under review

மூலங்கீரனார்

From Tamil Wiki
Revision as of 19:00, 5 March 2025 by Logamadevi (talk | contribs)

மூலங்கீரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

மூலங்கீரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கீரனார் என்னும் இயற்பெயர் உடையவர். மூலம் நட்சத்திர திருநாளில் பிறந்தமையால் மூலங்கீரனார் என்று பெயர் பெற்றுள்ளார் என ஊகிக்கப்படுகிறது. தமது பாடலில் தஞ்சையில் அமைந்துள்ள சாய்க்காடு என்னும் குறிப்பிட்டுள்ளதால் சோழ நாட்டை சேர்ந்தவர் என கருதப்படுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

மூலங்கீரனார் பாடிய பாடல் நற்றிணையில் 73 -ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவன் பொருளீட்ட பிரிந்து சென்றதனால் தனக்கு அனுபவிக்கும் துன்பத்தை தோழியிடம் தலைவி கூறுவதாக பாலைத் திணையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • வலிமையானை வாயினை உடையது பேய். முருக்கம்பூ போல் சிவந்த கொடிய விரல்களை கொண்டது. மூதூரின் பாழ்மண்டபத்தில் வைக்கப்படும் பலிச்சோற்றை மாலை நேரத்தில் உண்டு செல்லும்.
  • சாய்க்காடு என்னும் ஊரில் அமையபெற்ற நெல்வயல் கதிர்கள் செந்நிற மயிர்க்கற்றை வாரியது போல சிவப்பு நிறத்தில் காணப்படும். அந்நெல்வயலில் அன்ன பறவைகள் உறங்கும்.
  • காதல் கொண்ட மகளிர் தம் ஆடவரை பிரிந்த பின் பசலை நோயினால் உடலும் உள்ளமும் மெலிந்து வாடுவர். ஊரார் அத்தகு மகளிரை பழிச்சொற்களால் தூற்றுவர்.
  • உவமைகள்: தலைவியின் நெற்றியழகு சாய்க்காடு ஊரின் நெல்வயலுக்கு இணையானது என்றும் தலைவனின் பிரிவால் தலைவி படும் துயர் பலிச்சோறு உண்ணவரும் பேய்க்கு ஒப்பாகவும் கூறப்பட்டது.

பாடல் நடை

நற்றிணை - 73

  • திணை: பாலை துறை:செலவுக்குறிப்பறிந்து வேறுபட்ட தலைவி சொல்லியது.

வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல் வாய்ப் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய,
மன்றம் போழும் புன்கண் மாலை,
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச்
செல்ப என்ப தாமே-செவ் அரி
மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர்ச்
செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும்
பூக் கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன என்
நுதற் கவின் அழிக்கும் பசலையும்,
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே.

உசாத்துணை


✅Finalised Page