கழார்க்கீரன் எயிற்றியார்
கழார்க்கீரன் எயிற்றியார் சங்ககாலப் பெண்பாற் புலவர். இவர் பாடிய எட்டு பாடல்கள் சங்கத்தொகை நூலான அகநானூறு, குறுந்தொகையில் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
தஞ்சாவூரில் கழார் என்னும் காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் இருக்கும் சிற்றூரில் கழார்க்கீரன் எயிற்றியார் பிறந்தார். காவிரி பூம்பட்டினத்திற்கு அருகில் இருக்கும் ஊர். மத்தி என்ற சோழ மன்னனின் ஆட்சி காலத்தில் கீரன் வாழ்ந்தார். கீரன் என்பது சங்கை அறுத்து வளையல் செய்வதை குலத்தொழிலாகக் கொண்டவர்களை அழைக்கும் சொல். நக்கீரர் பிறந்த குடி. எயினி, எயிற்றி போன்றவை குறிஞ்சி நிலப்பெண்கள் பெயர். குறிஞ்சி நிலத்தில் பிறந்து கீரன் குலத்தில் மணம் முடித்தவராக ஆய்வாளர்களால் கருதப்படுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
கழார்க்கீரன் எயிற்றியார் அகநானூற்றில் 163, 217, 235, 294 ஆகிய பாடல்களும் குறுந்தொகையில் 135, 261, 281, 312 ஆகிய பாடல்களும் பாடினார். இவர் பாடல்கள் பெரும்பாலும் குளிர்காலத்தின் கொடுமைகளை விளக்கும் பாடல்கள்.
பாடல்வழி அறியவரும் செய்திகள்
- தாம் உண்ணும் முன் காக்கைக்கு சோறு போடும் இயல்பு கொண்ட மக்கள். காற்றும் மழையும் அடிக்கும் காலத்திலும் வழக்கமாக அச்சோற்றிற்காக அதே இடத்தில் உட்காரும்.
- நள்ளிரவில் விழித்திருந்து காவல் காக்கும் நகர்க்காவலர் இருக்கும் ஊர்
- வண்ணாத்தி கஞ்சியில் தோய்த்து ஒரு முறை தப்பிவிட்டுத் தண்ணீரில் போட்ட வெள்ளாடை முறுக்கு நெகிழந்து தோன்றும்
- முன்பனிக் காலம்: யானை பெருமூச்சு விடுவது போல் நீர் திவலைகளைத் தெளித்துக்கொண்டு குளிர்வாடைக்காற்று வீசும். தாமரைப் பூ கரிந்து போகும். குன்றமே நடுங்குவது போன்ற குளிர்.
- ஆற்றில் நீர் ஓடும்போது அதில் உள்ள மணல் உருண்டு ஓடுவது போல என் நெஞ்சு நெகிழ்ந்து ஓடுகிறது.
- குளிர்க்காலம்: உடம்பைப் பொத்தவைக்கும். வில்லால் அடித்த பஞ்சு போல் பனி கொட்டிக் கிடக்கும். வயலில் கரும்புப் பூ வெள்ளை நிறத்தில் பூத்து, காம்பில் வாடைக்காற்றில் அசைந்தாடும். பகன்றை தோலில் பதித்த வட்டக் கண்ணாடி போல் வெள்ளை நிறத்தில் மலரும். அவரை கோழிக்கால் போன்ற கொழுத்த இலைகளோடு மொட்டு விட்டுப் பூக்கும். உதிரும் பூவாகிய தோன்றி மலரும். குருகு குரல் எழுப்பும்.
- பனிக்காலம்: முசுண்டைப் பூக்கள் விண்மீன் போலப் புதர்களில் பூத்துக் குலுங்கும். நண்டு வளைக்குள் ஓடி ஒளியும்.
- பனிக்காலம்: மழைக்கட்டிகளுடன் மழை பொழியும். பூக்களின் உட்புறமெல்லாம் புள்ளிப் புள்ளியாக பூக்களில் பனித்திவலைகள் நிறையும்படி பனி பொழியும். கருவிளை என்னும் காக்கணம் பூக்கள் காதலரைப் பிரிந்த மகளிரின் கண்ணீர் போலப் பனித்துளிகள் வழிய மலர்ந்தன. பஞ்சு போன்ற தலையுடன் ஈங்கைப் பூ, நெய்யில் நனைத்தது போல நீரில் நனைந்த தளிரோடு, இரண்டாகப் பிளந்த ஈரல் போல பனி ஈரத்துடன் மலரும். அவரையின் இளம் பூக்கள் மலரும்.
அகன்ற வயலில் நெல் கதிர் வணங்கி நிற்கும்.
- மிகுதியாக மழை பெய்ததால் பதம் கெட்டு அழிந்து மெலிந்த உள்ளீடு இல்லாத காய்களை உடைய எள்ளுச்செடிகளைப் போல மன உளைச்சலுடன் தன் நிம்மதியை இழந்து வாடும் தலைவி
- குறைவாக மழை தூறும் கார்காலத்தின் இறுதி நாட்களில் சேற்றில் நிற்பதை வெறுத்து சிவந்த கண்களை உடைய எருமை இருள் செறிந்த நடு இரவில் ”ஐ” என்று கத்துகின்ற அச்சம் உண்டாகும் காலத்தில் தலைவியின் கண்கள் தூங்காமல் விழித்தன.
பாடல் நடை
- அகநானூறு 163 (திணை: பாலை)
கூற்று: பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது.
களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை
முளரி கரியும் முன்பனிப் பானாள்,
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை!
எனக்கே வந்தனை போறி!
- குறுந்தொகை 135 (திணை: பாலை)
கூற்று: தலைவன் பிரியுமென வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க் காடவர் உயிரென
நமக்குரைத் தோருந் தாமே
அழாஅல் தோழி அழுங்குவர் செலவே.
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.