first review completed

சுப்பிரமணிய வேதியர்

From Tamil Wiki

சுப்பிரமணிய வேதியர் (குருகூர்ச் சுப்பிரமணிய தீட்சிதர்) (பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். வடமொழியைத்தழுவி 'பிரயோக விவேகம்' என்ற இலக்கண நூலை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சுப்பிரமணிய வேதியர் திருநெல்வேலிக்கருகிலுள்ள திருக்குருகூரில் (தூத்துக்குடி மாவட்டம்) பிறந்தார். தற்போதைய ஆழ்வார்திருநகரியே திருக்குருகூர் என்றழைக்கப்பட்டது. பிராமணர், திருமாலிடத்தில் பக்தி கொண்டவர். சுவாமிநாத தேசிகருடைய சகபாடி. இருவரும் கனகசபாபதி ஐயரிடம் சமஸ்கிருதம் கற்றனர். குருகூர்ச் சுப்பிரமணிய தீட்சிதர் சுவாமிநாததேசிகரின் சமகாலத்தவர் என்று சைமன் காசிச் செட்டியும் கருதினார்.

இலக்கிய வாழ்க்கை

சுப்பிரமணிய வேதியர் சுவாமிநாத தேசிகரின் வேண்டுகோளின்படி பிரயோக விவேகம் என்னும் இலக்கண நூலை அதே பெயர் கொண்ட சமஸ்கிருத நூலைத் தழுவி எழுதினார். இதில் காரக படலம், சமாசபடலம், தத்திதபடலம், திங்கப்படலம் எனும் நான்கு படலங்களில் 51 கலித்துறைப் பாடல்கள் உள்ளன. தன் நூலுக்குத் தானே உரை எழுதினர். பிரயோக விவேகம் இராமபத்திர தீட்சிதர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டதென்று நூலின் புறவுறுப்பான இரு வெண்பாக்களுள் ஒன்று குறிப்பிடுகின்றது. இராமபத்திர தீட்சதரைப் போற்றும் பாடலொன்று திங்கப்படலத்தின் இறுதியில் உள்ளது. தஞ்சை ஷாஜி மன்னரின் அரசவைக் கவிஞரான இராமபத்திர தீட்சிதர் முன்னிலையில் பிரயோகவிவேகத்தை அரங்கேற்றம் செய்தார்.

சுவாமிநாத தேசிகர் இயற்றிய இலக்கணக்கொத்தின் பாயிரத்தில் வரும் ஏழாம் நூற்பாவில் இடம் பெறும் உரைச் சூத்திரத்தில் வைத்தியநாத நாவலரும் சுப்பிரமணிய தீட்சிதரும் நூலியற்றி அவற்றிற்கு உரையும் எழுதியதாகக் குறிப்பு உள்ளது. ஆறுமுக நாவலர் பரிசோதித்த பிரயோகவிவேகவுரையின் பதிப்பொன்று சென்னை வித்தியானுபாலன யந்திரசாலையில் 1882-இல் அச்சிடப்பட்டது.

பாடல் நடை

  • கலித்துறைப்பாடல்

பெரும்புங் கவர்புகழ் போதா யனிசுப் பிரமணியன்
அரும்புங் குருகையிற் கோதில் குலோத்துங்க னரிடமாய்
விரும்பும் பொருளைத் தரும்பிர யோக விவேகவுரை
கரும்புங் கனியு மெனப்பாடி னன்றமிழ் கற்பவர்க்கே.

நூல் பட்டியல்

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.