மதங்க சூளாமணி

From Tamil Wiki
Revision as of 09:01, 20 June 2022 by Jeyamohan (talk | contribs)
மதங்க சூளாமணி

மதங்க சூளாமணி ( 1926) சுவாமி விபுலானந்தர் எழுதிய நாடக இலக்கண நூல். தமிழிலக்கியங்களான சிலப்பதிகாரம் உள்ளிட்டவற்றில் நாடகம் பற்றியும் கூத்து பற்றியும் சொல்லப்பட்ட செய்திகளை தொகுத்து, அவற்றை புரிந்துகொள்ளும் பொருட்டு ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களை ஆராயும் நூல் இது. ஐரோப்பியச் செவ்வியல் நாடக மரபின் இலக்கணங்களுடன் தமிழிலக்கியம் கூறும் செய்திகளை ஒப்பிட்டு பழந்தமிழ் நாடக இலக்கணக்கொள்கைகளை மீட்டமைக்கும் நோக்கம் கொண்டது. இந்நூலின் முதன்மைப் பேசுபொருள் ஷேக்ஸ்பியர் நாடகங்களே. .

பெயர்ப்பொருள்

மதங்கர் என்றால் கூத்தர். சூதர், மாகதர் என்னும் இரண்டு பெயர்கள் மகாபாரதம் முதல் பயின்று வருகின்றன.சூதர்கள் பாடி அலையும் பாணர்கள். மாகதர் நடித்துப் பாடுபவர்கள். மாகதர் என்னும் சொல்லுக்கு இணையான சொல் மதங்கர்.சூளாமணி என்றால் மணிமுடியில் இருக்கும் வைரம் போன்ற அரிய கல். மதங்கசூளாமணி என்னும் சொல்லுக்கு கூத்தர் தங்கள் மணிமுடியில் அணிவது என்று பொருள்.

உருவாக்கம்

சுவாமி விபுலானந்தர் மதங்க சூளாமணி நூலின் முகவுரையில் இந்நூல் எழுதப்படுவதற்கான காரணத்தை விளக்குகிறார். தமிழில் சிலப்பதிகாரத்தின் அடியார்க்குநல்லார் உரையிலும் பிற உரைகளிலும் நாடகக்கொள்கைகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை தமிழ்ப்பண்ணிசை மரபின் ஒரு பகுதியாகக் கொண்டு பயின்றாலொழிய முழுமையான பண்பாட்டுச் சித்திரத்தை அடைய முடியாது. ஆனால் அந்த இலக்கணங்களால் சுட்டப்படும் நாடகநூல்கள் பெரும்பாலும் வழக்கொழிந்தன. தமிழ்நாடகங்கள் வெளியே இருந்து வந்த நாடகமரபுகளை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கின்றன. ஆகவே நூல்களில் சொல்லப்படும் இலக்கணங்களை தொகுத்து ஒரு நூலாக்க விபுலானந்தர் உளம்கொண்டார். விபுலானந்தர் காலகட்டத்தில் தமிழின் நாடகநூல்களில் ஏறத்தாழ முழுமையானது என கருதப்படும் கூத்தநூல் வெளியாகவில்லை. ச.து.சு. யோகியார் 1962ல் அதைக் கண்டெடுத்து 1968ல் அவர் மறைவுக்குப் பின்னரே அந்நூல் வெளிவந்தது. முந்தைய கூத்தநூல் ஒன்றைப் பற்றிய உதிரிச்செய்திகளே விபுனானந்தர் காலகட்டத்தில் கிடைத்தன.

விபுலானந்தர் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் நிகழ்த்திய 24 ஆம் ஆண்டு நிறைவு கருத்தரங்குக்கு மதுரை சென்றிருந்தபோது உ.வே.சாமிநாதையர் தலைமையில் நடந்த மன்றத்தில் பழந்தமிழ் நாடகக் கொள்கைகளைப் பற்றி விரிவாக ஓர் உரையை ஆற்றினார். அந்த அரங்கில் இருந்த டி.சி.ஸ்ரீனிவாச ஐயங்கார் என்னும் தமிழார்வலர் அவ்வுரையை விரிவாக நூலாக்கி வெளியிடவேண்டுமென்றும், அதற்குப் பண உதவி செய்வதாகவும் விபுலானந்தரிடம் சொல்லி தூண்டினார். அதனால் விபுலானந்தர் இந்நூலை எழுதினார்.

இந்நூலுடன்

இந்நூல் மதுரை நான்காம் தமிழ்ச்சங்க முத்திராசாலையில் அச்சிடப்பட்டு செந்தமிழ்ப் பிரசுர வெளியீடாக 1926ல் வெளிவந்தது.