first review completed

நவநீதகிருஷ்ண பாரதியார்

From Tamil Wiki
Revision as of 14:11, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)
நன்றி-விக்கிப்பிடியா

நவநீதகிருஷ்ண பாரதியார் (மார்ச் 1, 1889 - 1954) (க.சு. நவநீதகிருஷ்ண பாரதியார், பண்டிதமணி க.சு. நவநீதகிருஷ்ண பாரதியார், மாவை நவநீதகிருஷ்ணபாரதியார்) என்ற இவர் ஈழத்து புலவராகவும், தமிழறிஞராகவும் அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

இவர் தற்போதைய புதுக்கோட்டை மாவட்டம், மணல்ஂமேல்குடிக்கு அருகில் உள்ள கரவாட்டங்குடி என்ற ஊரில் சுப்பிரமணிய பாரதியார் - தைலம்மையார் ஆகியோருக்கு மார்ச் 1, 1889-ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.

தனிவாழ்க்கை

இவர் ஆரம்பக்கல்வியை முடித்து சர்க்கரை ராமசாமிப்புலவர், பண்டிதர் அ. கோபாலையர், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் ஆகியோரிடம் தமிழ் இலக்கண இலக்கியமும், சங்க நூல்களும் கற்றுத்தேர்ந்தார்.

பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரியில் தமிழாசிரியராக பணியில் அமர்ந்தார். பின்னர் திருவாவடுதுறை ஆதினத்தில் திருமுறை ஆராய்ச்சி துணைவராக பணியில் அமர்ந்தார்.

1917-ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள மாவிட்டபுரம் என்ற ஊருக்கு குடிபெயர்ந்து, சர். பொன்னம்பல ராமநாததுரை பெண்கள் கல்லூரியில் தமிழாசிரியராக பணியில் அமர்ந்தார். பின்னர் அங்கே உள்ள பரமேஸ்வரா கல்லூரியில் தலைமை தமிழாசிரியராக பணியில் சேர்ந்தார்.

இவரின் மனைவியின் பெயர் சௌந்தரநாயகி. இவருக்கு பத்மாவதி, பூர்ணானந்தா என்ற இருபிள்ளைகள்.

பங்களிப்பு

இவர் 1922-ஆம் ஆண்டு உலகியல் விளக்கம் என்ற நூலை எழுதி ச.பூபால பிள்ளை உரையோடு விபுலானந்த அடிகள் மூலமாக பதிப்பித்தார். இந்த நூல் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட மொழிவளர்ச்சிச் சங்கப் பண்டிதர் தேர்வுக்கு பாட நூலாக இருந்தது.

1929-ஆம் ஆண்டு புத்திளஞ் செழுங்கதிர்ச் செல்வம், பரம்புமலைப் பாரி, செழுங்கதிர்ச் செல்வம் ஆகிய நூல்களை எழுதினார். 1947-ஆம் ஆண்டு இளம் சிறார்கள் தமிழ் இலக்கணம் எளிதாக பயில பாரதீயம் என்ற நூலை மூன்று பாகங்களாக எழுதினார். மேலும் இவர் அப்போது மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வாளராகவும் தொண்டு புரிந்தார்.

இலங்கையில் ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி நடத்தினார். திருவாசகத்திற்கு ஒரு பேருரை நூல் ஒன்றை எழுதி, பதிப்பித்து வெளியிட்டார்.

விருதுகள்

இவருக்கு ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் மன்றம் பண்டிதமணி என்ற பட்டத்தை அளித்தது. இவருக்கு 1952-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஆரிய திராவிட மொழிவளர்ச்சிச் சங்கம் புலவர்மணி என்ற பட்டத்தினை அளித்தது.

மறைவு

இவர் டிசம்பர் 1954-ஆம் ஆண்டு தம்முடைய 64-ஆம் வயதில் மறைந்தார்.

நூல்கள்

  • உலகியல் விளக்கம் (செய்யுள் தொகுப்பு), 1922
  • பாரதீயம் (3 பாகங்கள், இலக்கண நூல்), 1949
  • திருவாசகம் ஆராய்ச்சிப் பேருரை, தெல்லிப்பழை, 1954
  • பறம்புமலைப் பாரி (செய்யுள்கள்)
  • புத்திளஞ் செழுங்கதிர்ச் செல்வம் (செய்யுள்கள்)
  • திருவடிக் கதம்பம் (செய்யுள்கள்)
  • காந்தி வெண்பா (அச்சில் வெளிவரவில்லை)

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.