பூங்கணுத்திரையார்
பூங்கணுத்திரையார், சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். சங்கத் தொகை நூல்களில் இவரது 3 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
பூங்கணுத்திரையார் பெயரைப் பூங்கண் உத்திரையார் என்று பிரித்துப் பார்க்கின்றனர். ஆதிரை என்பது போல உத்திரை என்பதும் ஒரு பெயர். 27 நாள்மீன் (நட்சத்திரத்தில்) வரிசையில் 12- வது மீன் உத்திரை. இந்நாளில் பிறந்த இவருக்கு உத்திரை என்று பெயரிட்டனர் எனவும் புலவராக விளங்கியதால் இவரை உத்திரையார் என்னும் சிறப்புப் பெயரால் வழங்கலாயினர் என்றும் இவரது கண்ணில் பூ விழுந்திருந்ததால் இவரைப் பூங்கண் உத்திரையார் (பூங்கணுத்திரையார்) என அழைத்தனர் என்றும் கருதப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
சங்கநூல் தொகுப்பில் பூங்கணுத்திரையார் இயற்றிய 3 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. குறுந்தொகையில் 48 மற்றும்171- வது பாடல்களையும், புறநானூறு நூலின் 277- வது பாடலையும் பூங்கணுத்திரையார் இயற்றியுள்ளார்.
பாடல்வழி அறியவரும் செய்திகள்
குறுந்தொகை 48
- பாலைத்திணை பாடல்
- பகற்குறிக்கண் காணும் பொழுதினும் காணாப்பொழுது பெரிதாகலின், வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு, தோழி சொல்லியது.
- தோழியர் கூட்டத்தோடு சேர்ந்து காலை நேரத்தில் ‘ஓரை’ விளையாடுகையில் பூந்தாதுகளால் பாவை செய்து விளையாடுவர். அவர்களோடு சேர்ந்து விளையாடிய தலைவி அழுதுகொண்டிருந்தாள்.
- “நீ அழுதால் பாவை வருந்தும், ஆதலால் அழாதே” என்று கூறித் தோழியர் தலைவியைத் தேற்றினர். அதனைக் கேட்ட பின்னரும் தலைவி அழுதுகொண்டே இருந்தாள்.
- இப்படி அழும் தலைவியின் நெற்றியில் தோன்றிய பசலை நீங்க அவளுக்கு ஒரு தேவை ஒரு சொல். அந்தச் சொல் அவளது காதலனிடமிருந்து கிடைக்காதா எனக் கேட்கிறார்கள்.
குறுந்தொகை 171
- மருதத்திணை பாடல்
- வரைவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது
- மீனுக்கென அமைத்த வலையில் விலங்கு பட்டாற் போலத் தலைவனுக்கென அமைந்த தன்னை வேறொருவர் மணக்க முயல்கின்றனர். இதனால் பயனென்ன என தலைவி வினவுகிறாள்.
புறநானூறு 277
- திணை: தும்பை
- துறை: உவகைக் கலுழ்ச்சி
- மீனைத் தின்னும் கொக்கின் சிறகு வெளுத்திருப்பது போல நரைத்த கூந்தலை உடையவள். அவள் மகன் போர்க்களத்தில் யானையைக் கொன்றுவிட்டு மாண்டான். செய்தியை கேள்வியுற்ற அவள் அவனைப் பெற்றபோது அடைந்ததை விட மிக்க மகிழ்ச்சி கொண்டாள். என்றாலும், மழை பொழியும்போது மூங்கில் இலைகளின் நுனியிலிருந்து சொட்டும் நீர்த்துளிகள் போல அவள் கண்களிலிருத்து கண்ணீர் விழுந்தன.
பாடல் நடை
குறுந்தொகை 48
<poem>
தாதிற் செய்த தண்பனிப் பாவை காலை வருந்துங் கையா றோம்பென
ஓரை யாயங் கூறக் கேட்டும்
இன்ன பண்பி னினைபெரி துழக்கும்
நன்னுதல் பசலை நீங்க வன்ன
நசையாகு பண்பின் ஒருசொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே.
</poem>
புறநானூறு 277
<poem>
மீன்உண் கொக்கின் தூவிஅன்ன வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.
</poem>
உசாத்துணை
- மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்
- எட்டுத்தொகை நூல்கள், தமிழ் சுரங்கம்
- குறுந்தொகை 171, தமிழ் சுரங்கம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.