குத்தூசி (இதழ்)
குத்தூசி (1962), சா. குருசாமி என்று அழைக்கப்படும் குத்தூசி குருசாமி தொடங்கிய பகுத்தறிவு மாத இதழ். சுயமரியாதைக் கொள்கை சார்ந்த கட்டுரைகள், அரசியல், வரலாறு, இலக்கியம், மொழி ஆய்வு, மருத்துவம், பொது அறிவு சார்ந்த கட்டுரைகள் இவ்விதழில் வெளிவந்தன.
பதிப்பு, வெளியீடு
விடுதலை இதழில் ‘குத்தூசி’ என்ற புனை பெயரில் பலகட்டுரைகளை எழுதியதால் குத்தூசி குருசாமி என அழைக்கப்பட்ட சா. குருசாமி தொடங்கிய இதழ், குத்தூசி. சென்னையிலிருந்து, 1962 முதல், ஒவ்வாரு மாதமும் 4 ஆம் தேதி குத்தூசி இதழ் வெளிவந்தது. 84 பக்கங்களுடன் வெளிவந்த இவ்விதழின் தன்னிப்பிரதி விலை: 50 காசுகள். ஆண்டுக்கட்டணம்-உள்நாடு: ரூபாய் ஐந்து. வெளிநாடு-ரூபாய் ஒன்பது. கொழும்பு - ரூபாய் 6.
உள்ளடக்கம்
குத்தூசி இதழின் முகப்பு அட்டையில் உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்கள், சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள், கவிஞர்கள் படங்கள் இடம்பெற்றன. அவர்களைப் பற்றிய கட்டுரைகள் இதழின் உள்ளே இடம் பெற்றன. ‘குத்தூசி’ மாத வெளியீடு என்ற தலைப்பின் கீழ், ஆங்கிலத்தில், 'KUTHOOSI: HIGH CLASS THAMIZH MONTHLY' என்ற வாசகங்கள் இடம் பெற்றன. இதழின் தொடர் ஆண்டையும், மலரையும் குறிக்க ஊசி, குத்து என்ற வாசகங்கள் பயன்படுத்தப்பட்டன. இதழ் தோறும் கேலிச் சித்திரங்கள் இடம் பெற்றன.
இதழின் உள்ளே தலையங்கப் பகுதியில், ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்ற வாசகம் இடம் பெற்றது. இதழின் தலைப்பான குத்தூசி என்பதன் கீழே ஊசியின் படம் இடம் பெற்றது. ‘உலகப் பெரியார் வரலாறு’ என்ற தலைப்பில் லெனின், மாசேதுங் உள்ளிட்ட பலரைப் பற்றித் தொடர் ஒன்றை எழுதினார் சா.குருசாமி. பகுத்தறிவைக் காட்டும் உருவகக் கதைகள் இடம் பெற்றன. ‘தெய்வீகக் கொலை’ என்ற தலைப்பில் மதம் தொடர்பாக நிகழ்த்தப்பெறும் கொலைகள் பற்றிய கட்டுரை வெளியானது. உடுமலை சாந்திதாசன் என்பவர் மரபுப் பாக்களின் வழி பகுத்தறிவுக் கருத்துகளை விளக்கி எழுதினார். இயக்கத்தவர்களின் கருத்துக்களும், விமர்சனங்களும் இடம் பெற்றன. புலவர் வி.பொ. பழனிவேலன் இதழ்தோறும் பகுத்தறிவு விளக்கக் கட்டுரைகளை எழுதினார். விளம்பரங்களுக்கும் இவ்விதழ் இடமளித்தது. நீடித்த விளம்பரங்களுக்கு 50% கழிவு என்று விளம்பரப்படுத்தியது.
’கவிதைப் பகுதி’ என்பதில் கபிலர் அகவல் தொடர் இடம் பெற்றது. திருக்குறளில் இன்பத்துப் பால் பற்றிய தொடர் வெளியானது. வாசார் கடிதங்களுக்கு குத்தூசி இதழ் முக்கியத்துவம் அளித்து வெளியிட்டது. நூல் மதிப்புரைகளும், அறிஞர்களின் பொன்மொழிகளும் இடம் பெற்றன. மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் வெளியாகின.
பங்களிப்பாளர்கள்
- சா. குருசாமி
- பகீரதன்
- புலவர் வி.பொ. பழனிவேலன்
- உடுமலை சாந்திதாசன்
- மனசை ப. கீரன்
- சோ. இலட்சுமிரதன் பாரதி, பி.ஏ.பி.எல்.
- மு.குழந்தைவேலன் பி.ஏ.
- மருத்துவர் பி.என். பாலசுப்பிரமணியன்
- கோ. இராமச்சந்திரன் எம்.ஏ.
- கே.எஸ். மகாதேவன், பிஎஸ்ஸி. எம்.ஏ.
- டாக்டர் எம்.ஜே.கே. தவராஜ்
- டாக்டர் பா. நடராஜன் எம்.ஏ., டி.லிட், எம்.எல்.ஏ.
- காதம்பரி
- ப. திருவேங்கடம்
- ச. செந்தில்நாதன்
- கோவை மாறன்
- த. சலாவுத்தீன் பி.எஸ்ஸி.
- கே.எஸ். மகாதேவன்
- நா. வரதராஜுலு நாயுடு
- சிவா எம்.ஏ.
- திருச்சி இராசன்
- தஞ்சை இளஞ்சித்திரன்
நிறுத்தம்
குத்தூசி இதழ், பொருளாதாரக் காரணங்களால் 1965-க்குப் பின் நின்றுபோனது.
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.