under review

வரதராச பண்டிதர்

From Tamil Wiki
Revision as of 18:32, 27 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected the links to Disambiguation page)
பண்டிதர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பண்டிதர் (பெயர் பட்டியல்)

வரதராச பண்டிதர்(வரதப்பண்டிதர்) (1656 - 1716) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், ஜோதிடர், வைத்தியர். பிள்ளையார் கதை முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

வரதராச பண்டிதர் இலங்கை யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் பரத்வாஜ குலத்தைச் சேர்ந்த அரங்கநாத ஐயருக்கு மகனாக 1656-ல் பிறந்தார். காசியிலிருந்து வந்து சுன்னாகத்தில் குடியேறியவர்கள் என சின்னத்தம்பிப் புலவர் சிவராத்திரி புராணத்திற்கு வழங்கிய சிறப்புப்பாயிரம் மூலம் அறியலாம். சைவ சமயத்தைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கியம், இலக்கணம், வேதாந்த சித்தாந்த சாஸ்திரங்கள் கற்றார். இளமையில் ஜோதிடம், வைத்தியம் கற்று புலமை உடையவர் ஆனார். குன்றுதோறாடிவருங் குமரப் பெருமானிடம் பக்தி உடையவர்.

இலக்கிய வாழ்க்கை

வரதராச பண்டிதர் ‘வரககவி’ என்று அழைக்கப்பட்டார். தனிப்பாடல்கள் பல பாடினார். வடமொழியில் கவிதைகள் பல எழுதினார். அவை கிடைக்கவில்லை. புராணம், தூது ஆகிய சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் எழுதினார்.' சிவராத்திரிபுராணம்', 'ஏகாதசிப் புராணம்', 'கிள்ளைவிடுதூது' ஆகியவை இவர் எழுதிய சிற்றிலக்கிய நூல்கள். சிவராத்திரி புராணம் சிவராத்திரி விரத மகிமையையும், ஏகாதசிப் புராணம் ஏகாதசி விரத மகிமையையும் கூறும் நூல். இந்நூல்களில் விரதத்தின் மகிமைகள், சைவ சமய மரபுகள் ஆகியவற்றை எழுதினார். சிவராத்திரி புராணத்திற்கு மயில்வாகனப்புலவர், சின்னத்தம்பி புலவர் ஆகியோர் சிறப்புப் பாயிரம் பாடினர். 'கிள்ளைவிடுதூது' கங்கேசன் துறைக்கு தன் பாகத்தில் கன்ணியவளை என்னும் தலத்தில் உள்ள குருநாத சுவாமியாகிய முருகனைப் போற்றும் நூல்.

விஷக்கடி முதலியவற்றுக்கு மருத்துவம் உரைக்கும் ‘அமுதாகரம்’ எனும் மருத்துவ நூலை எழுதினார். இதில் சித்த வைத்திய நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன. இது முந்நூற்று ஐம்பத்தியிரண்டு விருந்தங்களால் ஆன நூல். இவர் எழுதிய ஆறு நூல்களைத் தொகுத்து இலங்கை அரசின் இந்து சமய கலாச்சாரத்திணைக்களம் 'வரத பண்டிதம்' என்ற தொகுப்பு நூலை வெளியிட்டது.

மறைவு

வரதராச பண்டிதர் 1716-ல் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • சிவராத்திரிபுராணம்
  • ஏகாதசிப் புராணம்
  • பிள்ளையார் புராணம்
  • அமுதாகரம்
  • கிள்ளைவிடுதூது
  • பிள்ளையார் கதை
தொகை நூல்
  • வரத பண்டிதம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Oct-2023, 09:42:38 IST