first review completed

பெரியார் காவியம் (நா. காமராசன்)

From Tamil Wiki
Revision as of 05:45, 11 December 2023 by Tamizhkalai (talk | contribs)
பெரியார் காவியம் - நா. காமராசன்

பெரியார் காவியம் (2015) நா. காமராசன் எழுதிய நீள் கவிதை நூல். ஈ.வெ. ராமசாமிப் பெரியாரின் வாழ்க்கையை, அவரது சமூகச் சீர்திருத்தப் பணிகளை கவிதை வடிவில் நா. காமராசன் எழுதினார்.

(’பெரியார் காவியம்’ என்ற இதே தலைப்பில், பா. நாராயணன், இரா. மணியன் உள்ளிட்ட வேறு சிலரும் காவிய நூல்களை எழுதினர்)

பிரசுரம், வெளியீடு

நா. காமராசன் எழுதிய பெரியார் காவியம் கவிதா பதிப்பகத்தால், 2015-ல் வெளியிடப்பட்டது.

நூல் அமைப்பு

பெரியார் காவியம் தந்தைக்கு வணக்கம், பால்யப் பிராயம் என்று தொடங்கி, பெரியாரின் ஆரம்ப கால வாழ்க்கை, இளமைப் பருவம், துறவுநோக்கம், அரசியல் ஈடுபாடு, திருப்பூர் கூட்டம், சம உரிமைப் புரட்சி, வைக்கம் போராட்டம், சுயமரியாதை இயக்கம் எனப் பெரியரின் வாழ்க்கை நிகழ்வுகள் குறித்த பல செய்திகளைக் கொண்டுள்ளது.

இந்நூல் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பாட நூலாக வைக்கப்பட்டது. பெரியார் காவியம் நூலுக்கு மு. கருணாநிதி, கி. வீரமணி ஆகியோர் முன்னுரை அளித்தனர்.

பாடல்கள்

சம உரிமை

சொத்துரிமை பெண்களுக்கு
வேண்டுமென்று சொன்னவர்
தத்துவத்தை, சரிசமமாய்
பகிர்ந்தளித்து தலை நிமிர்ந்து
நின்றவர் வெத்து வேட்டு
வெறிபேச்சு எல்லாமே
வீண் ஆரவாரம்போல
வெளியேறி சென்றுவிட
சத்துணவுபோல நமக்கு
சரிவிகிதமாய் பயனளித்து
சரித்திரத்தை வென்றவர்.

சுயமரியாதை உரிமை

சுயமரியாதை ஒழிக என்று
சுறுசுறுப்பை போட்டிக்கே
அழைத்த பேர்கள்
உயர்மரியாதை உள்ளமெங்கும்
உள்ளதான உன்மரியாதை
என் மரியாதை எல்லாம் கேட்டு
உரிய பங்கை பெற்றுத்தந்தார்.
எப்பொழுதும் சிக்கனமாய் இருந்தார்
என்று ஏசுவோருக்கும். தூற்றுவோருக்கும்
தலைவர் ஆனார்.

பெரியாரின் பணிகள்

சுறுசுறுப்பாய் தமிழகத்தை சுற்றி சுற்றி
சுயமரியாதை பிரச்சாரம் செய்த வேந்தர்
கருகருத்த காட்டுவண்டு
பாட்டிசைத்ததைப் போல
கடமைதனை இன்பமாக செய்தமேலோன்
ஏட்டிக்குப்போட்டி என்று இல்லாமல்
தன் இயல்புக்குப் போட்டியாக
தேர்ந்தெடுத்தார்
காட்சிக்குக் காட்சியினை காணவைத்தார்
கடும்வேதப் பணியாற்றி வெற்றி பெற்றார்.
சமத்துவமாய் பெண்ணடிமை
வேண்டாமென்றார்.
சரிநிகராய் ஆணுக்கு
ஈடுகாட்ட பெண்களெல்லாம்
ஒன்றுபட வேண்டுமென்றார்.
பேரியக்கம் தனைகட்டி
நடத்தலானார் எல்லாமே
சமஉரிமை ஆகுமென்றார்.
ஏதிலர்கள் வெறும் பேச்சு
குற்றமென்றார் சொல்லாரம்
தனைகட்டி மாட்டிடாமல்
சுத்தமான கருத்துகளை
எடுத்து வைத்தார்
தீண்டாமை கொடுமைதனை
எதிர்த்தார் நன்றாய்
திருந்திடுவர் நாட்டார்
என்று எதிர்பார்த்தார்
நீண்டதொரு போராட்டம்
நடத்தி நிறபேதம் ஜாதிபேதம்
அகற்றப் பார்த்தார்.

மதிப்பீடு

பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளை, சமூகச் சீர்த்திருத்தங்களை, அவரது சிந்தனைகளை எளிய தமிழில், கவிதை வடிவில் கூறும் நூலாக பெரியார் காவியம் அமைந்துள்ளது.

உசாத்துணை

  • பெரியார் காவியம், கவிதா பப்ளிகேஷன், சென்னை, முதல் பதிப்பு: 2015


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.