first review completed

நெடும்பல்லியத்தை

From Tamil Wiki
Revision as of 20:15, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)

நெடும்பல்லியத்தை, சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது 2 பாடல்கள் சங்கத் தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

நெடும்பல்லியத்தை, புறநானூற்றிலுள்ள 64- வது பாடலைப் பாடிய நெடும்பல்லியத்தனார் என்னும் புலவரின் சகோதரியாக இருக்கலாம். பல்லியம் என்பது இசைக்கருவிகள் ஆகும். ஆகவே இவர்கள் இருவரும் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதுகின்றனர்.

நெடும்பல்லியத்தை இயற்றிய பாடல்கள் இரண்டும் அகத்திணையில் மருதத்திணைப் பொருள் கொண்டவை. அவை குறுந்தொகை 178 மற்றும் 203 ஆகியவை.

இலக்கிய வாழ்க்கை

நெடும்பல்லியத்தை இயற்றிய பாடல்கள் இரண்டும் அகத்திணையில் மருதத்திணைப் பொருள் கொண்டவை. அவை குறுந்தொகை 178 மற்றும் 203 ஆகியவை.

பாடல் சொல்லும் செய்திகள்

  • முனிவரைக் காண்பவர் தம் தூய்மையின்மை காரணமாக அஞ்சி விலகி ஒழுகுவதைப் போலத் தலைவன் தன்னிடத்திலிருந்து விலகி வாழ்கிறான் என்று தலைவி கூறுவதாகத் தோன்றுகிறது. இவ்வுவமையால், தனது தூய்மையையும் தலைவனது பரத்தை ஒழுக்கத்தால் தலைவனுடைய தூய்மையின்மையையும் தலைவி குறிப்பால் உணர்த்துகிறாள்(குறு 203)
  • அக்காலத்தில் கன்னியர். மூன்றாம் பிறையைக் காண்பது ஒரு மரபாக இருந்ததை அறிய முடிகிறது (குறு 178).
  • குளத்தில் நீந்தி ஆம்பல் பூக்களைப் பறிப்போருக்கு தாகம் எடுத்தால் ஆம்பல் பூவின் உள்துளை கொண்ட காம்பினை உடைத்து, நீரில் அந்தக் காம்பின் ஒரு முனையை வைத்து மறுமுனையைத் தன் வாயில் வைத்து நீரைப் பருகுவர். இப்படி நீர் நிறைந்த இடத்திலும் தாகம் நிறைந்தவனைப்போல் தலைவன் தலைவி அருகில் இருந்தும் துடிக்கும் விந்தை உணர்த்தப்படுகிறது. (குறு 178)

பாடல் நடை

குறுந்தொகை 178

திணை: மருதம்.

கூற்று: கடிநகர் புக்க தோழி, தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு,முன்னர்க் களவுக் காலத்து ஒழுகலாற்றை நினைந்து அழிந்து கூறியது

அயிரை பரந்த அந்தண் பழனத்
தேந்தெழின் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள்
இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர்
தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநுமக்
கரிய மாகிய காலைப்
பெரிய தோன்றினிர் நோகோ யானே.

(அயிரைமீன்கள் நிறைந்த, அழகிய குளிர்ந்த நீர்நிலையில், நீர்பரப்பின் மேலெழுந்து நிற்கும் அழகுடைய மலர்களாகிய, உள்ளேதுளையையுடைய, திரண்ட தண்டுகளைக்கொண்ட ஆம்பலைப் பறிப்போர், நீருக்குள்ளே இருந்தும் குடிநீருக்கு வேட்கை கொண்டதுபோல், நீர் இத்தலைவியின் முலையிடத்தே உறங்கிய பின்பும், காமவேட்கையால் நடுங்குகின்றீர். யாம், கன்னிப் பெண்களும் பிறரும் தொழுது காணும் பிறையைப்போல் தோன்றி, எங்களைக் காண்பதற்கு அரியதாக இருந்த களவுக் காலத்தில், பெரிய வருத்தங்களைப் பொறுத்தீர் போலும்; நான் இப்போது அதனை எண்ணி வருந்துகிறேன்.)

குறுந்தொகை 203

திணை: மருதம்

கூற்று: வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

மலையிடை யிட்ட நாட்டரு மல்லர்
மரந்தலை தோன்றா ஊரரு மல்லர்
கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீஇ ஒழுகும் என்னைக்குபபப
பரியலென் மன்யான் பண்டொரு காலே.

(தலைவர் இருக்கும் ஊருக்கும் நான் இருக்கும் ஊருக்கும் இடையே மலைகள் இல்லை; அவர், மரங்கள் நிறைந்த காடுகள் இருப்பதால் காணமுடியாத ஊராரும் அல்லர்; கண்ணாலே காணும்படி, விரைவில் வருதற்குரிய அண்மையான இடத்திலிருந்தும், முனிவரை அணுகி வாழ்பவர்களைப்போல், மனத்தால் நீங்கி வாழ்கின்ற என் தலைவர்பொருட்டு, நான், முன்பு ஒரு காலத்தில் அன்புடையவளாக இருந்தேன். அந்த அன்பு இப்பொழுது மறைந்து விட்டது.)

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.