சபரிநாதன்
To read the article in English: Sabarinathan.
சபரிநாதன் (பிறப்பு: ஜனவரி 08, 1989) தமிழ்க்கவிஞர். கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்காற்றுகிறார்.
பிறப்பு, தனிவாழ்க்கை
சபரிநாதன் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கோவில்பட்டியில் சம்பத் - முருகலஷ்மி தம்பதியருக்கு ஜனவரி 08, 1989-ல் பிறந்தார்.
கழுகுமலை R.C. சூசை மேல்நிலை பள்ளியில் ஆரம்ப கல்வியும்,கோவில்பட்டி புனித பால் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் உயர்நிலை கல்வியும் கற்றார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு (Electronics and Communications) துறையில் பட்டம் பெற்றார். தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் பணியாற்றுகிறார்.
2017-ல் யுஹமதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். மகள் மீரா மற்றும் மகன் அருகன். சென்னையில் வசிக்கிறார்கள்.
இலக்கிய வாழ்க்கை
சபரிநாதன் பள்ளி பயிலும் காலத்திலிருந்தே கவிதை எழுதுவதில் ஈடுபாடு கொண்டிருந்ததாகவும் அதற்கு பள்ளி ஆசிரியர்கள் ஊக்கம் அளித்ததாகவும் குறிப்பிடுகிறார். பள்ளி மற்றும் கல்லூரி படித்த காலங்களில் எழுதிய கவிதைகளை முறையே 'படைப்பாளி' மற்றும் 'இலைகளுக்கு இடையே வானம்' என்று தொகுத்ததாக கூறுகிறார். தன் இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக பிரமிள், தேவதேவன், தேவதச்சன் போன்ற நவீன கவிஞர்களைக் குறிப்பிடுகிறார்.
இவரது முதல் கவிதைத் தொகுப்பு 'களம் – காலம் -ஆட்டம்' புதுஎழுத்து வெளியீடு, 2011-ல் வந்தது. சபரிநாதன் மொழி பெயர்த்த ஸ்வீடிஷ் கவிஞர் தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமரின் (Tomas Tranströmer) கவிதைகள் 'உறைநிலைக்குக்கீழ்' எனும் தொகுப்பாக வெளிவந்துள்ளது.
கவிதைகள் சார்ந்த விமர்சன கட்டுரைகள் எழுதிவருகிறார். தேவதச்சன் கவிதைகள் குறித்த தேவதச்சம் கட்டுரை குறிப்பிடத்தக்கது.
இலக்கிய இடம்
சபரிநாதன் தமிழின் பின் நவீனத்துவ கவிஞர். “இவரது கவிதைகள் தொண்ணூறுகளின் மாற்றங்களை ஒட்டி தமிழ்க்கவிதையில் நிகழ்ந்த புனைவுத்தன்மை, புறவயமான விரிவு, உரைநடைமொழிபு போன்ற இயல்புகளின் நீட்சியில் ஒருபுறமும் மறுபக்கம் செவ்வியல் ஒழுங்கு, உணர்வெழுச்சி, பாடல்தன்மை, கட்டிறுக்கம், மொழிச்செறிவு, ஒருமெய்யறிதலாகக் கவிதையின் ரகசியபாதைகள் என தனித்த ஒரு உணர்திறனிலும் இயங்குகின்றன" என சபரிநாதனை நேர்காணல் செய்த பிரவீண் பஃறுளி குறிப்பிடுகிறார்.
விருதுகள்
- விகடன் விருது – 2011
- விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது - 2017
- யுவபுரஸ்கார் விருது – வால் கவிதை தொகுப்பு – 2019
நூல்கள்
- களம்-காலம்-ஆட்டம் - கவிதை தொகுப்பு - புது எழுத்து வெளியீடு 2011
- வால் - கவிதை தொகுப்பு - மணல் வீடு வெளியீடு 2016
- உறைநிலைக்குக்கீழ் - மொழி பெயர்ப்பு கவிதைகள் - கொம்பு வெளியீடு
உசாத்துணை
வெளி இணைப்புகள்
- மின்மினியின் விடியல் – சபரிநாதன் கவிதைகள்- அருணாச்சலம் மகராஜன், ஜெயமோகன்.இன், ஜூன் 10, 2017
- சபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு, ஜெயமோகன்.இன், ஜூன் 08, 2017
- ஒளிகொள்சிறகு – சபரிநாதன்கவிதைகள் - ஏ.வி.மணிகண்டன், ஜெயமோகன்.இன், ஜூன் 06, 2017
- தேவதச்சம் - சபரிநாதன் 1, ஜெயமோகன்.இன், டிசம்பர் 07, 2015
- தேவதச்சம் - சபரிநாதன் 2, ஜெயமோகன்.இன், டிசம்பர் 08, 2015
✅Finalised Page