under review

நான்முகன் திருவந்தாதி

From Tamil Wiki
Revision as of 14:13, 1 June 2025 by Logamadevi (talk | contribs)

நான்முகன் திருவந்தாதி நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் மூன்றாம் ஆயிரத்தில் இயற்பா தொகுப்பில் இடம்பெறும் பிரபந்தம். திருமழிசை ஆழ்வாரால் இயற்றப்பட்டது.

ஆசிரியர்

நான்முகன் திருவந்தாதியை இயற்றியவர் திருமழிசை ஆழ்வார். நாலாயிரத்தில் திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி இரண்டும் இவர் இயற்றியவை. சந்த நயமும், சொல் நயமும் மிக்க பாடல்களை இயற்றினார்.

பெயர்க்காரணம்

திருமாலைப் பற்றிய பிரபந்தமாக இருந்தாலும் முதல் பாடல் 'நான்முகன்' எனத் தொடங்குவதால் 'நான்முகன் திருவந்தாதி' எனப் பெயர் பெற்றது.

நூல் அமைப்பு

நான்முகன் திருவந்தாதி அந்தாதித் தொடையில் 95 வெண்பாக்களைக் கொண்டது (சீராமப்பிள்ளையின் தனியனைச் சேர்த்து 96). . உலக வாழ்வின் நிலையாமை, இறையனுபவத்தால் கிடைக்கும் ஆனந்தம், சரணாகதி தத்துவம், பக்தி மார்க்கத்தின் சிறப்பு, வாத்ஸல்ய பக்தி, அவதாரங்கள் (வாமன, நரசிம்ம, வராக, ராம அவதாரங்கள்) குறிப்பாக கிருஷ்ணாவதாரத்தின் சிறப்புகள் போன்றவை இந்தப் பாடல்களின் பேசுபொருள்கள். நாராயணனின் பரத்வம் பேசப்படுகிறது. பகவத் கீதையின் சாரமான சரம ஸ்லோகத்தின் கருத்தும் கூறப்படுகிறது.

சைவம், சமணம் உள்ளிட்ட பிற சமயங்களை நிந்தனை செய்யும் போக்கு காணப்படுகிறது. நாரயணனே பரம் என்பதால் சிவன், பிரம்மா போன்ற தெய்வங்களை அவன் அருள் வேண்டி நிற்பவர்களாகவும், பிற தெய்வ தெய்வங்களை வழிபடுபவர்கள் அடையும் துன்பங்களும் கூறப்படுகின்றன.

ஆழ்வார்களின் படைப்புகளில் முதல் முறையாக மாதுர்ய பக்தி திருமழிசை ஆழ்வாரின் பாடல்களிலேயே காணக் கிடைக்கிறது.

திருமழிசை ஆழ்வார் பாடல்களுக்கும், திருநாவுக்கரசர் பாடல்களுக்கும் பல ஒற்றுமைகளைக் காணலாம். திருமழிசை ஆழ்வார் தாம் சமணத்தைக் கற்றதாகக் கூறுகிறார். இவர் வைணவராதற்கு முன்பு சமணராக இருந்ததாகக் கதை உண்டு. இவர் தாம் பௌத்தத்தையும் கற்றதாகக் கூறியுள்ளார்.

உரை

நான்முகன் திருவந்தாதிக்கு பெரியவாச்சான் பிள்ளையும் அப்பிள்ளையும் உரை எழுதியுள்ளனர்.

சிறப்புகள்

நான்முகன் திருவந்தாதியில் நிலையாமை என்னும் கருத்து சிறப்பிடம் பெறுகிறது.

கடல் நீரிலிருந்து அலைகள் தோன்றி, மீண்டும் அவை அதிலேயே அடங்கிவிடுவதுபோல பரம்பொருளாகிய நாராயணனிடமிருந்தே பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருள்களும் தோன்றி, மகாபிரளயத்தில் அவனிடமே அடங்குகின்றன என்று திருமழிசையாழ்வார் படைப்பின் முழுமுதற் பொருளாக நாராயணனையே காண்கிறார்.

பக்தனுக்கு நாராயணனையன்றி வேறு புகல் கிடையாதது,போல் பக்தனைக் கடைத்தேற்றாவிடில் நீயும் பூர்ணமாக ஆக மாட்டாய் என்று இறைவனுக்கும் நமக்கும் உள்ள ஒழிக்க முடியாத தொடைபைக் காட்டிக் கொடுக்கிறார். 'கோவிந்தா உந்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது' என்ற ஆண்டாள் பிற்காலத்தில் கூறியபடி ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள அறாத உறவு திருமழிசையாழ்வாரால் எடுத்துக் காட்டப்படுகிறது.

பாடல் நடை

நான்முகனை நாராயணன் படைத்தான்

நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், – யான்முகமாய்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து.

நானுன்னை அன்றி இலேன்

இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென் பாலதே, – நன்றாக
நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே
நீயென்னை யன்றி யிலை.

நின்னுள்ளே அடங்குகின்ற நீர்மை

தன்னுளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந்து அடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே.

மெய்ப்பொருளை நானறிந்தவாறு யாரறிவார்?

பாலிற் கிடந்ததுவும் பண் டரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதும் ஆரறிவார் - ஞாலத்
தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளைஅப்பில்
அருபொருளை யானறிந்த வாறு?

உசாத்துணை


✅Finalised Page