குழ. கதிரேசன்
குழ. கதிரேசன் (குழந்தையன் கதிரேசன்) (அக்டோபர் 17, 1949) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர். சிறார் இலக்கியப் படைப்பாளி. சிறார் பாட நூல்கள் ஆசிரியர். சாகித்ய அகாடமி வழங்கும் பால் சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர். ஐந்திணை பதிப்பகத்தை நிறுவி இலக்கிய நூல்களை வெளியிட்டு வருகிறார்.
பிறப்பு, கல்வி
குழ. கதிரேசன், புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தில், அக்டோபர் 17, 1949 அன்று, குழந்தையன் செட்டியார்-விசாலாட்சி ஆச்சி இணையருக்குப் பிறந்தார். பள்ளிக்க்கல்வியை ராயவரத்தில் உள்ள காந்தி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். புதுமுகக் கல்வியை மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் படித்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயின்று பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
குழ. கதிரேசன் சில காலம் மாவு அரைக்கும் மில்லில் மேற்பார்வையாளராகப் பணியாற்றினார். துணிக் கடை ஒன்றில் கணக்குப் பிள்ளையாகப் பணிபுரிந்தார். பின்னர் பதிப்புத் தொழிலை மேற்கொண்டார். மனைவி நாச்சம்மை. மகள்கள் நாகம்மை. விசாலாட்சி.
இலக்கிய வாழ்க்கை
குழ. கதிரேசன் கல்லூரியில் படிக்கும் போது கவிதைகள் எழுதினார். இவர் எழுதிய குழந்தைப் பாடல்கள் கோகுலம் இதழில் வெளியாகின. தொடர்ந்து பல சிறார் இதழ்களுக்கு எழுதினார். கதைகளை விட குழந்தை இலக்கியப் பாடல்களிலேயே இவரது கவனம் சென்றது. அழ. வள்ளியப்பாவை முன்னோடியாகக் கொண்டு எளிய தமிழில் குழந்தைகளுக்கான பாடல்களை எழுதினார். சென்னையில் மாதமொருமுறை பொன்னடியான் நிகழ்த்தும் கடற்கரைக் கவியரங்குகளில் கலந்துகொண்டு பல பாடல்களை அரங்கேற்றினார். அழ. வள்ளியப்பா இவரை ஊக்குவித்தார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்களை எழுதியுள்ளார் குழ. கதிரேசன். அவை தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியாகியுள்ளன. இவரது பாடல்கள் தமிழக அரசின் சிறார்களுக்கான பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றன. கேரளா, மைசூர், சிங்கப்பூர் தமிழ் வகுப்புப் பாட நூல்களிலும் இவரது பாடல்கள் இடம் பெற்றன. ஆய்வு மாணவர்கள் சிலர் குழ, கதிரேசனின் படைப்புகளை ஆய்வு செய்து இள முனைவர், முனைவர் பட்டம் பெற்றனர். பெரியவர்களுக்கான பாடல்கள் சிலவற்றையும் எழுதியுள்ளார்.
சங்க இலக்கியம்
குழ. கதிரேசன் கல்லூரியில் படிக்கும்போது தமிழண்ணலின் மாணவராக இருந்தார். தமிழ் இலக்கியங்கள் மீது கொண்ட ஆர்வத்தால் எளிய தமிழில் சங்க இலக்கிய நூல்களை உரை எழுதிப் பதிப்பித்துள்ளார்.
ஒலிப் பேழைகள்
குழ. கதிரேசனின் பாடல்கள் தொகுக்கப்பட்டு மூன்று ஒலிப்பேழைகளாக வெளியாகின. பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதா அவற்றைப் பாடினார்.
மொழிபெயர்ப்பு
குழ. கதிரேசனின் தொப்பைக் கோழி, மழலைப் பூக்கள், மழலை அரும்பு ஆகிய நூல்கள் மலையாளத்தில் முறையே பையனூர் பாஸ்கரன், ஆலப்புழா முரளீதரன், டாக்டர் ராஜேந்திர பாபு ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
குழ. கதிரேசனின் குழந்தைப் பாடல்கள், Central Institute of India Language மூலம் ஹிந்தி, குஜராத்தி, வங்காளம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.
குழ. கதிரேசனின் ‘எலி கடித்த பூனை’ என்னும் நூலில் உள்ள சில பாடல்கள் போலந்து, ரஷ்ய, செக் மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.
பதிப்புலகம்
1974 முதல் 75 வரை தமிழ்ப் புத்தகாலயம், கண. முத்தையா அவர்களிடம் பணிபுரிந்தார். பதிப்பகத் தொழிலின் அடிப்படை நுணுக்கங்களை அவரிடம் கற்றுக் கொண்டார். 1975 முதல் 1984 வரை இவரது தந்தை குழந்தையனும், நண்பர் செல்லப்பனும் இணைந்து நடத்திய மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தின் சென்னைக் கிளை மேலாளராகப் பணியாற்றினார்.
ஐந்திணைப் பதிப்பகம்
குழ. கதிரேசன், தன்னுடைய பதிப்புலக அனுபவத்தைக் கொண்டு 1984-ல், ஐந்திணைப் பதிப்பகத்தை நிறுவினார் 300க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டார். தி. ஜானகிராமன் நூல்கள் பலவற்றை ஐந்திணை பதிப்பகம் வெளியிட்டது. ஜெயகாந்தன், புதுமைபித்தன், டாக்டர் தட்சிணாமூர்த்தி, மதுசவிமலானந்தம் எனப் பல இலக்கியவாதிகளின் நூல்கள் ஐந்திணை மூலம் வெளியாகியுள்ளன.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.