first review completed

க. நவரத்தினம்

From Tamil Wiki
Revision as of 03:02, 30 November 2022 by Tamizhkalai (talk | contribs)
க. நவரத்தினம்

க. நவரத்தினம் (செப்டம்பர் 15, 1898-1962) ஈழத்து தமிழ் எழுத்தாளர், கலை இலக்கிய விமர்சகர். சைவ சமயம், கலை, வர்த்தகத்துறை நூல்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

க. நவரத்தினம் இலங்கை யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த த. கந்தையாப்பிள்ளை- பொன்னம்மாள் இணையருக்கு மகனாக செப்டம்பர் 15, 1898 அன்று பிறந்தார். வெஸ்லியன் மிஷனால் நடத்தப்பட்ட தமிழ்ப்பாட சாலையில் ஆரம்பக் கல்வி பயின்றார். யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்தார். கொழும்பிலுள்ள வர்த்தகக் கல்லூரியில் பயின்று வர்த்தகக் கல்வியில் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

க. நவரத்தினம் மகேஸ்வரிதேவியை 1934-ல் திருமணம் செய்தார்.

ஆசிரியப்பணி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 1920-ல் ஆசிரியராகச் சேர்ந்து 1958 வரை பணியாற்றினார். யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் வர்த்தகக் கற்கை நெறியை ஆரம்பித்தார். கல்லூரியின் நூலக வளர்ச்சிக்கும், சித்திர கைவேலை முதலியவற்றின் வளர்ச்சிக்கும் உதவினார்.

கலை வாழ்க்கை

க. நவரத்தினம் 1939-ல் ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்தி அதில் பௌத்த, இந்து, ராஜபுத்திர ஓவியங்கள், ஓரிசா, நேபாள தேசத்து ஓவியங்களுமாக எழுபத்தொரு ஓவியங்களைக் காட்சிப்படுத்தினார். க. நவரத்தினம் ’தென்னிந்திய சிற்ப வடிவங்கள்’, ’இலங்கையிற் கலைவளர்ச்சி’ ஆகிய கலை நூல்களைப் படங்களுடன் வெளியிட்டார்.

சரஸ்வதி விலாசகான சபை

க. நவரத்தினம் டிசம்பர் 5, 1930-ல் ‘சரஸ்வதி விலாசகான சபை’ என்னும் இலக்கிய வளர்ச்சி நிறுவனத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவினார். இப்பணிகளுக்கு சுவாமி உருத்திர கோடீசுவரர் உதவி செய்தார். இலக்கியம், தத்துவம், ஓவியம், நாகரிகம், வரலாறு இவற்றில் இந்தியாவும் இலங்கையும் அடைந்த முன்னேற்றங்களையும் வளர்ச்சிகளையும் ஆராய்ந்தறிதல், இவற்றை இக்கால ஆராய்ச்சி முறையில் விளக்குதல்,கலைகளின் புத்துயிர்ப்புக்கும் நாட்டின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் முயற்சி மேற்கொள்ளுதல் முதலியவற்றை முக்கிய நோக்கங்களாக சரஸ்வதி விலாசகான சபை கொண்டிருந்தது. இதன் செயலாளராக க. நவரத்தினம் செயற்பட்டார்.

இருபதாம் நூற்றாண்டில் கலை வளர்த்த நிறுவனங்களாக நாடக சபாக்கள், குழுக்கள் விளங்கின. இசை நாடக மரபினைப் பேணிய நிலையங்களுள் ஒன்றாக ‘சரஸ்வதி விலாசகான சபா’ இருந்தது. இந்த நிலையத்தின் மூலம், ‘ஞாயிறு’ எனும் தமிழ் இதழ் இரு மாதங்களுக்கு முறை வெளியிடப்பட்டது.

இந்நிலையத்தில் சு. நடேசபிள்ளை, வி. இராமசாமி சர்மா, சி. கணேசையர், சுவாமி ஞானப்பிரகாசர், த. குமாரசாமிப்பிள்ளை, சி.முருகையர், சி.எஸ். கணபதி அய்யர், பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், பண்டிதர் சி. கணபதிபிள்ளை, சுவாமி விபுலானந்தர் முதலிய தமிழறிஞர்கள் விரிவுரை நிகழ்த்தினர்.

அமைப்புப் பணிகள்

க. நவரத்தினம் 1920-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒரு பாடசாலையைச் சுவாமி விபுலானந்தருடன் இணைந்து ஆரம்பித்து நடத்தினார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் நான்காவது தமிழ் விழா யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட போது அதன் செயலாளராகச் செயற்பட்டார்.

சொற்பொழிவு

இலங்கை, கண்டியில் 1943-ல் நடைபெற்ற சர்வமத கோட்பாடுகளின் மாநாட்டில் ‘சைவ சித்தாந்தம்’ பற்றி விரிவுரை நிகழ்த்தினார். புதுடெல்லியில் 1956-ல் நடைபெற்ற ஆசிய எழுத்தாளர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு, “சமயம் நிலைத்து நிற்க வேண்டுமானால் நவீன பண்பாட்டிற்குத் தக்கபடி அதில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். மனித குல சகோதரத்துவத்தை ஏற்படுத்தவும், மனிதர்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும் இணக்கத்தையும் உண்டாக்கவும் சமயம் உதவுதல் வேண்டும்” என்பதை வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் கலை வளர்ச்சி, இலங்கையில் கலை வளர்ச்சி, 'இந்திய ஓவியங்கள்', 'நாவலர் கோட்டம் முத்துத்தம்பிப்பிள்ளை', 'சி. கணேசையர்', 'நடராஜ வடிவம்' முதலிய தலைப்புகளில் க. நவரத்தினம் வானொலியில் உரை நிகழ்த்தினார்.

இலக்கிய வாழ்க்கை

இந்திய சிற்பக் கலையைப் பற்றிய சிறந்த ஆங்கில ஆராய்ச்சி நூல்களின் ஆராய்ச்சி முறைகளைப் பின்பற்றித் தமிழில் சிற்பக் கலையைக் குறித்த ‘தென்னிந்திய சிற்ப வடிவங்கள்’ என்ற நூலை எழுதினார். நெசவுத் தொழில், ஆபரணத் தொழில், உலோக வேலைகள் போன்றவை மீண்டும் மறுமலர்ச்சி பெறுவதை அடிப்படையாகக் கொண்டு ‘யாழ்ப்பாணக் கலைகளும் கைப்பணிகளும்’ எனும் கட்டுரையை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டார். தீண்டாமையைக் கண்டித்தும், மது ஒழிப்பினை வலியுறுத்தியும் ஈழகேசரி, வீரகேசரி, இந்து சாதனம் போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.

க. நவரத்தினம் எழுதிய, ‘இலங்கையிற் கலை வளர்ச்சி’ என்னும் நூல் 1954-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்நூல் வெளியீட்டு விழாவில் க. நவரத்தினத்திற்கு ‘கலைப்புலவர்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

க. நவரத்தினம் சைவ சித்தாந்தத்தை பயின்று ஆராய்ந்தார். பதினெண் புராணங்களைப் பற்றி ஆங்கிலத்தில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதினார். 1943-ல் கண்டியில் நடைபெற்ற சர்வமதக் கோட்பாடுகளின் மகாநாட்டில் சைவ சித்தாந்தம் பற்றி விரிவுரை நிகழ்த்தினார். க. நவரத்தினம் கலை நூல்களையும், சமய நூல்களையும், வர்த்தகத்துறை நூல்களையும் எழுதினார்.

க. நவரத்தினம், தமிழ்க் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்துதல், தமிழ் மக்கள் அனைவரும் அவற்றை அறிந்திடச் செய்தல், திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களை தமிழ் நூல்களின் வாயிலாக ஆய்வு செய்து உண்மை வரலாற்றைக் கூறுதல் ஆகிய நோக்கங்களைத் தமது கலை வரலாற்று எழுத்தியலுடன் கட்டமைத்தார். மதம், கலாசாரம், கலை குறித்து ஒன்பது ஆங்கில நூல்களையும் எழுதி அளித்துள்ளார்.

விருது

க. நவரத்தினம் கலை இலக்கியச் சமூகத் துறைகளில் ஆற்றிய பணிகளைக் கௌரவித்து மேலவை, நாடாளுமன்ற உறுப்பினர் சு. நடேசபிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இலங்கையிற் கலைவளர்ச்சி என்னும் நூல் அறிமுக விழாவின் போது யாழ்ப்பாண மக்கள் சார்பில் "கலைப்புலவர்" என்னும் பட்டத்தை நடேசபிள்ளை வழங்கிக் கௌரவித்தார்.

இலங்கைத் தமிழ்ச் சுடர்மணிகள் - கலைப்புலவர் க.நவரத்தினம்

மறைவு

க. நவரத்தினம் தனது அறுபத்து நான்காவது வயதில் 1962-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • தென்னிந்திய சிற்ப வடிவங்கள்
  • இலங்கையிற் கலைவளர்ச்சி
  • யாழ்ப்பாணக் கலையும் கைப்பணியும்
  • இந்திய ஓவியங்கள்
  • வீர சைவம் அல்லது இலிங்காயுதம்
  • சிவானுபூதி செந்நெறி
  • கணக்குப் பதிவு நூல்
  • உயர்தரக் கணக்குப் பதிவு நூல்
  • இக்கால வாணிப முறை
ஆங்கில நூல்கள்
  • Arts and Crafts of Jaffna
  • Development of Art in Ceylon
  • Religion and Art
  • Tamil Element in Ceylon Culture
  • Advaita Vedanta -An Introductory Study
  • Saiva Siddhanta
  • Hindu Temple Reform
  • Bhagavad Gita – An Introductory Study
  • Studies in Hinduism
க. நவரத்தினத்தைப் பற்றிய நூல்கள்
  • இலங்கைத் தமிழ்ச் சுடர்மணிகள் - கலைப்புலவர் க.நவரத்தினம்: தமிழினி கமல்ராஜ்

உசாத்துணை

இணைப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.