியோர் உறுப்பாசிரியர்களாகச் செயல்பட்டனர். தாமரை (பெருஞ்சித்திரனாரின் மனைவி) இதழின் உரிமையாளராகவும், உலகமுதல்வி வெளியீட்டாளர்களாகவும் இருந்தனர்.
ஆரம்பத்தில் நெல்லிக்குப்பம் சிறீதரன் அச்சகத்திலும், குரு அச்சகத்திலும், திருப்பாதிரிப் புலியூர் மித்திரா அச்சகத்திலும் தென்மொழி அச்சிடப்பட்டது. பின்னர் கடலூர் தென்மொழி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியானது. இதழ் சென்னைக்கு மாற்றமான பின் திருவல்லிக்கேணி தென்மொழி அச்சகத்தில் அச்சிடப்பட்டது. ஆரம்ப கால இதழின் விலை 50 காசுகளாக இருந்தது. பின்னர் கால மாற்றத்திற்கேற்ப விலையில் மாற்றம் செய்யப்பட்டது. தொடக்க காலத்தில் 38 பக்கங்களுடன் வெளிவந்த இதழ் , பின்னர் கால மாற்றத்திற்கேற்றவாறு 72 பக்கங்கள், 64, 56, 48 பக்கங்களில் வெளிவந்தது. அட்டையில் ‘தனித்தமிழ் இலக்கியத் திங்களிதழ்’ என்ற குறிப்பு இடம் பெற்றது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.