செம்பியன் செல்வன்
செம்பியன் செல்வன் (இராஜகோபால்) (ஜனவரி 1, 1943 - மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர், இதழாளர், கல்வியாளர். சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் எழுதினார். விவேகி, அமிர்த கங்கை போன்ற இதழ்களின் ஆசிரியராக இருந்தார்.
பிறப்பு, கல்வி
செம்பியன் செல்வன் யாழ்ப்பாணத்திலுள்ள தின்னவேலியில் ஆறுமுகம், தமர்தாம்பிகை இணையருக்கு ஜனவரி 1, 1943 அன்று பிறந்தார். தமையன் கணேசமுத்து. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்துவிடம் வளர்ந்தார். நாகமுத்து அம்மையார் தமிழறிவு பெற்றவர்.
செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம் இந்து தமிழ் ஆரம்ப பாடசாலையில் பள்ளிக்கல்வி கற்றார். யாழ் இந்துக் கல்லூரியில் பயின்றபோது செங்கை ஆழியான், முனியப்பதாசன் போன்றோர் இவரது தோழர்களாக இருந்தனர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் புவியியலில் சிறப்புப்பட்டம் பெற்றார்.
செம்பியன் செல்வன் யாழ் இந்துவில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே எழுதத் தொடங்கினார் அண்ணன் கணேச பிள்ளை 1952-ல் தன் நெருங்கிய நண்பருடன் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையின் சிறுவர் பகுதியில் செம்பியன் தன்னுடைய ஆக்கங்களை எழுதினார் இதில் 'சிஐடி சிங்காரம்' என்று அவர் எழுதிய சிறிய நாவலும் அடங்கும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது 'கலைஞானம்' என்று இதழின் ஆசிரியராக விளங்கினார்.
தனி வாழ்க்கை
செம்பியன் செல்வன் கல்வி நிலையங்களில் ஆசிரியராக, அதிபராக, கல்விப் பணிப்பாளராகப் பணிபுரிந்தார். திருக்கோணமலை சென் ஜோசப் கல்லூரியிலும் செட்டிகுளம் மகா வித்தியாலயத்திலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இலங்கை அதிபர் சேவையில் முதலாம் தரத்தில் தேர்ச்சி அடைந்து யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரியின் அதிபராகவும் யாழ்ப்பாணக் கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
செம்பியன் செல்வன் மணமானவர். மனைவி புவனேஸ்வரி. மகன் இராகுலன்.
இலக்கிய வாழ்க்கை
செம்பியன் செல்வன் நாவல், சிறுகதை, நாடகம், குறுங்கதைகள் எழுதினார். நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதினார். அவரது சிறுகதைகள் மல்லிகை போன்ற இதழ்களில் வெளிவந்தன. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மறுமலர்ச்சி இயக்கத்தால் உருவாக்கப்பட்டவர்களில் செம்பியன் முக்கியமானவர். 'ராஜகோ' என்ற புனைப்பெயரில் பல கவிதைகளை எழுதினார். இன்னும் பல புனைப்பெயர்களில் கட்டுரைகள் குறுங்கதைகள் விமர்சனங்கள் எழுதினார். பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் 'புதிய பரம்பரையின் துருவ நட்சத்திரம்', 'பாதி மலர்' ஆகிய சிறுகதைகள் சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெற்றன.
செம்பியன் செல்வனின் 'நெருப்பு மல்லிகை' என்ற நாவல் வீரகேசரியின் 73-வது பிரசுரமாக நவம்பர் 1981 -ல் வெளிவந்தது வீரகேசரி பிரதேச நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. 'விடியலை தேடும் வெண்புறாக்கள் 'ஈழமுரசில் தொடராக வெளிவந்தது. 'நிழல்கள்' 1963-ல் சுதந்திரன் இதழில் செங்கை ஆழியானும் செம்பியனும் மாறி மாறி எழுதிய தொடர். இது யாழ்ப்பாண சமூகத்தின் முதிரா இளைஞர்களின் மனப்போராட்டங்களை சித்தரிக்கிறது. 'நேரங்கள்', 'கர்ப்ப கிரகம்' ஆகிய நாவல்களையும் எழுதினார். குறுங்கதைகளும் எழுதினார். 'குறுங்கதை நூறு' டிசம்பர் 1986-ல் வெளிவந்தது.
'சர்ப்பவியூகம்' சிறுகதைத் தொகுப்பு போராட்டச் சூழலின் வாழ்வியல் நெருக்கடிகளையும், ராணுவத்தின் அடக்குமுறைகளையும், போராளிகளின் தியாகங்களையும், கருப்பொருளாகக் கொண்டது.
நாடகம்
கலைக்கழக நாடக எழுத்துப் போட்டியில் 1965 முதல் தொடர்ந்து நான்கு வருடங்கள் முதல் பரிசை செம்பியனின் நாடகங்கள் பெற்றன. 'இந்திரஜித்' , ' சின்னமீன்கள்' , 'எரியும் பிரச்சினைகள்', 'இருளில் வாழும் பெருமுச்சு'. ஈழநாடு தனது பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்திய ஓரங்க நாடகப்போட்டியிலும் செம்பியன் செல்வனின் 'விடிய இன்னும் நேரமிருக்கு நாடகம் முதல்பரிசைப் பெற்றது. 'மூன்று முழு நிலவுகள்' என்ற முழு நேர நாடகம் புத்தரது வாழ்க்கையோடு அவரது கால அரசியல், பொருளாதார சமூக நிலைகளையும் பேசுகிறது.
இதழியல்
செம்பியன் செல்வன் விவேகி, புவியியல், நுண்ணறிவு ஆகிய இதழ்களின் இணை ஆசிரியராகவும், அமிர்த கங்கை, கலைஞானம் ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் பொறுப்பாற்றினார்.
திரைத்துறை
செங்கை ஆழியான் எழுதிய 'வாடைக் காற்று' திரைப்படமான பொழுது, அதற்கான திரைக்கதை, வசனம் எழுதினார்
பொறுப்புகள்
- யாழ். இலக்கிய வட்டத்தின் தாபகச் செயலாளர்
- இலங்கை இலக்கியப் பேரவையின் செயலாளர்
- இலங்கைக் கலாசாரப் பேரவையின் நாடகப் பிரிவுக்கான செயலாளர்
- இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவர்
- யாழ் கோட்டக் கல்விப் பணிப்பாளர்
விருதுகள், பரிசுகள்
- 1962-கலைச்செல்வி சிறுகதை போட்டியில் முதல் பரிசு (இதயக்குமுறல்)\
- 1963- இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கை சிறுகதை போட்டி மூன்றாம் பரிசு (உணர்ச்சிக்கு அப்பால்)
- 1965- இலங்கை வானொலி நடத்திய சிறுகதை வார போட்டி பரிசு (நிலம் யாருக்காக காலடியில் கிடக்கிறது )
- 1966-வீரகேசரி நடத்திய அகில இலங்கை சிறுகதை போட்டியில் மூன்றாம் பரிசு(உப்பங்கழி)
- 1968- ஈழநாடு பத்தாவது ஆண்டு விழா மலர் முதல் பரிசு(பூவும் கனியும்)
- 2003 - இலங்கை சாஹித்யவிருது ('சர்ப்ப வியூஹம்')
- 1965-68 கலைக்கழகம் நடத்திய நாடகப்போட்டியில் தொடர்ந்து 4 வருடங்கள் முதல் பரிசு பெற்றவர்.
- 2003-ல் அவர் தனது மணிவிழாவை கொண்டாடிய போது யாழ் கத்தோலிக்க கலை இலக்கிய வட்டம் 'இலக்கிய வர்த்தக வித்தகர்' என்னும் பட்டத்தை கொடுத்தது
- 2004- நமது தமிழ்நாடு கனக செந்திநாதன் கதா விருது பெற்ற கதை (மாயாவதியின் கனவு)
இலக்கிய இடம்
செம்பியன் செல்வன் ஈழத்து இலக்கியப் பரப்பில் செழுமையான படைப்புகள் வர வேண்டும் என்ற சிந்தனையும், ஈழத் தமிழரது சுய நிர்ணயப் போராட்டத்தில் சமரசமில்லாத போக்கும் கொண்டு இலக்கிய உலகில் செயல்பட்டவர். ஈழத்தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமையாகவும், இதழாளராகவும் அறியப்படுகிறார்.
நூல்கள்
- சர்ப்பவியூகம் - சிறுகதைத்தொகுதி
- அமைதியின் இறகுகள் (சிறுகதைகள்)
- குறுங்கதைகள் நூறு (குறுங்கதைகள்)
- கானகத்தின் கானம் - நாவல்
- நெருப்பு மல்லிகை (நாவல்)
- விடியலைத் தேடும் வெண்புறாக்கள் (நாவல்)
- மூன்று முழு நிலவுகள் (நாடகம்)
- ஈழத்துச் சிறுகதை மணிகள் (விமர்சனம்)
- நாணலின் கீதை (தத்துவம்)
உசாத்துணை
- செம்பியன் செல்வன், நூலகம் வலைத்தளம்
- நூலகம்:செம்பியன் செல்வன் படைப்புகள்
- செம்பியன் செல்வன் சிறுகதைகள், சிறுகதைகள்.காம்
✅Finalised Page