under review

சக்தி அருளானந்தம்

From Tamil Wiki
Revision as of 01:03, 9 December 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
சக்தி அருளானந்தம் (படம் நன்றி: கல்கி இதழ்)

சக்தி அருளானந்தம் (அருள்மொழி) (பிறப்பு: ஏப்ரல் 17, 1962) தமிழ்க் கவிஞர், ஓவியர், இலக்கிய விமர்சகர். மின் சாதனப் பழுது நீக்குநர். தன் கவிதை முயற்சிகளுக்காக தஞ்சை ப்ரகாஷ் விருது, திருப்பூர் சக்தி விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

அருள்மொழி என்னும் இயற்பெயரைக் கொண்ட சக்தி அருளானந்தம், ஏப்ரல் 17, 1962 அன்று, சேலம் செவ்வாய்ப்பேட்டையில், ரங்கநாதன் - சரஸ்வதி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். செவ்வாய்ப்பேட்டை தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை படித்தார். சூழல்களால் குடும்பம் தஞ்சைக்குச் சென்று வசித்ததால், அங்குள்ள திருக்களர் கிராமத் தொடக்கப் பள்ளியிலும், ராயநல்லூர் கிராம நடுநிலைப் பள்ளியிலும் படித்தார். கோட்டூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும்போது, தாயின் மறைவால் இடை நின்றார். மதுரை காமராசர் கல்லூரியில் பிரீ ஃபவுண்டேஷன் படிப்பை (Pre Foundation Course) நிறைவு செய்தார். தட்டச்சு பயின்று தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் முதுநிலைச் சான்றிதழ் பெற்றார்.

கவிஞர் சக்தி அருளானந்தம்

தனி வாழ்க்கை

மின் சாதனங்களைப் பழுது நீக்கும் நுட்பங்களைக் கற்றுக்கொண்ட சக்தி அருளானந்தம், சேலத்தில் உள்ள ’விக்னேஷ் டிரேடர்ஸ்’ என்ற நிறுவனத்தில் மின் சாதனங்கள் பழுது நீக்குபவராகப் பணியாற்றினார். மணம் செய்து கொள்ளவில்லை.

சக்தி அருளானந்தம் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

சக்தி அருளானந்தம் கல்கி, ஜெயகாந்தன், அகிலன் போன்றவர்களது படைப்புகளை வாசித்து இலக்கிய ஆர்வம் பெற்றார். தொடக்க காலத்தில் ஆனந்த விகடன், குமுதம், கல்கி, வாசுகி, மாலைமதி, இனிய உதயம், இதயம் பேசுகிறது போன்ற இதழ்களுக்கு வாசகர் கடிதங்கள் எழுதினார். ’வாழ்க்கைக் கோலம்’ என்னும் முதல் கவிதை மாலை மலரில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து ‘பட்டிமன்றம்’ என்ற முதல் சிறுகதை வெளியானது.

தொடர்ந்து தினத்தந்தி, மாலை முரசு, மாலை மலர் உள்ளிட்ட பல நாளிதழ்களிலும், தமிழ்ச்சிறகு, முகடு, சிறகு, சௌந்தரசுகன், புன்னகை, மனசு, உங்கள் ரீடர்ஸ், உளி, படித்துறை போன்ற சிற்றிதழ்களிலும், அவள் விகடன், சினேகிதி, தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற வெகுஜன இதழ்களிலும் கவிதைகள், சிறுகதைகள் எழுதினார். ’வித்யா சரஸ்வதி’ என்ற புனை பெயரிலும் சில சிறுகதைகளை எழுதினார். சிற்றிதழ்களில் ஓவியங்கள் வரைந்தார்.

முதல் கவிதைத் தொகுப்பு ‘இருண்மையிலிருந்து’ 2003-ல் வெளியானது. தொடர்ந்து ‘பறவைகள் புறக்கணித்த நகரம்’, ‘தொடுவானமற்ற கடல்’ போன்ற கவிதைத் தொகுப்புகள் வெளியாகின. அ. வெண்ணிலாவால் தொகுக்கப்பட்ட, பெண்கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூலான ‘கனவும் விடியும்' நூலில் சக்தி அருளானந்தத்தின் கவிதைகள் இடம்பெற்றன. சக்தி அருளானந்தம் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார். கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகள் குறித்து இணையதளங்களில், இதழ்களில் பல விமர்சனங்களை எழுதினார்.

அமைப்புச் செயல்பாடுகள்

சக்தி அருளானந்தம் வேட்கை இலக்கிய அமைப்பு, பாவலர் எழுஞாயிறு இலக்கிய அறக்கட்டளை, எழுத்துக்களம் உள்ளிட்ட பல இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து பல இலக்கியப் பணிகளை முன்னெடுத்தார். தொலைக்காட்சி நிகழ்வுகளில் கவிதைகள் வாசித்தார்.

விருதுகள்

  • ’அவள்விகடன்’ இதழ் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு
  • சேலம் மாவட்ட வாசகர் பேரவை நடத்திய ’பெண்களுக்கான இட ஒதுக்கீடு’ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு
  • கே.ஆர்.ஜி. நாகப்பன் - ராஜம்மாள் நினைவாக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு
  • தஞ்சை பிரகாஷ் விருது
  • சிகரம் விருது
  • திருப்பூர் அரிமா சக்தி விருது

மதிப்பீடு

சக்தி அருளானந்தம் பெண்ணியச் சிந்தனைகளை கொண்ட பல படைப்புகளை எழுதினார். தீவிரமான பெண்ணியப் பார்வைகளைக் கொண்ட கவிதைகளை எழுதியவராகவும், சேலம் பெண் கவிஞர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • இருண்மையிலிருந்து
  • பறவைகள் புறக்கணித்த நகரம்
  • தொடுவானமற்ற கடல்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Dec-2024, 09:21:51 IST