வண்டிக்காரத்தெரு ராமையா பிள்ளை

From Tamil Wiki

வண்டிக்காரத்தெரு ராமையா பிள்ளை (1871-1949) ஒரு புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர், சிறந்த ஆசிரியர்.

இளமை, கல்வி

மயிலாடுதுறையில் உள்ள வண்டிக்காரத்தெருவில் பிடில் ராமசாமி ஐயர்-குப்பம்மாள் இணையருக்கு ராமையா பிள்ளை 1871-ஆம் ஆண்டு பிறந்தார். உடன் பிறந்தவர்கள் - ஜனகம்மாள் (பாடகி), சோமசுந்தரமும் கண்ணுஸ்வாமியிம் தமிழறிஞர்கள், ராமையாவும் அம்மணி அம்மாளும் இரட்டைக்குழந்தைகள்.

ராமையா பிள்ளை ஸ்வராவளி முதல் வர்ணங்கள் வரை தாய் குப்பம்மாளிடம் ஆரம்ப இசைப் பயிற்சி பெற்றார். பின்னர் நாதஸ்வரம் கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டு பேரளம் முத்துப்பிள்ளை என்ற ஆசிரியரிடம் பதினோரு ஆண்டுகள் குருகுலவாசம் செய்து கற்றார்.

தனிவாழ்க்கை

ராமையா பிள்ளை, திருநாகேஸ்வரம் பொன்னுஸ்வாமி பிள்ளை என்னும் நாதஸ்வரக் கலைஞரின் மகள் குட்டியம்மாளை மணந்தார்.

இவர்களுடைய பிள்ளைகள்:

  1. கிருஷ்ணவேணி (கணவர்: அச்சுத மங்கலம் ஜகந்நாத பிள்ளை - தவில்)
  2. ஸந்தானல்க்ஷ்மி (கணவர்: தஞ்சை கோவிந்தஸ்வாமி பிள்ளை - மிருதங்கம்)
  3. சுப்பிரமணிய பிள்ளை (நாதஸ்வரம் - வண்டிக்காரத்தெரு மணி)
  4. அபயாம்பாள் (கணவர்: வேதாரண்யம் குஞ்சிதபாதம் பிள்ளை)
  5. பாக்கியம் (கணவர்: சோழன்பேட்டை கிருஷ்ணமூர்த்திப் பிள்ளை - நாதஸ்வரம்)
  6. மாமுண்டிப் பிள்ளை (நாதஸ்வரம்)
  7. ஞானாம்பாள் (கணவர்: திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீராமுலு பிள்ளை)
  8. லக்ஷ்மி (கணவர்: திருவெண்காடு ஜயராம பிள்ளை)
  9. தக்ஷிணாமூர்த்தி பிள்ளை

இவர்களில் லக்ஷ்மியும் தக்ஷிணாமூர்த்தியும் இரட்டையர்.

இசைப்பணி

சிவகிரி, உடையார்பாளையம் முதலிய ஜமீன்களில் ராமையா பிள்ளையின் கச்சேரி அடிக்கடி நடைபெறும். தங்கப் பதக்கங்கள், தங்கச் சங்கிலி, சாதரா போன்ற பரிசுகளைப் பல முறை பெற்றிருக்கிறார். பூங்காவூர் வெங்கட்ராமய்யர் என்ற செல்வந்தர் தங்க நாதஸ்வரமும் வெள்ளி நாதஸ்வரமும் அளித்து ராமையா பிள்ளையை கௌரவித்திருக்கிறார்.

ராகங்களும் கீர்த்தனைகளும் இலக்கண சுத்தமாக வாசிப்பதும், விரலடிக்கு அதிக இடம் கொடுப்பதும் ராமையா பிள்ளையின் சிறப்பு. அத்துடன் ராமையா பிள்ளை நன்கு கற்றுக்கொடுக்கும் திறனும் கொண்டிருந்ததால் பல மாணவர்கள் இவரிடம் பயின்றனர்.

மாணவர்கள்

வண்டிக்காரத்தெரு ராமையா பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

  • செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளையின் மகன்கள்
  • வண்டிக்காரத்தெரு ஷண்முகசுந்தரம் பிள்ளை
  • தருமபுரம் அபிராமி சுந்தரம் பிள்ளை
  • செம்பொன்னார்கோவில் முத்துக்குமாரஸ்வாமி சகோதரர்கள்
  • சுப்பிரமணிய பிள்ளை, மாமுண்டிப் பிள்ளை - வண்டிக்காரத்தெரு ராமையா பிள்ளையின் மகன்கள்
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

வண்டிக்காரத்தெரு ராமையா பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

  • காரைக்கால் மலைப்பெருமாள் பிள்ளை
  • காரைக்கால் பழனிவேல் பிள்ளை
  • திருவீழிமிழலை ருத்ராபதிப் பிள்ளை
  • நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  • மாயூரம் பழனிவேல் பிள்ளை
  • திருக்கடையூர் சின்னையா பிள்ளை
  • திருவிழந்தூர் கைலாசம் பிள்ளை

மறைவு

வண்டிக்காரத்தெரு ராமையா பிள்ளை 1949ஆம் ஆண்டில் காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013