first review completed

ஏ. தேவராஜன்

From Tamil Wiki
ஏ. தேவராஜன்

ஏ. தேவராஜன் (ஜூன் 20, 1967) மலேசிய எழுத்தாளர், கவிஞர் மற்றும் இதழாசிரியர். இவர் ஏராளமான கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

பிறப்பு, கல்வி

ஏ. தேவராஜன் ஜூன் 20, 1967-ல் ஜாசின் மலாக்காவில் உள்ள புக்கிட் செர்மின் தோட்டத்தில் பிறந்தார். தேவராஜனின் தந்தையார் பெயர் யேசுதாஸ். தாயாரின் பெயர் ரூத். ஐந்து உடன் பிறந்தவர்களில் தேவராஜன் மூத்தவர். இவருக்கு இரண்டு தம்பிகளும் இரண்டு தங்கைகளும் உள்ளனர்.

தேவராஜன் 1974-லிருந்து 1979 வரை ஆரம்பகால கல்வியை ஜாசின் லாலாங் தோட்ட தமிழ்பள்ளியில் பயின்றார். 1980-லிருந்து 1987 வரை ஜாசினில் உள்ள டத்தோ பென்டஹாரா இடைநிலைபள்ளியில் படிவம் ஆறு வரை பயின்றார். 1980-லிருந்து 1982 வரை சிரம்பான் ராஜ மலேங்கார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் (Maktab Perguruan Raja Melewar) இடைநிலை தமிழ் மொழிக்கான கல்வியைப் பயின்றார். மலேசிய புத்ரா பலகலைகழகத்தில் தேசிய மொழி முதல் மொழியாக 2000-ல் இளங்கலையும் 2006-ல் கல்வி நிர்வாகவியலில் முதுகலை பட்டமும் பெற்றார்.

குடும்பம், தொழில்

தேவராஜன் தன் மனைவி தமிழ்செல்வியுடன்

ஏ. தேவராஜன் டிசம்பர் 2, 2000-ல் தமிழ்செல்வி என்பவரை மணமுடித்தார். இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

தேவராஜன் ஓர் இடைநிலைப்பள்ளி ஆசிரியர். மலாய் மொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் ஆகியவை இவர் பயிற்றுவிக்கும் பாடங்கள்.

கே. பாலமுருகன், மஹாத்மன், பா.அ. சிவம், ந. பச்சைபாலன், கோ. புண்ணியவான், ஏ. தேவராஜன் (இடமிருந்து வலம்)

இலக்கிய வாழ்கை

1983-ல் தேவராஜன் தனது 15 வயதில் காஜா பேராங் தமிழ் இளைஜர் மணிமன்றம் நடத்திய இலக்கிய போட்டியில் ‘ஒளியைத் தேடி’ எனும் சிறுகதையை எழுதி முதல் பரிசு பெற்றார். இச்சிறுகதை  வானம்பாடி இதழில் வெளிவந்தது.

தேவராஜன் தொடர்ந்து வானம்பாடி, மயில், கோமாளி, சூரியன், தென்றல், காதல், வல்லினம் ஆகிய இதழ்களில் சிறுகதைகள், நகைச்சுவை கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என ஏராளமாக எழுதியுள்ளார். தேவராஜன் எழுதிய ‘ஒற்றை சிறகுடன் ஒரு தேவதை’ எனும் தொடர்கதை 'மலர்' இதழில் 2002-ல் வெளிவந்தது.

90-ல் தேவராஜன் மலேசிய நண்பன் நாளிதழில் கவிதை களம் அங்கத்தில் மரபுக்கவிதைகளை எழுத தொடங்கினார். மலேசிய நண்பன் ஞாயிறு களம் அங்கத்தில் மது பழக்கத்தை ஒட்டி முதல் வெண்பா எழுதினார். தொடர்ந்து, ஏ. தேவராஜனின் ஹைக்கூ கவிதைகள் நயனம், தென்றல், வானம்பாடி ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்தன.

தேவராஜனின் படைப்புகள் தமிழக இணைய இதழ்களான உயிரோசை, திண்ணை ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.

இதழியல்

ஏ. தேவராஜன் மலேசிய நவீன கவிதைகளின் முன்னெடுப்பிற்காக 'மௌனம்' இதழை 2009-ல் தொடங்கினார். எழுத்தாளர் பா.அ. சிவம் அஞ்சலி சிறப்பிதழுடன் மார்ச் 13, 2013-ல் அவ்விதழை நிறுத்தினார். 'மௌனம்' மொத்தம் பதினேழு இதழ்கள் வெளிவந்தன.

மேலும் 2000-லிருந்து 2014 வரை எழுத்தாளர் மா. இராமையா நடத்திய இலக்கியகுரிசில் இதழில் துணையாசிரியராக பங்களித்தார்.

வானொலி

2000-க்கு முன் மின்னல் பண்பலையில் இலக்கிய பூச்சரம் எனும் நிகழ்ச்சிக்கு எழுத்தாளர்களைப் பேட்டி கண்டுள்ளார் தேவராஜன். மேலும் வானொலிக்காக சிறுவர் நாடகங்கள், சிறுகதைகள், இசை சொல்லும் கதை, நேயர் நெஞ்சம், வானொலி நாடகங்கள் என எழுதியுள்ளார்.

தனிசிறப்பு

தேவராஜன்

தேவராஜன் பல்குரல் திறமை பெற்றவர். மேடை நிகழ்ச்சிகளை வழிநடத்துவதிலும் பாடுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.

இலக்கிய இடம்

ஏ. தேவராஜன் மலேசியாவில் குறிப்பிடத்தக்க கவிஞராகக் கருதப்படுகிறார். அவர் முன்னெடுத்த 'மௌனம்' இதழ் 2000-ல் உருவான கவிஞர்களை ஒருங்கிணைக்க உதவியது. நவீன கவிதைகள் குறித்த உரையாடல் உருவாகக் காரணியாக அமைந்தது.

ஏ. தேவராஜனின் 'அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது' எனும் கவிதை தொகுப்பு குறித்து விமர்சனத்தை முன் வைக்கும் எழுத்தாளர் விஷால் ராஜா, ஏ. தேவராஜனின் தொகுப்பில் கவிதைக்குரிய அசலான மொழி வேகமோ உணர்ச்சி வேகமோ இல்லை என்கிறார்.

மலேசியாவின் பொதுரசனைக்குரிய மரபுக்கவிதைகளையும் புதுக்கவிதைகளையும் ஏ.தேவராஜன் எழுதியிருக்கிறார். அவற்றில் மலேசியாவின் சமூகச்சூழல், அரசியல், பண்பாட்டுத்தளத்தில் வெளிப்படும் பொதுவான கருத்துக்கள் ஆகியவை முன்வைக்கப்படுகின்றன.

தேவராஜன் 4.jpg

நூல் பட்டியல்

கவிதை
  • அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது, தங்கமீன் பதிப்பகம், 2012
சிறுகதை
  • அரிதாரம் கலைந்தவன், தங்கமீன் பதிப்பகம், 2009
  • ஏழாவது குற்றம், தங்கமீன் பதிப்பகம், 2013
  • காதல் நதி, சாய் அச்சகம் மலாக்கா, 2020
தொகுப்பாசிரியர்
  • மொட்டுகளே, (மாணவர் கவிதைகள்) சாய் அச்சகம் மலாக்கா, 2020
  • தமிழ் மொழி, (மாணவர் கட்டுரை) சாய் அச்சகம் மலாக்கா, 2020
  • விழிதிறவி, சாய் அச்சகம் மலாக்கா, 2020

விருது, பரிசு

  • ‘ஒளியைத் தேடி’, ‘புது துரை’, ‘விடியல்’, மலாக்கா காஜா பேராங், தமிழ் இளைஜர் மணிமன்றம் இலக்கிய போட்டி, 1983,1984,1985
  • கவிதை துறையில் பரிசில், டான்ஶ்ரீ டத்தோ ஆதிநாகப்பன் இலக்கிய பரிசுப் பாராட்டு மடல், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், பிப்பரவரி 28, 1998
  • ‘இடைச்சாரி’ முதல் பரிசு , தென்றல் சிறுகதை போட்டி 2005
  • ‘பொய்யெல்லாம் பொய்யல்ல’ முதல் பரிசு, தென்றல் சிறுகதை போட்டி, 2008.
  • ‘ஏழாவது குற்றம்’, இரண்டாவது பரிசு டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தக பரிசளிப்பு திட்டம், மலேசிய எழுத்தாளர் சங்கம், 2014
  • ’அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது’ முதல் பரிசு டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தக பரிசளிப்பு திட்டம், அக்டோபர் 16, 2016
  • புதுக்கவிதை முதல் பரிசு, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 24ம் ஆண்டு, டான்ஶ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், ஆக்டோபர் 21, 2010
  • புதுக்கவிதை மூன்றாம் பரிசு, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 24ம் ஆண்டு, டான்ஶ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், ஆக்டோபர் 21, 2010
  • புதுக்கவிதை இரண்டாம் பரிசு, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 24ம் ஆண்டு, டான்ஶ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், செப்டெம்பர் 18, 2017
  • ‘வெட்டி வேலா’ இலக்கியச் செம்மல் முனைவர் ரெ. கார்த்திகேசு பரிசு, நவம்பர் 5, 2017.
  • மூன்றாம் பரிசு, நல்லார்க்கினியன் மரபு கவி விருது, ஏப்ரல் 28, 2018
  • ‘பல குரல் வேந்தன்’ விருது, டாக்டர் எம்.ஜி.ஆர் கொள்கை இயக்கம், 2015

உசாத்துணை

மலேசிய நவீன கவிஞர்கள் (2): ஏ. தேவராஜன் கவிதைகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.