சீரங்கநாயகியார் ஊசற்றிருநாமம்
சீரங்கநாயகியார் ஊசற்றிருநாமம் அஷ்டபிரபந்தத்தில் இடம்பெறும் ஊசல் என்னும் சிற்றிலக்கியம். கோனேரியப்பனைய்யங்காரால் இயற்றப்பட்டது.
ஆசிரியர்
சீரங்கநாயகியார் ஊசற்றிருநாமம் இயற்றியவர் கோனேரியப்பனையங்கார். இவர் அஷ்ட பிரபந்தம் இயற்றிய பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் பெயரர் என்பது தவிர அவரைப் பற்றிய வேறு தகவல்கள் அறியவரவில்லை.
நூல் அமைப்பு
பல அஷ்டப் பிரபந்த நூல்களில் ரெங்கநாயகர் ஊசற்றிருநாமப் பாடல்களுக்கடுத்து இறுதியாக பிள்ளைபெருமாள் ஐயங்காரின் பெயரர் கோனேரியப்பனையங்கார் பாடிய சீரங்கநாயகியாரூசல் இடம்பெறுகிறது. இவையிரண்டும் சேர்ந்து 'திருவரங்கத்து ஊசற்றிருநாமம்' என வழங்கப்படுகின்றன.
சீரங்கநாயகியார் ஊசற்றிருநாமம் 16 பாடல்களைக் கொண்டது.
முதல் பாடலில் திருமாலை வாழ்த்தி, ஆதிசேஷன் கருடாழ்வார், விஷ்வக்சேனர் ஆழ்வார்களை வாழ்த்தியபின், சூரியன், சந்திரன் இம்மண்ணுலகம் எல்லாம் வாழ வேண்டும் என வாழ்த்தி ஆழி, சங்கு, கதை, சிலை, வாள் எனும் பஞ்சாயுதங்களுக்கும் பல்லாண்டு பாடப்படுகிறது. ஊஞ்சலின் அழகையும், அதில் ஆடும் தாயாரின் அழகும் பாடப்பட்டுள்ளது. நம்மாழ்வார், நாதமுனிகள், ராமானுஜர், கூரத்தாழ்வார் போன்ற அடியார்களின் வாழ்க்கை பற்றிய குறிப்புகளுடன், உடையவர் திருவரங்கம் திருக்கோயிலை நிர்வகிக்க நியமனம் செய்த பத்துவகைக் கொத்தினர் பற்றிக் கூறப்படுகிறது. இவர்களைப் பற்றிக் கோவில் ஒழுகு நூலிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அரங்கனின் பெருமையும், பூலோக வைகுண்டமான திருவரங்கத்தின் சிறப்பும் கூறப்படுகின்றன.
பாடல் நடை
அணிகள் ஆட ஆடீர் ஊசல்
கடிமலரும் மதுகரமும் குழலில் ஆடக்
கத்தூரி யுடன்வேர்வும் முகத்தில் ஆட
நெடுவிழியும் மணித்தோடும் செவியில் ஆட
நேர்வளையும் சூடகமும் கரத்தில் ஆட
வடமணியும் கண்டிகையும் தனத்தில் ஆட
மாகலையும் மேகலையும் மருங்கில் ஆட
திடமறையும் பரிபுரமும் பதத்தில் ஆடச்
சீரங்க நாயகியார் ஆடிர் ஊசல்"
செங்கமல மாளிகையார் ஆடீர் ஊசல்
துங்கமலர்ப் பந்தரின்கீழ் பதும ராகத்
தூண்நிறுத்தி வயிரவிட்டம் தொகுத்து மீதில்
தங்கநெடுஞ் சங்கிலியிட்டு அதில்மா ணிக்கத்
தவிசுபுனைந்து அலங்கரித்த ஊசல் மீதில்
மங்கலநாண் திருவாவார் ஆடி ரூசல்
மதிலரங்கர் தமக்கினியார் ஆடி ரூசல்
செங்கமல மாளிகையார் ஆடி ரூசல்
ஆழ்வார்கள் சூழ ஆடீர் ஊசல்
வீறுபொய்கை பூதத்தார் இருபால் ஞான
விளக்கேந்த மயிலையர்கோன் வியந்து காண
மாறன்மறைத் தமிழ்மதுர கவிநின் றேத்த
வாழ்குல சேகரன்பாணன் கலியன் போற்ற
ஆறுசமயத் திருந்தோன் அருகில் வாழ்த்த
அணிபுதுவை வேதியன்பல் லாண்டு பாடத்
தேறுதொண்டர் அடிப்பொடிதார் அடியிற் சூட்ட
சீரங்க நாயகியார் ஆடிர் ஊசல்"
உசாத்துணை
- திருவரங்கத்து ஊசற்றிருநாமம்- ஆர்கைவ் வலைத்தளம்
- உலகம் வாழ ஊசல் ஆடுக- வளவ.துரையன், திண்ணை இதழ் மார்ச் 2015
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2025, 17:47:11 IST