தொகைநிலை(உழிஞைத் திணை)
தொகைநிலை உழிஞைத் திணையின் துறைகளில் ஒன்று. கோட்டைக்கு உள்ளே இருந்த நொச்சி மன்னர் கூட்டம் வெற்றி பெற்ற உழிஞை மன்னனிடம் அஞ்சி வந்து அடிபணிந்ததைக் கூறுவது.
தும்பைத் திணையிலும் தொகை நிலை என்ற துறை உண்டு.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் மதில்களை உடைய பகை மன்னர்கள் அனைவரும் தோற்ற நொச்சியானின் மதிலிடத்தே வந்து, உழிஞை வேந்தனின் அடிகளை அடைந்தது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
எம்மதிலின் இகல் வேந்தரும்
அம்மதிலின் அடி அடைந்தன்று(கொளு 6.32)
வெண்பா
நாவல் பெயரிய ஞாலத்து அடிஅடைந்து
ஏவல் எதிராது இகல் புரிந்த - காவலர்
வின்னின்ற தானை விறல் வெய்யோற்கு அம்மதிலின்
முன்நின்று அவிந்தார் முரண் (126)
பொருள்: இவ்வுலகில், உழிஞை மன்னனோடு மாறுபாடு கொண்டு போர் விரும்பிய காவலர்கள் எல்லாரும், வீழ்ந்துபட்ட நொச்சி மன்னனின் மதிலின் முன்னே நின்று அவனுடைய (உழிஞை வேந்தனுடைய) அடிபணிந்து தத்தம் பகைமையை விட்டனர்.
உசாத்துணை
உழிஞைத்திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page