under review

திருமுல்லைவாசல்

From Tamil Wiki
Revision as of 20:14, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
வடதிருமுல்லைவாயில்
வடதிருமுல்லைவாயில்

திருமுல்லைவாசல் (வடதிருமுல்லைவாயில்) சென்னைக்கு அருகே ஆவடியில் அமைந்துள்ள திருமுல்லைவாசல் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் ஆலயம். இறைவன் மாசிலாமணீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சுந்தரரால் பாடப்பட்ட தலம் இது.

இடம்

சென்னைக்கு அருகே, திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடிக்கு அருகே திருமுல்லைவாயில் அமைந்துள்ளது. திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற ஆலயங்கள் உண்டு. தொண்டை நாட்டில் உள்ள ஆலயம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள ஆலயம் தென்திருமுல்லைவாயில் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

இறைவன், இறைவி

  • இறைவன்- நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர்.
  • இறைவி - லதாமத்யாம்பாள், கொடையிடைநாயகி, கொடியிடையம்மை.
  • தீர்த்தம்- கல்யாணதீர்த்தம். சுப்ரமணிய தீர்த்தம்

தொன்மம்

வடமுல்லைவாயில் ஆலயத்தின் தொன்மங்கள் வடதிருமுல்லைவாயிற் புராணம் என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதன் ஆசிரியர் திருமயிலை சண்முகம் பிள்ளை. அதில் கூறப்பட்டுள்ள தொன்மத்தின்படி வாணர்குலத்தைச் சேர்ந்தவர்களாகிய குறும்பர்களை வெல்ல தொண்டைநாட்டை ஆட்சி செய்த தொண்டைமான் படையுடன் வந்து இங்கே தங்கினான். தொண்டைமானின் யானையின் கால் முல்லைக்கொடியில் சிக்க அவன் அதை வெட்டியபோது கொடியில் இருந்து ரத்தம் வந்தது. அங்கே சிவலிங்கம் இருப்பதையும் அதில் வெட்டுபட்டிருப்பதையும் உணர்ந்த அவன் தலைநகராகிய காஞ்சியில் இருந்து பொன்கொண்டுவந்து திருமுல்லைவாயில் சிவன் ஆலயத்தை கட்டினான்.

தொன்மங்களின்படி இது பிருகு முனிவர், லவ-குசன், சந்திரன், இந்திரன், சுக்ரர் ஆகியோர் வந்து தவம் செய்து வழிபட்ட இடம். இங்கே பஞ்சம் வந்தபோது பிருகுமுனிவர் வேண்டியபோது பார்வதிதேவி மணிமழை பெய்யச்செய்தாள்.

பாடல்கள்

  • திருமுல்லைவாயில் ஆலயத்தை அருணகிரிநாதர், மாதவச் சிவஞான யோகிகள், வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், இரட்டைப் புலவர் முதலியோர் பாடியுள்ளனர்.
  • சுந்தரர் இவ்வாலயத்தைப் பற்றி என்னும் திருவுமெய்ப் பொருளும் எனும் பதிகத்தை பாடியுள்ளார்.
  • சேக்கிழார் பெரியபுராணத்தில் திருக்குறிப்பு நாயனார் புராணம், ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் ஆகியவற்றில் இத்தலத்தை பாடியுள்ளார்.

திருமுல்லைவாயில் பற்றிய நூல்கள் கீழ்க்கண்டவை.

  • திருமுல்லைவாயில் அந்தாதி. மாதவ சிவஞான முனிவர்
  • வடதிருமுல்லைவாயிற் புராணம் -- திருமயிலை சண்முகம் பிள்ளை
  • கொடியிடை நாயகி தோத்திரப்பாடல்கள் திருமயிலை சண்முகம் பிள்ளை
  • கொடியிடை அம்மன் பஞ்சரத்தினம். தில்லை விடங்கன் மாரிமுத்து
  • கொடியிடை அம்மன் அந்தாதி. மனோன்மணி அம்மாள்
  • திருமுல்லைவாயில் தோத்திரப்பா மஞ்சரி
  • கொடியிடை அம்மன் பிள்ளைத்தமிழ்

ஆலய அமைப்பு

ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரம் தெற்கு நோக்கியது. ராஜகோபுரத்திற்கு எதிரில் சந்நிதி வீதியில் பதினாறுகால் மண்டபமும் ,வசந்த மண்டபமும் உள்ளன. பதினாறுகால் மண்டபத்தில் அழகிய சிற்பங்கள் உள்ளன. பிரசன்ன விநாயகர் கோபுரவாசலில் உள்ளார். கல்யாண மண்டபதில் அம்பாள், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர் கோயில்கள் உள்ளன.வெளியே பைரவர் ஆலயம் உள்ளது. இங்கே நந்தி கிழக்கு நோக்கி உள்ளது.

இடப்பக்கம் சூரியன் சிலையும், உள்சுற்றில் வீரபத்திரர், நால்வர், விநாயகர், நாகலிங்கம், மகாலட்சுமி கோயில்களும் உள்ளன. கருவறை கிழக்கு நோக்கியது.ஆலய விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது.மூலவர் சதுரபீட ஆவுடையாரில் அமைந்த லிங்கம். அம்பாள் சன்னிதி தனியாக உள்ளது.

வழிபாடுகள்

லிங்கத்தின் மேற்புறம் வெட்டுப்பட்டு அங்கே எப்போதும் சந்தனம் சார்த்தப்பட்டிருப்பனால் அபிஷேகங்கள் கிடையாது. ஆண்டுக்கொரு முறை சித்திரை சதயநட்சத்திரத்தில் சந்தனக் காப்பு களையப்பட்டு மீண்டும் சார்த்தப்படுகின்றது. வைகாசி விசாகத்தில் பத்து நாள்களுக்குப் திருவிழா. வைஷ்ணவி ஆலயமும், பிரார்த்தனைக் கோயிலாகிய 'பச்சையம்மன் கோயிலும்' உள்ளன. சென்னை பொன்னேரிப் பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை, சென்னை - திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை, இங்குள்ள கொடியிடை அம்மை ஆகிய மூன்று சிற்பங்களும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை என்றும் வெள்ளிக்கிழமையில் பௌர்ணமி வரும் நாளில் இம்மூன்று அம்பிகைகளையும் ஒரே நாளில் வணங்குவது சிறப்பு என்றும் சொல்லப்படுகிறது.

கல்வெட்டுகள்

கோயில் கருவறையைச் சுற்றி 23 கல்வெட்டுகள் உள்ளன.பரகேசரி வர்மன் உத்தம சோழதேவர் (பொ.யு. 985) தொன்மையானது. முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன், கோப்பார்த்திபேந்திரன்,ஆவூர் கூற்றத்து விளத்தூர் கிழவன் சிங்கள வீரநாரணன், இரண்டாம் ஹரிஹரன் ,இரண்டாம் தேவராயர் ,ஒற்றி மன்னன் என்னும் உடையார் ஒற்றி அரசர், அரசு பெருமாள் என்னும் காடவராயர், செம்பியன் மாதேவி,முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், நற்பாக்கிழான் கோற்றளப்பான் சூரியதேவன்,அச்சரப்பாக்கத்துத் திருநல்லூழான் இசக்கன் அறிவாளன்,மதுராந்தக பொத்தப்பிச் சோழன் ஆகியோரின் ஆட்சிக்காலத்தைச் சொல்லும் கல்வெட்டுகள் இங்குள்ளன.

உசாத்துணை


✅Finalised Page