பாவைக் கொட்டிலார்
பாவைக் கொட்டிலார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
பாவைக் கொட்டிலார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பாவை என்பது பெண் பிள்ளைகள் வைத்து விளையாடும் மரத்தாலான பொம்மை. கொட்டில் என்பது பெண் பிள்ளைகள் மணலால் கட்டும் சிறுவீடு. மணலால் கட்டிய சிறுவீடான கொட்டிலில் பாவை பொம்மையை வைத்து விளையாடுவர். அந்நிகழ்ச்சியை பாடியதால் பாவைக் கொட்டிலார் என்னும் பெயர் பெற்றார் என ஊகிக்கப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
பாவைக் கொட்டிலார் பாடிய பாடல் அகநானூறில் 336-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. ஒருவருடன் மட்டும் உறவு தொடர்பு வைத்திருப்பவர் நயப்புப்பரத்தை எனப்படுவர். பலருடனும் நிலையில்லாத உறவுகளை தொடர்பவர்களை இற்பரத்தையர் என்பர். ஊருக்கு புதிதாக வந்த நயப்புப்பரத்தை இற்பரத்தையரை நோக்கிக் கூறுவதாக மருதத் திணையில் அமைந்துள்ளது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- குழல் போல் உள்ளே துளை உள்ள காம்பையும், அகன்ற மடல் போன்ற இலைகளையும் கொண்ட சேம்புச் செடிக்கு அடியில் பாசி படிந்த நீரில் உணவு இல்லாமல் பசியோடு இருக்கும் தன் பெண்நாய்க்கு அன்றாட உணவைத் தர விரும்பி, ஆண்நீர்நாய் வாளைமீனோடு போரிடுகையில் நீர்த்துறையே கலங்கிக் கிடக்கும்.
- அந்தத் துறையின் கரையில் உள்ள காஞ்சிமர நிழலில் குடிநீர் மொண்டுகொண்டு வந்த மகளிர் நீர்க்குடத்தை இறக்கி வைத்துவிட்டு, பாடிக்கொண்டு குரவை ஆடுவர். அந்த ஊரின் தலைவன், மகளிரோடு மகிழ்ந்து திளைக்கும் மகிழ்நன் செய்யும் பரத்தைமைச் செய்கையைப் பாடிக்கொண்டு குரவை ஆடுவர். தெளிந்த கள்ளை உண்ட மகளிர் அவர்கள். அப்படிக் குரவை ஆடும் துறையை உடையவன் தலைவனாகிய ஊரன்
- யானை பாகன் சொன்னபடியெல்லாம் கேட்டு நடந்துகொள்ளும். அது யானையானது தன் பாகனுக்குத் தரும் கொடை.
- ஊருக்கு வந்த பரத்தையரும், ஊர்ப் பரத்தையரும் ஒன்று கூடி முழவு முழக்கத்துடன் துணங்கை விழாவில் ஆடுகின்றர்.
- வல்லம் என்னும் ஊரின் வெளிப்புறக் காவல்-காட்டில், தோல் கேடயம் அணிந்துகொண்டு மழையின் நீர்த்தாரை விழுவது போல அம்பைச் சொரியும் சோழர் படையை எதிர்த்துப் போரிட்ட ஆரியர் படை உடைந்து பின்வாங்கி ஓடியது
- உவமைகள்: நயப்புப்பரத்தையை மட்டுமே வைத்தக்கண் வாங்காமல் பார்க்கும் ஊரனாகிய தலைவனின் செயல் சூரியனை நோக்கி மலர்ந்திருக்கும் நெருஞ்சிப் பூவை ஒத்துள்ளது. நயப்புப்பரத்தைக்கும் இற்பரத்தைக்கும் உள்ள உறவு யானைக்கும் பாகனுக்குமான உறவினைப் போன்றது. நயப்புப்பரத்தையின் முன் இற்பரத்தையர் நிலை சோழன் முன் தோற்றோடிய ஆரியப்படையின் நிலையினை ஒத்தது.
பாடல் நடை
அகநானூறு - 336
- திணை: மருதம் துறை: நயப்புப்பரத்தை இற்பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.
............................... .........
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக்
கொல் களிற்று யானை நல்கல்மாறே;
தாமும் பிறரும் உளர்போல் சேறல்
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்,
யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச்
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல,
என்னொடு திரியானாயின், வென் வேல்
மாரி அம்பின் மழைத் தோற் சோழர்
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை,
ஆரியர் படையின் உடைக, என்
நேர் இறை முன்கை வீங்கிய வளையே!
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- அகநானூறு - 336:Tamilvu
✅Finalised Page