under review

உறையன்

From Tamil Wiki
Revision as of 15:43, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)

உறையன், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

உறையன் என்னும் இப்புலவரின் பெயர் இயற்பெயரா அல்லது காரணப்பெயரா என்பதை அறியமுடியவில்லை.

இலக்கிய வாழ்க்கை

உறையன் இயற்றிய ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 207-வது பாடலாக இடம் பெற்றுள்ளது. தன் இனத்தைக் காணமுடியாமல் பலமுறை குரலெழுப்பும் பருந்தின் ஒலி தவிர வேறு ஒலிகள் இல்லாத இடமாக பாலை நிலத்தின் வர்ணனை இப்பாடலில் இடம்பெறுகிறது.

பாடலால் அறியவரும் செய்திகள்

ஓமை மரம் நன்றி: தினமணி

ஓமை ஒரு பாலைநிலத்து மரம். சங்க இலக்கியங்கள் உவர்நிலப்பாங்கான வறண்ட பாலை நிலத்தில் ஓமை மரங்கள் காடாக வளரும் எனவும், இதன் அடி மரத்தைப் ‘புன்தாள்', ‘பொரிதாள்', ‘முடத்தாள்' எனவும் குறிப்பிடுகின்றன. இம்மரம் புல்லிய இலைகளை உடைய தென்றும், இது மிக ஓங்கி வளரும் என்றும், கவடுகளை உடையதென்றும், இதில் பருந்துகள் ஏறியமர்ந்து கூவும் என்றும், இதில் ‘சிள் வீடு' என்ற வண்டொன்று தங்கி வெப்பம் மிக்க நடுப் பகலில் கறங்கும் என்றும், உடன்போக்கில் பாலை வழிப் போவாரும் பிறரும் இம்மரத்தின் நிழலில் தங்கி இளைப்பாறுவர் என்றும். இதன் பட்டையை உரித்து யானை உண்ணும் என்றும் கூறப்படுகிறது[1].

பாடல் நடை

குறுந்தொகை 207

பாலைத் திணை

செலவுக் குறிப்பு அறிந்து, அவர் செல்வார் என்று தோழி சொல்ல, தலைவி உரைத்தது.

செப்பினஞ் செலினே செலவரி தாகுமென்
றத்த வோமை அங்கவட் டிருந்த
இனந்தீர் பருந்தின் புலம்புகொள் தெள்விளி
சுரஞ்செல் மாக்கட் குயவுத்துணை யாகும்
கல்வரை யயலது தொல்வழங்கு சிறுநெறி
நல்லடி பொறிப்பத் தாஅய்ச்
சென்றெனக் கேட்டனம் ஆர்வலர் பலரே.

(தலைவன் நம்மிடம் சொல்லிவிட்டுச் சென்றால் செல்ல முடியாது என்பதால் சொல்லாமல் சென்றுவிட்டார். தன் கூட்டத்து இணையைப் பிரிந்த ஒற்றைப் பருந்து ஓமை மரக் கிளையில் இருந்துகொண்டு புலம்பும் குரல்பேச்சுத் துணையாகும் கல்லாலான மலைக்கருகில் நடந்து பழையதாக ஆன பாதையில் கற்கள் சுடுவதால் கால் ஊன்ற முடியாமல் தாவித் தாவிச் செல்கிறாராம். நம்மீது அக்கறை உள்ள சிலர் இதனைப் பார்த்து வந்து சொல்கிறார்கள்.)

உசாத்துணை

சங்கத் தமிழ் புலவர் வரிசை, அதியன் விண்ணத்தனார் முதலிய புலவர்கள் , புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் குறுந்தொகை 207, தமிழ்த் துளி இணையதளம் குறுந்தொகை 207, தமிழ் சுரங்கம் இணையதளம்

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Feb-2023, 06:27:11 IST