இரா. முத்தரசன்
இரா. முத்தரசன் ஒரு மலேசிய எழுத்தாளர்; இதழாசிரியர். இவர் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், கவிதைகள், அரசியல் பார்வைகள் என எழுதியுள்ளார். ஓர் அரசியல் வரலாற்று நூல், சமூகம், அரசியல் கட்டுரைகள் என ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். முத்தரசன் செல்லியல் இணைய இதழின் நிர்வாக ஆசிரியர் ஆவார்.
பிறப்பு; கல்வி
இரா. முத்தரசன் செப்டம்பர் 12, 1958 ல் கோலாலம்பூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் முத்தரசு. இவர் தந்தையின் பெயர் இராமசாமி. தாயார் பெயர் வீரம்மாள். ஐந்து சகோதரிகள் கொண்ட குடும்பத்தில் நான்காவது பிள்ளையாகப் பிறந்தார்.
இரா. முத்தரசன் தன் ஆரம்ப கல்வியை செந்தூல் தமிழ்ப் பள்ளியில் 1965 ஆம் ஆண்டு முதல் 1970 வரை பயின்றார். தொடர்ந்து படிவம் ஒன்று முதல் படிவம் ஐந்து வரை செந்துல் எம்பிஎஸ் இடைநிலைப் பள்ளியில் (1971-1976) தொடர்ந்தார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக ஐந்தாம் படிவம் எஸ்பிஎம் (அப்போது எம்.சி.இ -M.C.E) முடிந்த பின்னர் வேலைக்குச் சேர்ந்தார். இருப்பினும் தொடர்ந்து எஸ்டிபிஎம் (HSC) ‘ஏ’ லெவல் (‘A Levels) என பகுதி நேரமாக மாலை வேளைகளில் தனியார் கல்லூரிகளில் பயின்று வந்தார்.
1990- ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை பட்டதாரியாக மேற்கல்வியை முடித்தார். தொடர்ந்து (1991-1992) வழக்கறிஞர் தொழிலுக்கான பயிற்சியும் (Certificate in Legal Practice - CLP) பெற்றார்.1992 முதல் வழக்கறிஞராகப் பணி புரிந்தார். பின்னர் ஆர்வம் காரணமாக, 2006-2008-ஆம் ஆண்டுகளில் கோலாலம்பூர், மலாயாப் பல்கலைக் கழகத்தில் வணிகவியல் துறையில் எம்பிஏ (MBA) முதுகலைப் பட்டம் பெற்றார்.
திருமணம்; தொழில்
இரா. முத்தரசன் 1984ல் சா. விக்னேஸ்வரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு தீபன், நந்தனா, சுகந்தா என மூன்று பிள்ளைகள். இரா. முத்தரசன் தனது பத்தொன்பதாம் வயது முதல் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார்.
செய்த தொழில்கள்:
- 1977 – 1978 : துணையாசிரியர், புதிய சமுதாயம் தமிழ் பத்திரிகை.
- நவம்பர் 1978 – ஏப்ரல் 1980 : அலுவலகப் பணியாளர், மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) தலைமையகம்.
- மே 1980 – ஜூன் 1982 : நிர்வாகச் செயலாளர், மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலம்.
- 1982 – 1988 : குமாஸ்தா, ஹாங்காங் அண்ட் ஷங்காய் வங்கி.
- 1989-1990: சட்டத் துறை விரிவுரையாளர், ரிமா (RIMA) கல்லூரி, கோலாலம்பூர்.
- 1992-2001 : வழக்கறிஞர் பணி
- 2001-2008 : வணிகத் துறையில் பங்கெடுப்பு
- 2008-2009: ஆசிரியர், indiantoday.net எனும் ஆங்கில, தமிழ் இணைய பத்திரிகை
- 2009-2010 : ஆசிரியர், Malaysian Indian Business என்ற ஆங்கில இதழ்.
- 2012 : செல்லியல் இணைய இதழின் நிர்வாக ஆசிரியர்
பொது வாழ்க்கை
தனது பதின்ம வயதுகளில் வாசிப்புக்காகவும், இடைநிலைப் பள்ளி கல்வியின் போது படிப்பதற்கு உகந்த இடம் தேடியும் கோலாலம்பூர், செந்தூல் முத்தமிழ் படிப்பகத்தில் கால் பதித்தார். அதுவே அவரின் இலக்கிய வாசிப்பை விரிவாக்கிய களமாகவும், முதல் பொதுவாழ்க்கை செயல்பாடுகளுக்கான நுழைவாயிலாகவும் அமைந்தது. முத்தமிழ் படிப்பகத்தின் செயலவை உறுப்பினர், இலக்கியப் பகுதி செயலாளர், செயலாளர், வெள்ளிவிழா கொண்டாட்ட ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் என பல பொறுப்புகளை முத்தமிழ்ப் படிப்பகத்தில் அவர் வகித்திருக்கிறார். தற்போது படிப்பகத்தின் ஆயுட்கால உறுப்பினராகத் தொடர்கிறார்.
தனது 18-வது வயதில் கோலாலம்பூர் தமிழ் இளைஞர் மணிமன்றத்தில் உறுப்பினராக இணைந்து பின்னர் அந்தக் கிளையின் செயலவை உறுப்பினராகவும், செயலாளராகவும் பணியாற்றினார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலவை உறுப்பினராகவும் அமரர் எம். துரைராஜ் தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்றியிருக்கிறார்.
பின்னர் 1980-ஆம் ஆண்டுகளில் மஇகாவில் தீவிர அரசியல் ஈடுபாடு காட்டியதன் காரணமாகவும், பகுதி நேரமாக உயர்கல்வியைத் தொடர்ந்ததாலும், பொதுவாழ்க்கைப் பணிகளை, இலக்கிய ஈடுபாட்டையும் அவர் குறைத்துக் கொள்ள நேர்ந்தது.
மஇகாவில் கிளை அளவில் பல பொறுப்புகளை வகித்திருப்பதோடு, 1987-ஆம் ஆண்டில் மஇகா கூட்டரசுப் பிரதேச ஆட்சிக் குழு உறுப்பினராகத் தேர்தலின் வழி தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநிலச் செயலாளராகவும் பதவி வகித்தார்.
1982-ஆண்டில் மஇகா கலாச்சாரக் குழுவின் ஏற்பாட்டில் தலைவர் வழக்கறிஞர் டி.பி. விஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற பாரதியார் நூற்றாண்டு விழாவின் ஏற்பாட்டுச் செயலவை உறுப்பினர்களில் ஒருவராகப் பணியாற்றினார்.
மஇகாவின் முன்னாள் துணைத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ சி. சுப்பிரமணியம் அவர்களின் தனிச் செயலாளராகவும் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
2012-ஆம் ஆண்டு ஜனவரி முதல், இணையத்திலும், செல்பேசி குறுஞ்செயலி தளத்திலும் இயங்கிவரும் ‘செல்லியல்’ என்ற இணைய ஊடகத்தின் இணை தோற்றுநரான இரா. முத்தரசன், அந்த ஊடகத்தின் நிருவாக ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.
எழுத்து வாழ்க்கை
இளமையிலேயே இரா. முத்தரசனுக்கு எழுத்தார்வம் இருந்தது. செந்தூல் தமிழ்ப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும்போது,‘ராமாயணம்’ குறித்து எழுதிய சிறு கட்டுரை முதன் முதலில் ‘திருமகள்’ மாத இதழில் வெளிவந்தது. அதுதான் இரா. முத்தரசனின் முதல் எழுத்துலகப் பிரசுரம். அப்போது தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கென அமரர் கவிஞர் சி. வேலுசாமி 10 காசு விலையில் நடத்தி வந்த மாத இதழ்தான் ‘திருமகள்’.
பின்னர் பதின்ம வயதுகளில் தமிழ் நாளிதழ்களில் சிறுகதை, கவிதை, கட்டுரை, வானொலி நாடகங்கள் என எழுதத் தொடங்கினார் இரா. முத்தரசன். பல சிறுகதைகளை எழுதியப்பிறகு இவர் 10 சிறுகதைகளைக் கொண்ட ‘இதுதான் முதல் ராத்திரி’ என்ற சிறுகதைத் தொகுப்பு 1988-இல் வெளிவந்தது. அதுதான் அவரின் முதல் நூல்.
எழுத்தில் ஆர்வம் கொண்டிருந்த அவர், தொடர்ந்து ஒரு நாவல், ஒரு கட்டுரைத் தொகுதி, தமிழிலும், ஆங்கிலத்திலும் அரசியல் ஆய்வு நூல் என இதுவரையில் 5 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.‘செல்லியல் பார்வை’ என்ற தலைப்பில் தொடர்ந்து அரசியல், சமூகம் குறித்த தனது கண்ணோட்டங்களை செல்லியல் தளத்தில் பதிவு செய்து வருகிறார் இரா.முத்தரசு. தமிழ் நாளிதழ்களிலும் அரசியல் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
பெற்ற விருதுகள்
- ஆஸ்ட்ரோ-மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் ‘மண்மாற்றம்’ நாவலுக்குச் சிறப்புப் பரிசு (2004)
- தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்க இலக்கியப் போட்டிகளில் சில முறை கட்டுரைகளுக்கான பரிசுகளை வென்றுள்ளார்.
- மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையின் 32- வது பேரவைக் கதைகள் – சிறுகதைக்கு ஆறுதல் பரிசு (2018 ஆண்டு)
- தமிழ் நேசன் நாளிதழ் நடத்திய ‘மஇகா தேசியத் துணைத் தலைவர் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும்?’ என்ற போட்டியில் முதல் பரிசு (1977)
எழுதிய நூல்கள்
- இதுதான் முதல்ராத்திரி (சிறுகதைத் தொகுப்பு) 1988
- அன்வார் இப்ராகிம் வெற்றிப் போராட்டங்கள் (அரசியல் வரலாற்று நூல்) 2009
- Winning Strategies of Anwar Ibrahim (English Book) 2009
- மண்மாற்றம் (நாவல்) 2017
- செல்லியல் பார்வைகள் (கட்டுரைத் தொகுப்பு) 2017
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.