அஷ்டாவதானம் சபாபதி முதலியார்
To read the article in English: Ashtavadanam Sabapathi Mudaliar.
அஷ்டாவதானம் சபாபதி முதலியார் (புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார்) என்ற இவர் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
பிறப்பு, இளமை
இவர் சென்னை புரசைவாக்கத்தில் வெண்ணய்க்கார இரிசப்ப முதலியாருக்கும், முனியாத்தையம்மாள் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார்.
புரசைவாக்கத்தில் இருந்த திண்ணைப் பள்ளியில் புதுவை அச்சுத உபாத்யாயரிடம் சிறு இலக்கிய நூல்களையும், இலக்கண வினாவிடை நூல்களையும் கற்று பின்னர் அரசினர் கல்லூரியில் ஆங்கிலமும், தமிழும் கற்று தேர்ச்சியடைந்தார்.
தண்டவராய முதலியாரிடத்தில் தமிழ் நூல்களை பாடங்கேட்க ஆரம்பித்தார். பின்னர் அவர் சென்னையைவிட்டு வேலை மாறுதலால் நீங்கியபின் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடம் பல நூல்களைப் பாடங்கேட்டார்.
காஞ்சிபுரம் சரவணதேசிகர், மழவை மகாலிங்கையர், திருத்தணிகை விசாகப்பெருமாள் ஐயர், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், புதுவை நயனப்ப முதலியார் ஆகியவர்களிடமிருந்து ஐந்திலக்கணங்களையும், இலக்கிய நூல்களையும், புராணங்களையும் கற்று தேர்ந்தார்.
தனிவாழ்க்கை
இவர் ஒரே நேரத்தில் எட்டுவிதமான விஷயங்களில் தன் கவனத்தை செலுத்தும் அட்டாவதானியாக அறியப்படுகிறார். இதை இவர் புதுவை அச்சுத உபாத்யாயரிடமிருந்து கற்றுக்கொண்டார்.
சென்னை ஜார்ஜ் டவுன் தங்கசாலையில் (mint street) இயங்கிய அரசினர் கணக்குத்துறை அலுவலகத்தில் மாதம் 116 ரூபாய் சம்பளத்தில் பணியில் அமர்ந்தார். பின்னர் அந்த அலுவலகம் மூடியபின் தன்னிடமிருந்த சேமிப்பில் வாழ்ந்து வரலானார்.
செங்கற்பட்டு, மையிலாப்பூர், புதுவை, திருச்சி தாயுமானவர் கோவில், மதுரை திருஞானசம்பந்த ஆதீனம் மற்றும் காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவில் ஆகிய இடங்களில் அட்டாவதானம் செய்தார்.
வாழ்க்கைப் பதிவுகள்
இவர் சென்னையில் உ.வே சாமிநாதையரை முதன்முதலில் சந்தித்தப்போது சீவக சிந்தாமணியை பலர் முயற்சி செய்தும் வெளியிட முடியவில்லை என்று தெரிவித்து தன்னிடமிருந்த சில குறிப்புகளைக் கொடுத்து உதவினார். பின்னாளில் உ.வே.சா சீவக சிந்தாமணியை பதிப்பித்தபோது வெகுவாக பாராட்டினார்.
மறைவு
இவர் 1886-ஆம் ஆண்டு மறைந்தார்.
இலக்கியப் பணி
இவர் தமிழின் நான்குவகைப்பாக்களிலும் மிக விரைவாகப் பாடும் ஆற்றல் பெற்றிருந்தார்.
திருப்போரூர்ப் புராணத்தை இயற்றி தன் ஆசிரியரான காஞ்சிபுரம் சபாபதி முதலியாரின் முன்னிலையில் திருப்போரூரில் அரங்கேற்றினார்.
இவர் பல மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்து தமிழ் நூல்களுக்கு பாடஞ்சொன்னார். இவரின் மாணவர்கள் சிலர் திருமயிலை சண்முகம்பிள்ளை, வேலுச்சாமிப் பிள்ளை.
இவர் பல பழைய நூல்களுக்கு உரை எழுதி வெளியிட்டார். இவர் திருப்புகழ் சுவாமிகள் என்று அழைக்கபெற்ற தண்டபாணியடிகளால் இயற்றப்பட்ட சென்னை நூல்கள் சில இவர் தலைமையில் அரங்கேற்றப்பட்டன.
படைப்புகள்
எழுதிய நூல்கள்
- திருப்போரூர்ப் புராணம்
- திருப்போரூர் கலம்பகம்
- திருப்போரூர் அலங்கார பஞ்சகம்
- திருப்போரூர் யமகவந்தாதி
- திருப்போரூர் பதிற்றுப்பத்தந்தாதி
- திருப்போரூர் வெண்பாமாலை
- திருப்போரூர் திரிபந்தாதி
- திருப்போரூர் நான்ஂமணிமாலை
- திருப்போரூர் இருசொல் யமக மாலை
- திருப்போரூர் சதகம்
- திருப்போரூர் பிரணவாசல சதகம்
- திருப்போரூர் பிரணவாசல வெண்பா மாலை
- திருப்போரூர் சிதம்பரசுவாமிகள் வரலாறு
- திருப்போரூர் சிதம்பரசுவாமிகள் பதிற்றுப்பந்தாதி
- திருத்தணிகை இரட்டைச்சொல் யமக மாலை
- புரசை பதிற்றுப்பத்தந்தாதி
- புரசை வெண்பாமாலை
- புரசை இரட்டைச்சொல் யமக மாலை (உரையுடன்)
- திருப்போரூர்க் குறவஞ்சி
- திருவொற்றியூர் வடிவுடையம்மை பதிற்றுப்பத்தந்தாதி
- வடிவுடையம்மை தோத்திரச் சந்த மாலை
- பழநி வெண்பா மாலை
- அருணை வெண்பா மாலை
- மயிலை வெண்பா மாலை
- காஞ்சி வெண்பா மாலை
- காஞ்சி குமரக்கோட்டக் கலம்பகம்
- சென்னைக் கந்தசாமி வெண்பா மாலை
- சென்னைக் கந்தசாமி புராணம்
இயற்றிய உரைகள்
- திருப்போரூர்ப் புராண உரைநடை
- திருத்தணிகையாற்றுப்படை உரை
- கந்தரநுபதி விருத்தியுரை
- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் உரை
உசாத்துணை
- தமிழ் புலவர் வரிசை - எட்டாம் புத்தகம் - சு. அ. ராமசாமிப் புலவர்
- தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு - மயிலை சீனி வேங்கடசாமி - வீ அரசு பதிப்பு, University of Toronto Scarborough Digital Library, பக்.175
✅Finalised Page