நமிநந்தியடிகள் நாயனார்
நமிநந்தியடிகள் நாயனார் சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.
வாழ்க்கைக் குறிப்பு
நமிநந்தியடிகள் நாயனார், சோழ நாட்டில் உள்ள ஏமப்பேரூரில் அந்தணர் குலத்தில் தோன்றினார். சிவபக்தராகத் திகழ்ந்த இவர், தினந்தோறும் திருவாரூருக்குச் சென்று இறைவனை வணங்கி வழிபட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
தொன்மம்/சிவனின் ஆடல்
ஒரு நாள் திருவாருக்குச் சென்ற நமிநந்தியடிகள் இறைவனை வணங்கி வழிபட்டார். பின் அறனெறி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை வணங்குவதற்காகச் சென்றார். அங்கு எண்ணற்ற தீபங்களை ஏற்றி எம்பெருமானை வழிபட வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. அப்போது பின்மாலைப் பொழுதாகி இருந்ததால் தனது ஊருக்குச் சென்று நெய் வாங்கி வந்து விளக்கேற்ற தாமதமாகும் என்பதால் அவ்வூரிலேயே ஏதாவது ஒரு வீட்டில் நெய்யை வாங்கிக் கொண்டு வந்து விளக்கெற்றலாம் என்று முடிவு செய்தார்.
அதன்படி ஆலயத்தின் அருகே இருந்த ஓரு வீட்டிற்குச் சென்றார். அது சமணர்கள் வசிக்கும் வீடு என்பதை அறியாமல் அங்குள்ளவர்களிடம் நெய் கேட்டார். அவர்களோ, “உங்கள் சிவபெருமான்தான் கையிலேயே நெருப்பை வைத்திருக்கிறாரே! அப்புறம் எதற்கு அவருக்கு விளக்கு? இங்கே நெய்யில்லை. அப்படியும் விளக்கெரிக்கத்தான் வேண்டுமென்றால் தண்ணீரை ஊற்றி எரியுங்களேன்” என்றனர்.
நமிநந்தியடிகள் வருத்தத்துடன் ஆலயத்துக்குத் திரும்பி வந்தார். இறைவனுக்காக ஒரு விளக்கைக் கூடத் தன்னால் ஏற்ற முடியவில்லையே என்று மனம் வருந்தினார்.
அப்போது வானில் அசரீரி ஒலித்தது. “நமிநந்தியே! கவலை வேண்டாம். அருகே உள்ள குளத்தில் இருந்து நீரை எடுத்து வந்து விளக்கேற்றுவாயாக” என்றது அது.
நமிநந்தியடிகள், இறைவனின் திருவருளை எண்ணி மகிழ்ந்தார். உடன் குளத்திற்கு ஓடோடிச் சென்றார். திருவைந்தெழுத்தை ஓதியவாறே நீரை முகந்து கொண்டு ஆலயத்துக்கு வந்தார். அகலில் திரியிட்டு, எண்ணெய்க்குப் பதிலாக அதில் நீர் வார்த்து விளக்கேற்றினார். அந்த விளக்கு சுடர் விட்டு எரிந்தது.
மகிழ்ந்த நமிநந்தியடிகள், சிவபிரானது அருளைக் கிண்டலாகப் பேசிய சமணர்கள் வாயடைத்துப் போகும்படி குளத்து நீரை முகந்து ஊற்றி கோயில் முழுவதும் விளக்கேற்றினார். விளக்குகள் அணையாமல் விடிய விடிய எரிவதற்கு ஏற்றபடி அள்ளி அள்ளி நீரை ஊற்றி அகல்களை நிறைத்தார். தொடர்ந்து நாள் தோறும் நீரால் விளக்கேற்றும் இத்திருப்பணியைச் செய்து வந்தார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.