first review completed

பூங்கணுத்திரையார்

From Tamil Wiki

பூங்கணுத்திரையார், சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். சங்கத் தொகை நூல்களில் இவரது 3 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

பூங்கணுத்திரையார் உத்திரை விண்மீனில் பிறந்ததால் உத்திரை எனப் பெயர் பெற்றார். இவரது கண்ணில் பூ விழுந்திருந்ததால் இவரைப் பூங்கண் உத்திரையார் என அழைத்தனர் என்றும் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

சங்கநூல் தொகுப்பில் பூங்கணுத்திரையார் இயற்றிய மூன்று பாடல்கள் உள்ளன. குறுந்தொகையில் 48, 171-ஆவது பாடல்களையும், புறநானூற்றின் 277-வது பாடலையும் பூங்கணுத்திரையார் பாடினார்.

பாடல்வழி அறியவரும் செய்திகள்

  • சங்க காலத்தில் இளம் குமரியர் தோழியர் கூட்டத்தோடு சேர்ந்து காலை நேரத்தில் ஓரை விளையாடுகையில் பூந்தாதுகளால் பாவை செய்து விளையாடுவர்.
  • ஓரை என்பது சங்ககாலத்தில் குமரிப் பெண்கள் விளையாடிய விளையாட்டுகளில் ஒன்று
  • கடற்கரையிலும், ஆற்று மணலிலும், சேற்று நிலத்திலும், முற்றத்தில் பரப்பப்பட்ட மணலிலும் ஓரை விளையாடினர்.
  • ஓரையுடன் வண்டல்-விளையாட்டு, பாவை-விளையாட்டு, அலவன்-ஆட்டல் போன்ற விளையாட்டுகளை விளையாடினர்.
  • அன்னை மகன் போர்க்களத்தில் யானையைக் கொன்றுவிட்டு மாண்டான் என்ற செய்தியை கேட்டு அவனைப் பெற்றபோது அடைந்ததை விட மிக்க மகிழ்ச்சி கொண்டாள்.

பாடல் நடை

குறுந்தொகை 48 (பாலைத் திணை)

துறை: பகற்குறிக்கண் காணும் பொழுதினும் காணாப்பொழுது பெரிதாகலின், வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு, தோழி சொல்லியது.

தாதிற் செய்த தண்பனிப் பாவை
காலை வருந்துங் கையா றோம்பென
ஓரை யாயங் கூறக் கேட்டும்
இன்ன பண்பி னினைபெரி துழக்கும்
நன்னுதல் பசலை நீங்க வன்ன
நசையாகு பண்பின் ஒருசொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே.

குறுந்தொகை 171 (மருதத் திணை)

துறை: வரைவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது

காண் இனி வாழி தோழி யாணர்க்
கடும்புனல் அடைகரை நெடுங்கயத்து இட்ட
மீன்வலை மாப் பட்டாஅங்கு
இது மற்று எவனோ நொதுமலர் தலையே.

புறநானூறு 277 (தும்பைத் திணை)

துறை: உவகைக் கலுழ்ச்சி

மீன்உண் கொக்கின் தூவிஅன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.