கார்டூனிஸ்ட் மதி
சு. மாரியப்பன் (மதி; கார்டூனிஸ்ட் மதி; அடடே மதி; மதிகுமார்) (பிறப்பு: நவம்பர் 5, 1968) ஓவியர், கேலிச்சித்திரக்காரர். 20000-க்கும் மேலான கேலிச் சித்திரங்களை வரைந்துள்ளார். இவரது கேலிச் சித்திரங்கள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. ஒளிப்படம் எடுப்பதில் தேர்ந்தவர்.
பிறப்பு, கல்வி
மாரியப்பன் என்னும் இயற்பெயரை உடைய ’மதி’, நவம்பர் 5, 1968 அன்று திருநெல்வேலியில், ஆ.சுப்பிரமணியன்-மரகதகோமதி இணையருக்குப் பிறந்தார். பள்ளிப் படிப்பை பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை, தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியிலும் கற்றார்.
தனி வாழ்க்கை
‘ஆனந்தவிகடன்’ மாணவ நிருபர் திட்டத்தின் மூலம் இதழியலாளர் ஆனார். பல்வேறு இதழ்களுக்குக் கேலிச் சித்திரங்கள் வரைந்து வருகிறார். மணமானவர்.
இதழியல் வாழ்க்கை
மதி, சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஈடுபாடு கொண்டிருந்தார். அம்புலிமாமா, ரத்னபாலா, குமுதம், ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்கள் மூலம் வாசிப்பார்வம் வளர்ந்தது. கல்லூரியில் படிக்கும் போதே கல்லூரி அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்கள் வென்றார். 1990-ல், ‘ஆனந்தவிகடன்’ மாணவ நிருபர் திட்டத்தின் மூலம் இதழியல் துறைக்கு வந்தார். 1997 வரை சென்னையிலிருந்து வெளிவரும் ‘News Today’ ஆங்கில மாலைத் தினசரியில் கேலிச் சித்திரக்காரராகப் பணிபுரிந்தார்.
‘மாரி’ என்ற பெயரில் வரைந்துகொண்டிருந்தார், பின் சாவி இதழில் பணியாற்றும்போது தனது தாயாரின் பெயரான ‘மரகதகோமதி' என்பதன் முதல் மற்றும் இறுதி எழுத்தைச் சேர்த்து ‘மதி’ என்ற பெயரில் வரைந்தார். ‘இதயம் பேசுகிறது’ இதழில் ‘சிதம்பரம்’ என்ற பெயரில் வரைந்தார். ‘கல்கி’ இதழில் வெளியான இவரது ’ஜில்-ஜானு’ கேலிச்சித்திரங்கள் வாசக வரவேற்பைப் பெற்றன. ‘கோகுலம்’ இதழிலும் இவரது கேலிச் சித்திரங்கள் வெளியாகின. ‘துக்ளக்’ இதழில் பல கேலிச்சித்திரங்களை வரைந்தார். கதிரவன், வாசுகி போன்ற இதழ்களிலும் பங்களித்தார்.
1997-முதல் 2017 வரை தினமணி நாளிதழில் கேலிச் சித்திரக்காரராகப் பணிபுரிந்தார். இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ்களுக்கும் ஓவியங்கள் வரைந்தார். தற்போது சுதந்திர ஓவியராக, கேலிச் சித்திரக்காரராகப் பணிபுரிந்து வருகிறார்.
கேலிச் சித்திரங்கள்
சாவி இதழில் மதி வரைந்த அப்பு, குப்பு, கல்கியில் வரைந்த ’ஜில்-ஜானு’, தினமணியில் வரைந்த ‘அடடே’ போன்ற கேலிச் சித்திரங்கள் வாசக வரவேற்பைப் பெற்றவை.
கேலிச் சித்திரத் தொகுப்பு
தினமணியில் மதி வரைந்த கார்ட்டூன்களின் தொகுப்பு ‘தினமணிடூன்’ என்ற பெயரில் 2003-ல் வெளியானது. தமிழ் நாளிதழ்கள் வரலாற்றில் அரசியல், பொருளாதார மற்றும் சமூக கார்ட்டூன்களின் தொகுப்பு புத்தக வடிவில் வெளிவந்தது அதுவே முதன்முறை என்று மதிப்பிடப்படுகிறது. அதன் இரண்டாம் பாகம் 2005-ல் வெளிவந்தது. தொடர்ந்து மதியின் கேலிச்சித்திரங்கள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. கிழக்கு பதிப்பகம் பதிப்பித்த அந்த நூல்களை, அப்துல்கலாம் வெளியிட்டார்.
ஓவியர்கள், எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், தொழிலதிபர்கள் எனப் பலர் மதியின் கேலிச்சித்திரங்களால் கவரப்பட்டனர். கோவிட் தொற்றுநோய் காலத்தில் ஃபேஸ்புக்கில் மதி வரைந்த விழிப்புணர்வு கார்டூன்கள் பலராலும் வரவேற்கப்பட்டன.
கருத்துக்கள்
மதியின் கேலிச்சித்திரம் குறித்து சுந்தர ராமசாமி, “மதி, மரபு சார்ந்த நேற்றைய சித்திரக்காரர் என்று கருதப்பட இடமுண்டு. அவருடைய அகலமான, ஆழ்ந்து பதியும் வரிகள் விமர்சனத்துக்கு உள்ளாகலாம். ஆனால் ஒரு மொழி பேசும் மக்களை மட்டுமே இலக்காகக் கொண்ட இவரது கேலிச் சித்திரங்கள் அவற்றின் பிராந்தியப் பசுமை காரணமாக லட்சக்கணக்கான வாசகர்களுக்கு மகிழ்வூட்டி, மதி கூற வரும் செய்தியை அவர்கள் மனங்களில் ஆழமாகப் பதிக்கின்றன. மதியின் கேலிச் சித்திரங்கள் கோப, தாபங்களுக்கு அப்பாற்பட்டவை. இவருடைய விமர்சனங்களில் விருப்போ பகை உணர்ச்சியோ இருப்பதில்லை.” என்கிறார்.
அசோகமித்திரன், “என் நீண்ட ஆயுள் காரணமாக நான் புகழ்பெற்ற பிரிட்டிஷ் கார்ட்டூன் கலைஞர் டேவிட் லோ படங்களிலிருந்து இன்றைய மதி வரை கார்ட்டூன்களைப் பார்த்திருக்கிறேன். நகைச்சுவை, அரசியல், விமர்சனம் எல்லாருக்கும் பொதுதான். ஆனால் மதியுடைய நாட்டுப்பற்றும் மக்கள்பற்றும் எல்லாரிடமும் காணக் கிடைக்கவில்லை. இந்த ஒரு அம்சம்தான் மதியின் படங்களுக்கு ஒரு விசேஷப் பரிமாணம் தருகிறது. அவருடைய படங்களில் உள்ள சத்திய தரிசனம் அபூர்வமானது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்துல்கலாம், நடிகர் சிவகுமார், ஓவியர் மணியம் செல்வன், ஜெயகாந்தன், தி.க.சிவசங்கரன், சாலமன் பாப்பையா எனப் பலர் மதியின் கேலிச் சித்திரங்களை ரசித்துப் பாராட்டியுள்ளனர்.
எழுத்து
மதி கேலிச்சித்திரக்காரராக மட்டுமல்லாமல் சிந்திக்கக் கூடிய பல விழிப்புணர்வுக் கட்டுரைகளும் எழுதினார். ‘கார்ட்டூன் கட்டுரைகள்', ’சாத்திக்’கலாம்’ போன்ற தலைப்புகளில் மதி எழுதியவை வாசகர்களால் விரும்பி வாசிக்கப்பட்டன.
வரலாற்று இடம்
மதியின் கேலிச்சித்திரங்கள் சிரிக்க மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைப்பவை. சராசரி மனிதனின் குரலாக அவை வெளிப்பட்டன. சமகால இந்தியாவின், தமிழகத்தின் நிகழ்வுகளை, சமூக உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தும் ஒரு முயற்சியாக அவரது கேலிச்சித்திரங்கள் அமைந்தன. கட்சி சார்ந்த அமைப்புகளால், அரசியல்வாதிகளால் அவரது கேலிச்சித்திரங்களுக்குப் பல எதிர்ப்புகள், கண்டனங்கள் எழுந்தபோதும், அவர் அது பற்றிய சலனங்களின்றி தனது படைப்புகளை நேர்மையுடன் முன் வைத்தார். கணு, ஸ்ரீதர், ராமு, மதன் வரிசையில் தமிழின் முக்கியமான கேலிசித்திரக்காரராக மதி, மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- தினமணிடூன்
- மதிகார்டூன்ஸ்
- அடடே!.. (ஆறு தொகுப்புகள்)
- நூற்றுக்கு நூறு
- 20-20
- Exam Tips
- DOOSRA - A Decade of Cricket Through Cartoons
உசாத்துணை
- மதி இணையதளம்
- மதி நேர்காணல்: விகடன் இதழ்
- மதியின் கார்டூன்கள் வெளியீடு: பத்ரி சேஷாத்ரி
- மதியின் கார்டூன்கள் வெளியீடு: இட்லிவடை
- கார்டூன் வரைவது எப்படி?
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.