க்ருஷாங்கினி
க்ருஷாங்கினி (பிருந்தா நாகராஜன்) (பிறப்பு: நவம்பர் 20, 1948) தமிழ்க்கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ஓவியம், இசை, நடனம் குறித்த ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். பெண்ணெழுத்து பற்றிய ஆய்வுகளும் அமைப்புப் பணிகளும் மேற்கொண்டார். உலகாளாவிய பெண் கவிஞர்களின் படைப்புகளை 'பறத்தல், அதன் சுதந்திரம்' என்ற பெயரில் தொகுத்து, வெளியிட்டார்.
பிறப்பு, கல்வி
பிருந்தா நவம்பர் 20, 1948-ல் தாராபுரத்தில் சம்பூர்ணம்-வைத்தீஸ்வரன் இணையருக்கு மகளாகப் பிறந்தார். தாயார் பூரணி என்ற பெயரில் கதைகளும், கவிதைகளும் எழுதினார். சகோதரர் கே.வி. ராமசாமி ஜெயகாந்தனின் ஞானரதம் இதழின் ஆசிரியராக இருந்தார்.
பிருந்தா தாராபுரத்தில் பள்ளிக் கல்வியை முடித்தார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
பிருந்தா மே 8, 1965 அன்று ஓவியர் நாகராஜனை (அரவக்கோன்) திருமணம் செய்து கொண்டார். மகள் நீரஜா ரமணி கிருஷ்ணா பரதநாட்டியக் கலைஞர். மகன் சத்யாஸ்ரயன். புதுவையில் 15 வருடமும் கும்பகோணத்தில் 5 வருடமும் வாழ்ந்த இவர் 1990 முதல் சென்னையில் வசிக்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
பிருந்தா க்ருஷாங்கினி என்ற பெயரில் சிறுகதைகளும், கவிதைகளும் எழுதினார். முதல் சிறுகதை 'புஷ்பித்தல்' 1982-கணையாழியில் வெளிவந்தது.தொடர்ந்து தீபம், கணையாழி, ஞானரதம், ராகம், சுபமங்களா, நவீன விருட்சம், புதிய பார்வை, சுந்தர சுகன், கனவு, அரும்பு, தமிழ் முரசு (சிங்கப்பூர்) போன்ற இதழ்களில் அவரது கதைகளும், கவிதைகளும் வெளிவந்தன. இந்தியா டுடே, கல்கி, ஆனந்த விகடன், குமுதம், தினமணி கதிர் போன்ற பத்திரிகைகளிலும் இவருடைய கவிதைகள் வெளிவந்தன.
க்ருஷாங்கினியின் ஓவியம், நடனம், இலக்கியம் தொடர்பான பல விமரிசனக் கட்டுரைகள் தினமணி, சுதேசமித்திரன், நுண்கலை (தமிழ் நாடு ஓவியம், நுண்கலை குழு) தினகரன் போன்ற வாராந்திர இதழ்களிலும் தொடர்ந்து வெளிவந்தன. இவரது சிறுகதைகளை ஆய்வு செய்து மாணவர்கள் 'ஆய்வியல் நிறைஞர்' பட்டம் பெற்றுள்ளனர்.
கவிதை
க்ருஷாங்கினி ஸ்காண்டினேவியா- தமிழ்நாடு கலாச்சாரப் பரிமாற்றத்தில் (1992) கவியரங்கில் பங்கேற்றுக் கவிதை வாசித்தார்.1995-ல் அகில உலகப் பெண் ஓவியர்களின் ஓவியக் கண்காட்சி சென்னையில் Alliance Française )வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் பெண் கவிஞர்களுடன் பங்கு கொண்டு கவிதை வாசித்தார். உலகளாவிய பெண் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து 'பறத்தல் அதன் சுதந்திரம்[1]' என்னும் தலைப்பில் கவிதைகளுக்குப் பொருத்தமான பல பெண் ஓவியர்களின் கோட்டு ஓவியங்களுடன் வெளியிட்டார். மளையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் இவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுளன.
ஓவியம், நடனம் பற்றிய படைப்புகள்
- க்ருஷாங்கினி பரதத்திலும் ஓவியக்கலையிலும் தேர்ச்சி பெற்றவர். 1998-ல் சென்னை இசை விழாக் காலத்தில் மகள் நீரஜாவுடன் இணைந்து 'பரதம் புரிதல்' என்னும் பரதக்கலை பற்றிய அறிமுகத் தொடரை எழுதினார். சென்னை ஆன்லைன் (ஆங்கில இணைய இதழ்) இல் இதன் மொழியாக்கம் தொடராக வெளிவந்தது.
- கணவர் ஓவியர் அ.நாகராஜனுடன்(அரவக்கோன்) இணைந்து எழுதிய 'ஓவிய நிகழ்வு' என்னும் தொடரில் 1900-லிருந்து 2000 வரை உலக அளவில் சிற்ப, ஓவியத் துறையில் இதுவரை நிகழ்ந்த மாற்றங்கள், நிகழ்வுகள், பரிசோதனைகள், அதில் பெண்களின் பங்களிப்பு பற்றிய கட்டுரைகள் 'கணையாழி' யில் வெளிவந்தன.
- 2001-ம் ஆண்டு மகளிர் தினத்தை ஒட்டி 'கவிதைக் காட்சி' என்ற பெயரில் 32 தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகள் க்ருஷாங்கினியின் முயற்சியால் பெரிய அளவில் (4'x6') சென்னை அருங்காட்சியக் கலைக்கூடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டன. அவற்றுக்குப் பொருத்தமான பெண் ஓவியர்களின் ஓவியங்களும் இடம்பெற்றன.
- 2001-ல் சென்னையில் டிசம்பர் மாதம் மகள் திருமதி நீரஜா ரமணியுடன் இணைந்து இன்றைய தமிழ் பெண் கவிஞர்களின் புதுக் கவிதைகளில் சிலவற்றை 'அவ்வைக்குப் பின்னும் ஆங்காங்கே' என்னும் தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சியாக நடத்தினார்.
மொழியாக்கம்
ஜெர்மன் நாடக ஆசிரியர் பெர்டோல்ட் ப்ரெக்ட் (Bertolt Brecht) எழுதிய 'Mother courage and her children' என்ற நாடகத்தை ஹிந்தி வடிவிலிருந்து 'தீரத் தாய்' என்ற பெயரில் மொழியாக்கம் செய்து 1999-ல் சென்னையில் தேசிய நாடகப் பள்ளியின் மூலம் அரங்கேற்றினார்.
சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்தி, ஆங்கில எழுத்தாளர் மிருதுலா கர்க், இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய சமூகத்தில் ஏற்பட்ட மாறுதல்களைப் பற்றி இந்தியில் எழுதிய ‘மிலிஜூல் மன்’ நாவலை 'இணைந்த மனம்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்தார்.
அமைப்புப் பணிகள்
க்ருஷாங்கினி பெண் எழுத்து பற்றிய பிரக்ஞை ஏற்படுத்தும் முகமாக மாலதி மைத்ரியுடன் இணைந்து 'அணங்கு' என்ற அமைப்பை ஏற்படுத்தி மார்ச் 27,2004 அன்று 'இலக்கிய மரபும் பெண்ணும்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடத்தினார். அது பின்னர் 'மருது' வெளியீடாக 2004-ல் வெளி வந்துள்ளது.
Women's world என்ற பெண்கள் அமைப்பு 2003-ல் நடத்திய 3 நாட்கள் கருத்தரங்கில் உலகம் அனைத்திலுமுள்ள பெண் எழுத்துக்களை மொழி மாற்றம் செய்து பரவச் செய்வது பற்றிய கருத்தரங்கில் கல்ந்து கொண்டு உரையாற்றினார்.
தமிழில் 1950-குப் பிறகு உருவான பெண் எழுத்தாளர்கள் குறித்து (2002-2004) இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை புத்தாய்வுக்காக (Senior fellowship) தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆய்வுப்பணி மேற்கொண்டார்.
பரிசுகள்,விருதுகள்
- தமிழ் வளர்ச்சித் துறை சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான 2-ம் பரிசு (2000, சமகாலப் புள்ளிகள் சிறுகதைத் தொகுதிக்காக)
- புதுப்புனல் விருது(2011)
- தேவமகள் அறக்கட்டளையின் கவிச்சிறகு விருது (2002, கானல் சதுரம் கவிதைத் தொகுதிக்காக)
- தஞ்சை பிரகாஷ் நினைவு ஆளுமை விருது(2018)
இலக்கிய இடம்
க்ருஷாங்கினி பெண்களுக்கான உரிமையையும் இடத்தையும் முன்வைக்கும் செயல்பாட்டாளராக அறியப்படுகிறார். இலக்கியத்தை ஓவியம் மற்றும் நடனம் போன்ற கலைகளுடன் இணைக்கும் படைப்புச்செயல்பாடுகளையும் முன்னெடுத்தார். "இவரது கவிதைகள் அடிப்படையில், வடிவொழுங்கு உடைய உருவமைப்புகளை சொற்களாகவோ கவிதையின் கருக்களமாகவோ அல்லது படிமமாகவோ வைத்துக்கொண்டு தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு, அத்தகைய வடிவியத்தன்மைகளால் அலைக்கழிப்புக்குள்ளான கவிஞராகவே இருக்கிறார், இவர். மனித இயக்கங்கள் எல்லாமே வரையறுக்கப்பட்ட சட்டகங்களில் அடைக்கப்பட்டதாக இருக்கும் வாழ்வியலை, நவீன வாழ்வாகக் காட்சிப்படுத்த முயற்சித்துக்கொண்டே இருக்கும் இவரது தொடர் முயற்சியே, கவிதைகளாகப் பதிவாகியிருக்கின்றன. விளிம்பு, பரப்பு, கூம்பு மேடு, பள்ளம், பெருவெளி, நீளம், நடு, கோணல், குறுக்கு, கோடு என வடிவம் பெற்றுக்கொண்டேயும் இருக்கின்றன சொற்கள்!" என்று குட்டி ரேவதி க்ருஷாங்கினியின் கவிதைகளை பற்றிக் குறிப்பிடுகிறார்.
படைப்புகள்
- கானல் சதுரம்- கவிதைத் தொகுதி-1998 'கனவு' வெளியீடு
- சமகாலப் புள்ளிகள் -1988 சிறுகதைத் தொகுதி அருள் பதிப்பகம்' வெளியீடு
- பறத்தல் அதன் சுதந்திரம் தொகுப்பாசிரியர்கள் கிருஷாங்கினி, மாலதி மைத்ரி உலகளாவிய தமிழ் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு காவ்யா பதிப்பகம்,
- பரதம் புரிதல் சதுரம் பதிப்பகம்
- கிருஷாங்கினி கதைகள்
- இந்திய மரபும் பெண்ணும்- பெண்ணியம் சார்ந்த கட்டுரைகள் (அணங்கு-2004)
மொழியாக்கங்கள்
- தீரத்தாய் (1999)
- கலாக்ஷேத்ரா-ருக்மிணிதேவி சில நினைவுகள், சில பகிர்வுகள் (Kalakeshetra-Rukmini Devi- Reminicences by S.Saradha)
- இணைந்த மனம்
க்ருஷாங்கினியின் படைப்புகள் இடம்பெற்ற தொகுப்புகள்
- இலக்கிய வட்டம் சிறுகதை தொகுப்பு-1985
- இந்த நூற்றாண்டுச் சிறு கதைகள்-1993. கலைஞன் பதிப்பகம் (விட்டல் ராவ் தொகுத்தது)
- நவீன விருட்சம் சிறுகதைத் தொகுப்பு-1992. நவீன விருட்சம் வெளியீடு.
- நவீன விருட்சம் கவிதைத் தொகுப்பு-1994. நவீன விருட்சம் வெளியீடு.
- நதிகள் தமிழுறவு-தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், 1998
- யானைச்சவாரி தொகுப்பு- 2001 எஸ்.ஷங்கரநாராயணன் (புதிய நூற்றாண்டின் துவக்கத்தில் சில சிறுகதைப் பதிவுகள்.)
- The Unhurried City - Edited by C.S.Lakshmi -Ambai (Penguin books & The Hindu)
- ந.பிச்சமூர்த்தி நினைவாக (சிறுகதைகள், கவிதைகள் & கட்டுரைகள்) தொகுதி - 2
உசாத்துணை
- க்ருஷாங்கினியின் வலைத்தளம்
- க்ருஷாங்கினி நேர்காணல், தமிழ்நெஞ்சம், உரையாடல்- கவிஞர் மதுமிதா
- க்ருஷாங்கினி – சட்டகங்களால் அடைபட்ட சொற்கள்-குட்டிரேவதி
- நவீன தமிழ்க்கவித வெளியில் நான் -க்ருஷாங்கினி, பதிவுகள்
- கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது-லதா ராமகிருஷ்ணன், திண்ணை-மே,2011-
இணைப்புகள்
- க்ருஷாங்கினி கவிதைகள், கீற்று
- ‘20-ம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்’ புத்தகத்திற்கு க்ருஷாங்கினியின் முன்னுரை
- 20-ம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்-கட்டுரைத்தொடர், சொல்வனம் இதழ்
- க்ருஷாங்கினி கவிதைகள், அந்திமழை
அடிக்குறிப்புகள்
✅Finalised Page