under review

ப்ரிம்யா கிராஸ்வின்

From Tamil Wiki
Revision as of 12:12, 28 January 2026 by Logamadevi (talk | contribs)
ப்ரிம்யா கிராஸ்வின்

ப்ரிம்யா கிராஸ்வின் (பிறப்பு: செப்டம்பர் 4, 1982) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். தொடர்ந்து கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

ப்ரிம்யா கிராஸ்வின் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டணத்தில் சேவியர் ராயன், ஹியஸிந்தா பின்றோ இணையருக்கு செப்டம்பர் 4, 1982-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் இரு சகோதரர்கள். அக்கா ரம்யா அருண் ராயன் எழுத்தாளர். வீரபாண்டியன் பட்டணத்திலுள்ள தூய மரியன்னை துவக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வி கற்றார். தூய தோமையார் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி நிறைவு செய்தார். திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். தூத்துக்குடி மாவட்டம் வ. உ.சிதம்பரனார் கல்வியியல் கல்லூரியில் கல்வியியலில் இளையர் (B.Ed) பட்டம் பெற்றார். திருச்செந்தூர் ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் "ஆர்.கே. நாராயணனின் நாவல்களில் இந்தியத்தன்மை" என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ப்ரிம்யா கிராஸ்வின் மே 6, 2011-ல் கிராஸ்வின் பெர்னாண்டோ என்பவரை மணந்தார். மகள் அனா ஜேட். கிராஸ்வின் பெர்னாண்டோ 2021-ல் கொரோனா பெருந்தொற்றில் காலமானார்.

ப்ரிம்யா கிராஸ்வின் தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியில் உள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

ப்ரிம்யா கிராஸ்வினின் முதல் கவிதை 'அத்தனைக்கும் பெயர் காதல் என்பேன்' 2020-ல் 'காணிநிலம்' இதழில் வெளியானது. முதல் சிறுகதை 'பிடாரி' வாசகசாலை இதழில் 2023-ல் வெளியானது. முதல் கவிதைத்தொகுப்பு 'தப்பரும்பு' 2022-ல் வாசகசாலை வெளியீடாக வந்தது. ஜீரோடிகிரி பதிப்பகம் வெளியீடாக 2024-ல் 'கெத்சமனி' சிறுகதைத் தொகுப்பும், 2026-ல் 'திருப்பண்டம்' என்ற சிறுகதைத்தொகுப்பும் வெளியானது. வாசகசாலை, தமிழ்வெளி, ஆனந்தவிகடன், கலகம், நுட்பம், உதிரிகள், நடுகல், செந்தலைக்குருவி, காணிநிலம், யாவரும் ஆகிய இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன.

'கானல் அமீரகம்' நடத்திய பரிசுப்போட்டியில் முதல் பரிசு பெற்ற "சிலுவையைச் சுரண்டித் தின்றவர்கள்" என்ற கதை பரிசு பெற்ற மற்ற கதைகளுடன் தொகுக்கப்பட்டு புத்தகமாக 'சிலுவையைச் சுரண்டித் தின்றவர்கள்' என்ற தலைப்பிலேயே அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டது.

ஆதர்ச எழுத்தாளர்களாக வண்ணதாசன் (கல்யாண்ஜி), நேசமித்ரன், கு.ப.ரா, ஜெயமோகன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • S.A.R நினைவு இலக்கிய விருது - தப்பரும்பு கவிதைத்தொகுப்பு (2023)
  • சிறந்த சிறுகதைத் தொகுப்ப்புக்கான சௌமா இலக்கிய விருது - கெத்சமனி சிறுகதைத்தொகுப்பு (2025)

நூல் பட்டியல்

கவிதைத்தொகுப்பு
  • தப்பரும்பு (2022, வாசகசாலை பதிப்பகம்)
சிறுகதைத்தொகுப்பு
  • கெத்சமனி (2024, ஜீரோ டிகிரி பதிப்பகம்)
  • திருப்பண்டம் (2026, ஜீரோ டிகிரி பதிப்பகம்)

இணைப்புகள்


✅Finalised Page