under review

கிறிஸ்டோபர் ஆன்றணி

From Tamil Wiki
Revision as of 12:11, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்Corrected Category:சிறுகதையாசிரியர்கள் to Category:சிறுகதையாசிரியர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Christopher Antony. ‎

கிறிஸ்டோபர் ஆன்றணி

கிறிஸ்டோபர் ஆன்றணி (பிறப்பு: நவம்பர் 25, 1972) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எழுதியுள்ளார். மீனவர்களின் வாழ்வைத் தன் படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

பிறப்பு, கல்வி

கிறிஸ்டோபர் ஆன்றணி நவம்பர் 25, 1972-ல் கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளை என்ற கடற்கரை கிராமத்தில் அந்தோனி, கர்லீனாள் இணையருக்குப் பிறந்தார். மார்த்தாண்டன்துறை புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். தூத்தூர் புனித யூதா கல்லூரியில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

கணினி மென்பொருள் துறையில் பணியாற்றும் கிறிஸ்டோபர் ஆன்றணி செப்டம்பர் 11, 2002-ல் ஆரோக்கியமேரியை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு, மனைவியின் ஊரான, இரவிபுத்தன்துறை கடற்கரை கிராமத்திற்கு இடம்பெயர்ந்தார். பிள்ளைகள் ஃபெல்டன் கிறிஸ்டோபர், ரொனால்ட் கிறிஸ்டோபர், ரையன் கிறிஸ்டோபர், ஆரோன் கிறிஸ்டோபர். தற்போது அமெரிக்காவின் மிஷிகன் மாகாணத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

கிறிஸ்டோபர் ஆன்றணி 2010-ம் வருடம் ஜெயமோகனின் சொல்புதிது இலக்கிய குழுமத்தில் இணைந்து இலக்கிய எழுத்துப்பயிற்சி பெற்றார். அவரது முதல் சிறுகதை ‘கடலாழம்’ 2013-ல் ஜெயமோகன் தளத்தில் வெளியானது. மீனவர்களான முக்குவர் என்னும் இனக்குழுவின் வரலாற்றாய்வில் ஈடுபட்டுள்ளார். முக்குவர் வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு 2015-ல் 'துறைவன்' நாவல் எழுதினார். மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தற்போது தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறார்.

இலக்கிய இடம்

"கடல் பற்றி தமிழில் ஏராளமான கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் கடற்புரத்து வாழ்க்கையைப் பற்றிய சிறுகதைகளும் நாவல்களும் மிகக்குறைவு. தோப்பில் முகமது மீரான், ஜோ டி குரூஸ், வறீதையா கான்ஸ்தண்டீன் வரிசையில் குமரிமாவட்ட மீனவர்களின் வாழ்க்கை குறித்துத் துறைவன் என்ற அற்புதமான நாவலை எழுதியிருக்கிறார் கிறிஸ்டோபர் ஆன்றணி" என எஸ். ராமகிருஷ்ணன் மதிப்பிடுகிறார்.

விருது

  • 2016-ல் துறைவன் நாவலுக்காக சுஜாதா விருது பெற்றார்.

நூல்கள்

நாவல்
  • துறைவன் (முக்கடல் பதிப்பகம்)
கட்டுரை
  • இனயம் துறைமுகம் (எதிர் வெளியீடு)
  • ஒக்கி புயலும் நோக்கா செயலும் (இணை ஆசிரியர், சேலாளி பதிப்பகம்)
  • கடலுக்கு தவமிருக்கும் சிறைமீன்கள் (சேலாளி பதிப்பகம்)
  • மீன்வள மசோதா 2021 (எதிர் வெளியீடு)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Feb-2023, 19:05:49 IST